Tuesday, April 21, 2015

ஏக்கம் ....!!



மூன்றுமுடிச்சு கழுத்தில்போட்டு 
மூவைந்து வருடமாச்சு 
முத்தென்னுள் முகிழ்க்கவில்லை 
மூடர்வார்த்தை தைத்திடுதே ! 

மூடுபனி என்வாழ்வை 
மூடிவைத்த மாயமென்ன 
மூப்புவந்து சேருமுன்னே 
மூரலென்னுள் மலராதோ ? 

வளைஅடுக்க வழியில்லை 
வளைகாப்பு நடக்கவில்லை 
பூச்சூடிப் பார்க்கவில்லை 
பூயென்னுள் பூக்கவில்லை ! 

பனிக்குடம் உடைந்ததில்லை 
பால்வடிந்து மணந்ததில்லை 
பழிசுமந்து கிடந்திடவே 
பாவமென்ன செய்தேனோ ? 

சொத்துசுகம் இருந்தென்ன 
சொர்க்கமே பிள்ளையன்றோ 
தாய்மைவரம் வேண்டுகின்றேன் 
தாயாகத் தவிக்கின்றேன் ! 

மார்பணைத்துப் பால்புகட்ட 
மங்கைமனம் துடிக்கிறதே 
மறலிவந்து கூப்பிடுமுன் 
மழலைமடி நிரப்பாதோ ? 

மலடியென்ற பட்டத்துடன் 
மயானம்போக மனமில்லை 
மாதம்பத்து நான்சுமக்க 
மடிப்பிச்சை கேட்கின்றேன் !!

No comments:

Post a Comment