Friday, April 17, 2015

வாராயோ ....????



கவலை தீர்க்க கனவில் வந்து 
கண்ணீர் துடைக்கும் முல்லையே ...! 
நனவில் வந்து ஏக்கம் தவிர்க்க 
கருவறை நிறைக்க விரைவாயோ ...? 

களர்நிலம் போலும் என்றன் வயிற்றில் 
களங்கம் போக்கக் கருவாகி 
மருதம் விளைந்த கதிராய் என்றன் 
மருள் நீக்க வாராயோ ......? 

குழந்தை இல்லா நிலையும் கொடுமை 
குறைதனைக் குத்திக் காட்டும் 
குடும்ப உறவின் முகத்திரை கிழிக்க 
குறிஞ்சி மலராய் பூப்பாயோ ......? 

நெருப்பு வார்த்தைகள் அள்ளி வீச 
நெஞ்சம் கொதித்து தகிக்கும் 
நெய்தல் நீராய் வெம்மை தணித்து 
சேயாய் குளிர்விக்க உதிப்பாயோ .....? 

பாதத்தில் குத்தும் நெருஞ்சி முள்ளாய் 
பாவை என்னை வதைக்கும் 
பாலை நெஞ்சில் பாலூற நீயும் 
பாலகனாய் வந்து பிறப்பாயோ ......?

No comments:

Post a Comment