Tuesday, April 19, 2016

சித்திரை மகளே வாராய் ...!!!

பணிதனை இனிதாய் முடித்துப் 
***பங்குனி விடையும் பெறவே 
அணிசெய அழகாய்க் கிளம்பி 
***அடுத்தவள் வந்து விட்டாள் ! 
பிணியிலா வாழ்வை நல்க 
***பிரியமாய் ஆண்டின் முதலாய் 
திணிவுடன் பொங்கி எழுந்து 
***சித்திரை மகளே வாராய் ! 

இனமதக் கலவ ரங்கள் 
***இனிநட வாமல் காக்க 
கனவிலும் கொலைகள் கொள்ளை 
***கள்வெறி ஏது மின்றி 
நனவினில் புவியும் மலர்ந்து 
***நன்மைகள் கூடிப் பெருக 
தினந்தினம் சாந்தி நிலவ 
***சித்திரை மகளே வாராய் ! 

கழனியில் பயிர்கள் விளைய 
***கவலைகள் முற்றும் விலக 
உழவரும் வாழ்வில் உயர 
***உலகமே பசுமை யாக 
பழகிடும் மக்கள் எல்லாம் 
***பைந்தமிழ் மொழியில் பேச 
செழிப்புடன் நாட்டை உயர்த்த 
***சித்திரை மகளே வாராய் ! 

புகழெனும் மாய போதை 
***புதைந்திடச் செய்யா வண்ணம் 
அகத்தினில் அன்பு பூத்து 
***ஆணவம் மமதை நீங்க 
சுகமுற வளங்கள் பெற்று 
***சுமுகமாய் உறவு நிலைக்க 
செகத்தினில் அமைதி நிறைக்க 
***சித்திரை மகளே வாராய் ! 

இயற்கையும் சீறி டாமல் 
***இனிமையாய் நாட்கள் நகர 
சுயநல மின்றி மற்றோர் 
***துயர்களைத் துடைக்க உதவ 
வியப்புறும் படியாய் போற்றும் 
***விந்தைகள் நாளும் புரிந்து 
செயலினை நடத்தி வைக்க 
***சித்திரை மகளே வருக ....!!!

சித்தரைப் பெண்ணே !


மாதங்களின் தலைமகளே 
மார்கழியாள் உடன்பிறப்பே 
மாவிளக்கு ஏற்றிவைத்து 
மாலைசூட்டி வரவேற்போம் 
மாலவனின் அருளாலே 
மாதவத்தின் பயனாலே 
மாணிக்க வீணையேந்தி 
மதுரகானம் மீட்டிடவே 
மாண்புடனே வந்திடுவாய் 
மகிமைபல புரிந்திடுவாய் 
மாசுகளை மாய்த்திடுவாய் 
மாறுபாடு அகற்றிடுவாய் ....!!! 

நான் முதல்வரானால் ....!!!

முதல்வராக நானானால் முதல்பணியாய் முன்னின்று 
.*****முழுவீச்சில் மதுவிலக்கை அமல்படுத்த முனைந்திடுவேன்! 
பதவிக்கு மதிப்பளித்து பகுத்தறிந்து திட்டமிட்டு 
****பசிப்பிணியை நாட்டைவிட்டு விரட்டிடவே பாடெடுப்பேன் ! 

விவசாயம் பெருக்கிடவே விரிவான நலத்திட்டம் 
****விரைவாகச் செயல்படுத்தி விவசாயி நலம்காப்பேன் ! 
அவதியிலே வாடுகின்ற அகதியர்தம் நிலைமாற 
****அவசரமாய் ஆணையிட்டு அமைதியுடன் வாழவைப்பேன் ! 

விலையில்லா மருத்துவத்தை ஏழையர்க்கு வழங்கிடவே 
***மேன்மையான வசதிகளை மாநிலத்தில் புதுப்பிப்பேன் ! 
வலைதளத்தில் பணியிடத்தில் வன்கொடுமை நேராமல் 
****வஞ்சியரைக் காப்பதற்கு சட்டத்தைச் சீர்செய்வேன் ! 

கலவரத்தைத் தூண்டிவிடும் சாதிமத வெறியர்களை 
****கையிருப்பைப் பிடுங்கிவிட்டு நாட்டைவிட்டே கடத்திடுவேன் ! 
உலகமொழி அத்தனையும் ஆவலுடன் பயின்றாலும் 
****உயிர்மொழியாம் தமிழ்மொழியில் கல்விபெறச் செய்திடுவேன் ! 

உழைத்துவாழ ஏதுவாக வேலைவாய்ப்பை அதிகரித்து 
****உறுதியான உள்ளத்தால் குடிமக்கள் உயரவைப்பேன் ! 
பிழையென்று தெரிந்திருந்தும் கையூட்டு வாங்குவோரை 
****பிடித்தவுடன் அக்கணமே பணிநீக்கம் செய்திடுவேன் ! 

பொருணைமுதல் கங்கைவரை நதிநீரை இணைத்திடவே 
****பொறுப்புடனே செயலாற்றி மண்ணிற்குப் புகழ்சேர்ப்பேன் ! 
கருணைபொங்கும் மனத்தினளாய் கண்போலக் கடமைகளைக் 
****கண்ணியமாய் பார்மெச்ச இறையருளால் செய்திடுவேன் !

ஒயிற்கும்மி ....!!!!



சின்னச்சின் னப்பதம் மெல்லவைத் துக்கண்ணன் 
சிங்கார மாய்நடை போட்டுவந் தான் 
சிரமீதினில் மயில்பீலியும் திருமேனியில் மணியாரமும் 
செவ்வாயில் வெண்ணையும் உண்டுவந் தான்! 

புல்லாங்கு ழல்கையில் வைத்திருந் தான்மாயப் 
பூங்காற்றை ஊதியே கட்டிப்போட் டான் 
புகழாரமும் மலர்மாலையும் தினம்சூடிட வருவானுளம் 
பூரிப்பில் கொஞ்சிம கிழ்ந்திடு வான் ! 

பின்னல்ச டைதனைப் பற்றியி ழுத்திட்டுப் 
பெண்டிர்ம னந்தனைக் கொய்துவிட் டான் 
பிருந்தாவனந் தனில்கோபியர் இவன்லீலையில் அலைபாய்ந்திடப் 
பெற்றது பேறென எண்ணவைத் தான் ! 

கள்ளச்சி ரிப்புடன் செய்யுங்கு றும்புகள் 
கண்கள்ர சித்திட ஆனந்த மே 
கனிவாய்நிதம் புகழ்பாடிட மதுராபுரி களித்தாடிடக் 
கற்கண்டாய் நெஞ்சமும் தித்திக்கு மே !

இளவேனிலே வா ...!!!



இன்முகங்காட்டி இன்பங்கூட்ட 
இசைந்தாடிவா இளவேனிலே ! 

அன்பெனும்பூமி அழகாய்ப்பூக்க 
அசைத்தாடிவா இளவேனிலே ! 

கன்னித்தமிழே கன்னல்மொழியாம் 
களித்தாடிவா இளவேனிலே ! 

சின்னஞ்சிறிய சிறகினைவிரித்தே 
சிரித்தாடிவா இளவேனிலே ! 

வண்ணக்கோலம் வசந்தகாலமாய் 
வளைந்தாடிவா இளவேனிலே ! 

எண்ணப்பூக்கள் எழுத்தில்சேர 
எழுந்தாடிவா இளவேனிலே ! 

தண்டமிழ்ப்பாக்கள் தரணியில்பூக்க 
தழைத்தாடிவா இளவேனிலே ! 

புண்பட்டநெஞ்சம் புத்துணர்வுற 
புரிந்தாடிவா இளவேனிலே ! 

பெண்ணெனும்சக்தி பெருமைபெற்றிட 
பிழைத்தாடிவா இளவேனிலே ! 

நண்பர்வட்டம் நலம்வாழ்ந்திட 
நகைத்தாடிவா இளவேனிலே !

கூடிக் கும்மாளம் போடுவோமே ....!!!


பள்ளி விடுமுறை விட்டாச்சு 
துள்ளி விளையாட வாருங்களேன் 
வெள்ளி முளைத்திடும் வேளைவரை 
உள்ளம் களித்திட ஆடிடுவோம் ! 

நித்தம் படித்ததால் சோர்வுநீங்க 
மொத்த நட்புகளும் ஒன்றிணைந்து 
சித்தங் குளிர்ந்திடச் சோலையிலே 
புத்தும் புதுக்கதைப் பேசிடுவோம் ! 

வெயிலும் கொளுத்திடக் கவலையின்றி 
மயில்போல் நடனமும் ஆடிடுவோம் 
குயிலாய்க் கூக்குரல் எழுப்பிடுவோம் 
வயிற்றுப் பசிதனை மறந்திடுவோம் ! 

தேடித் தண்ணீரைத் தெளித்துவிட்டுக் 
கோடி இன்பமும் பெற்றிடுவோம் 
பாடித் திரிந்திடும் பறவைகளாய் 
கூடிக் கும்மாளம் போடுவோமே ....!!!

கவிபோன்ற விழியாளே....!!!



கவிபோன்ற விழியாளே கற்கண்டு மொழியாளே
புவிவெல்லும் பார்வையினால் புன்னகையும் பூப்பவளே
தவிக்கின்ற நெஞ்சத்தின் தன்மையினை அறியாயோ 
செவிசாய்ப்பாய்ச் சற்றேனும் தெரிவிப்பாய் சம்மதத்தை !

அரும்பானக் காதலதும் அழகாக மலர்ந்திடுமோ 
மருதாணி யிட்டக்கை மன்னவனைத் தீண்டிடுமோ 
வருவாயே நளினமுடன் வளர்பிறையாய் வாழ்வினிலே 
திருநாளில் உன்கழுத்தில் திருநாணும் பூட்டிடுவேன்  !

அலங்கார நகைநட்டு அன்பளிப்பாய் நான்விரும்பேன்
கலங்காமல் ஆயுளுக்கும் காத்திடுவேன் கண்போலே 
நலம்வாழ வேண்டுகிறேன் நாயகியே வரந்தருவாய்  
நிலம்போலப் பொறுமையுடன் நித்தமுனைத் தாங்கிடுவேன் ...!!!

Thursday, April 7, 2016

ஒத்தையிலே நிற்கிறியே....!!!




ஒத்தையிலே நிற்கிறியே ஒளிவிளக்காய் மின்னுறியே
அத்தமக கற்பகமே அடிமனசை வருடுறியே
உத்தமியே உள்ளத்திலே உன்நினைப்பு கொல்லுதடி
முத்தழகே கிட்டவந்து முத்தமிடச் சொல்லுதடி !

அன்னநடை கொஞ்சுதடி அச்சுவெல்லப் பேச்சழகி
சின்னநடை கெஞ்சுதடி சிக்கனமா ஆடுதடி
பின்னலிட்ட கூந்தலிலே பிச்சிப்பூ மணக்குதடி
புன்னகையில் சொக்கிவிட்டேன் பொன்மகளே பூத்திடடி !
கால்கொலுசு மீட்டுமொலி காதலிலே கட்டிடுதே
வேல்விழியால் பார்க்கையிலே வேதனையும் ஓடிடுதே
பால்முகமும் வெண்ணிலவாய் பாங்காக ஒளிர்கிறதே
நூல்பிடித்து வரைந்தாற்போல் நுதலழகாய்த் தெரிகிறதே !
மருதாணி இட்டக்கை மன்னனெனை வளைத்திடுமோ
கருவேலங் காட்டுக்குள் கதைபேசிக் களித்திடவோ
குருத்தோலைப் பந்தலிட்டு குந்தவச்ச மாமனிடம்
நெருப்பான வார்த்தைகளை நெஞ்சிலள்ளிக் கொட்டலாமோ ?
வாசலிலே கோலமிட்டு வரவேற்பு தந்திடடி
மீசவச்ச அத்தானை வேகமாக கட்டிடடி
பேசவரும் போதினிலே பெண்ணழகே அச்சமேனோ
பாசமுடன் பையவந்து பனிமலரே பாட்டெழுது !
வாக்களிக்கும் வயசாச்சு வாக்கப்பட பயமெதற்கு
ஏக்கமுடன் காத்திருக்கேன் ஏமாற்றம் தரலாமோ
மூக்குத்தி போட்டவளே முடிவோட நானிருக்கேன்
ஊக்கமுடன் வாடிபுள்ள ஊரறிய தாலிகட்ட ....!!!