Friday, April 3, 2015

சரித்திரம் நீயாவாய் ....!!!

புத்திபோன போக்கிலே 
புதைந்துநடை போடாதே ! 
புரியாத புதிராய்நீ 
புகாருக் கிடமாகாதே ....! 

போதைக்கு அடிமையாகி 
பேயாட்டம் ஆடாதே ! 
போலியான சுகமது 
போதுமென விட்டுவிடு ...! 

கூடாநட்புடன் கூட்டுசேர்ந்து 
கூசாமல் கூத்தடிக்காதே ! 
கூனிக்குறுகி போனபின் 
கூம்பிவிடும் வாழ்க்கையே ! 

நிலையில்லாப் பிறவியில் 
நீசத்தனம் செய்யாதே ! 
நிம்மதியின்றி திரிந்து 
நிர்மூலன் ஆகிடுவாய் ! 

இழிவான செயல்களால் 
ஈனத்தனம் புரியாதே ! 
இலட்சியத்தோடு வாழ்வதே 
இலட்சணமென அறிந்துகொள் ! 

தீயசக்திக்கு என்றென்றும் 
தீவிரமாய்த் துணைபோகாதே ! 
தீநாக்காய் பொசுக்கிடும் 
தீய்ந்துவிடும் வாழ்க்கையே ! 

பெற்றோரே முதல் தெய்வம் 
பேணிவாழப் பழகிக்கொள் ! 
முதியோரை அன்புடனே 
மதித்துப்போற்ற கற்றுக்கொள் ! 

கட்டுக்கடங்கா மனதிற்கு 
கடிவாளம் போட்டுக்கொள் ! 
தட்டுத் தடுமாறி போகாமல் 
தன்னைத் தானே திருத்திக்கொள் ! 

சாதிக்கும் வேளையிலே 
சரிவு வந்தால் சாயாதே ! 
சாகும்வரை போராடு 
சரித்திரம் நீயாவாய் .....!!!

No comments:

Post a Comment