Monday, April 13, 2015

தமிழாய் ....தமிழுக்காய் ....!!



உதிரங் கலந்து உணர்வில் நிறைந்து
அதிசய மூட்டும் அழகு ! - பதியும்
மனதில் எளிதாய் மகத்துவ மிக்க 
எனதருமைத் தாய்மொழி யே !
இனிமை பயக்கும் இளமை ததும்பும்
தனித்து இயங்கிடும் தாயாய் - நனிசிறந்
தோங்கும் புவிதனில் தீந்தமிழ்ச் செம்மொழி
பாங்காய் பவனிவரும் பார் .
முத்தமிழில் முக்குளிக்க மூப்பும் மறந்துவிடும்
சித்தந் தெளிவாகும் சீலமுடன் - உத்தமமாய்
ஞாலத்தில் மிக்க ஞயமாய் தமிழ்மொழியே
காலத்தை வெல்லுங் கனிந்து .
எந்நாடு சென்றாலும் எம்மொழியில் பேசிநிதம்
சிந்தையில் வைத்தே சிறப்பிப்பேன் - சொந்தமெனக்
கொள்வேன் உரிமையாய்க் கொண்டாடி யின்புறுவேன்
தெள்ளுதமிழ் செம்மொழித் தேன் .

No comments:

Post a Comment