Friday, May 8, 2020

மதுக்கடய தெறந்துவச்சி...!!!

மதுக்கடய தெறந்துவச்சி
மக்களெலாம் கூடவச்சி
மரணபயம் காட்டுதடா நம்மரசு - அட
வழிவிடாது சனம்திருந்த இவ்வரசு ( மதுக்கடய)
தொத்துசுத்தும் வேளையில
தொடங்கலாமா விற்பனைய
தொல்லைவந்து சேர்ந்திடுமே தெரியாதோ - அட
தொந்தரவு நாட்டுக்குத்தான் புரியாதோ? (மதுக்கடய)
காவலரு தொணையோட
கல்லாநிரப்ப போறாய்ங்க
கால்வயிறு கூடயினி நிரம்புமா ? - ஏழக்
கண்ணீரில் கொரோனாவும் கரையுமா ?? ( மதுக்கடய)
சியாமளா ராஜசேகர்

நீடு வாழ வைப்பாயா ??



Image may contain: 1 person

பாசக் கயிற்றை வீசி வீசிப்
பாரில் உயிர்கள் பறிக்கின்றாய் !
ஓசை யின்றி உலகைச் சுருட்ட
ஓட்டி (OT) நாளும் பார்க்கின்றாய்!
நாசம் செய்ய நினைத்த பின்னும்
நமனே! உன்னை கேட்கின்றேன் !
நேசக் கரத்தை நீட்டி எம்மை
நீடு வாழ வைப்பாயா ??
கணக்குப் பார்க்கும் சித்ர குப்தன்
கைகள் வலித்துக் களைத்தானே !
பிணக்கு வந்து சேரும் முன்பு
பிரிவைச் சற்றே எண்ணிப்பார் !
இணக்கத் தோடு கொரோனா தொற்றை
இன்றே ஒழித்துக் கட்டிவிடு!
சுணக்க மின்றிச் செய்தா லுன்னைச்
சுற்றஞ் சூழ வணங்கிடுவோம்!
சியாமளா ராஜசேகர்

செவிலியரின் நிலையிதுதான் !!

Image may contain: 1 person, indoor

படபடப்பா யிருந்தவரைச் சோதித்துப் பார்த்தேன்
பரிவோடு பேசியவர் பயம்தெளிய வைத்தேன்!
கடமைக்குச் செய்யாமல் தந்தையைப்போல் எண்ணிக்
கனிவோடு கவனித்துப் பணிவிடையும் செய்தேன் !
தொடர்சிகிச்சை யளித்துவந்தும் பயனேது மில்லை
சுயநினைவு திரும்பாமல் திரும்பாவூர் சென்றார் !
திடமான என்மனமு முடைந்துவிட்ட தின்று
செவிலியரின் நிலையிதுதான் அறியீரோ சொல்வீர்!!
சியாமளா ராஜசேகர்

விடை சொல்வாய் கூற்றுவனே ...!!!

விடுதலைக்கு வழியின்றி
வீட்டுக்குள் சிறைபட்டோம்!
கடுகளவும் கருணையிலாக்
கரோனாவால் துன்புற்றோம்!
தடுப்பதற்கு முடியாமல்
தவிப்புடன்நாள் கழிக்கின்றோம் !
அடுக்கடுக்காய் உயிர்ப்பலியால்
அனுதினமும் துடிக்கின்றோம் !!
கொடுமரக்கன் புவிதனிலே
கொலைவெறியோ டுழல்கின்றான் !
தொடுவாரைத் தான்பற்றித்
தொடர்வேட்டை நடத்துகின்றான்!
நடுங்கவைக்கும் உயிர்பயத்தை
நட்டுவிட்டுச் சுழல்கின்றான் !
படுகுழிக்குள் தள்ளிவிட்டுப்
பாவியவன் நகைக்கின்றான் !!
முடுக்கிவிட்ட தாராரோ
முடிவிதற்கு வாராதோ ?
எடுத்ததெல்லாம் போதாதோ
இடர்ப்பாடு தீராதோ ?
விடுவிக்க யார்வருவார்
மேதினியைக் காப்பாற்ற?
விடக்கிருமி சாகாதோ
விடைசொல்வாய் கூற்றுவனே!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!


Image may contain: people standing, sky, outdoor and nature
தந்தனன தானதன
தந்தனன தானதன
தந்தனன தானதன தனதானா (அரையடிக்கு)
மஞ்சள்வெயில் மாலைதனில்
வண்டுலவு சோலைதனில்
வந்தமலர் வாசமது நிறையாதோ
மஞ்சுதவழ் வானழகை
யுண்டமன மாவலொடு
வஞ்சிமக ளோடிணைய விழையாதோ
நெஞ்சுருகி யோடிவரு
மின்பமது கூடவரும்
நின்றுவிடு மோகனவு மெனவாடி
நெம்பியெழு மாசையொடு
பொங்கிவரு காதலோடு
நிண்டிவிளை யாடவவ ளருகோடே
தஞ்சமென நானடைய
மஞ்சமென மேனியொடு
தங்கமக ளோடுறவி லிணைவேனே
தந்தனன தானதன
வென்று நடமாடி வரு
தண்டலையி லேமயிலி னழகோடே
அஞ்சலென வேயமுது
தந்தவளு மூடலுற
அன்புமிக வேதழுவி யணைவேனே
அந்திபகல் நாளுருள
என்றும்பிரி யாதபடி
அன்றிலென வாழவரம் பெறுவேனோ ?
சியாமளா ராஜசேகர்

மீனாளின் மணக்கோலம் ...!!!

No photo description available.

சொக்கனுடன் மீனாளின் மணக்கோலம் கண்டேன்
துன்பமெல்லாம் தீர்ந்தாற்போல் தன்னிறைவு கொண்டேன் !
திக்கெட்டும் நலம்சூழ நான்வேண்டு கின்றேன்
தித்திக்கும் செந்தமிழில் புகழ்பாடு கின்றேன் !
முக்கனியின் சாறெடுத்துத் தேன்கலந்து தந்தேன்
முப்பொழுதும் உன்னிழலில் இடங்கேட்டு நின்றேன்!
நெக்குருகி நீர்மல்கப் பதம்பற்றிக் கொண்டேன்
நெஞ்சத்தின் குறைகளைய வாராயென் தாயே!!
சியாமளா ராஜசேகர்

இலாவணி ...!!!

Image may contain: people standing and outdoor

இலாவணி...!!!
******************
#அவன்
ஊரடங்கிக் கிடக்கையிலே ஆருயிரே நம்மிருவர்
உள்ளங்கள் அடங்கவில்லை ஏனோ ஏனோ ?
ஊருக்குள்ளே தனித்திருந்தும் தீரவில்லை நம்மயக்கம்
ஓரிடத்தில் தனித்திருக்கத் தானோ தானோ ??
கால்கொலுசு சத்தத்திலே தோலெல்லாம் சிலிர்க்குதடி
காதலிலே தவிக்கவிட லாமா லாமா ?
பால்வண்ண முகத்தழகைச் சேலாடும் விழியழகைப்
பார்த்துரொம்ப நாளாச்சு வாம்மா வாம்மா !!
சோலையிலே யாருமில்லே சாலையிலே வண்டியில்லே
சோடியாகப் பேசலாமா சொல்லு சொல்லு !
மாலையிலே கதிரவனும் நீலவானில் சிவந்திருச்சி
மரிக்கொழுந்தே போகலாமோ நில்லு நில்லு !!
அத்தமவன் உனைப்பார்க்கப் பித்தாத்தான் கிடக்குறனே
ஆனாலிந்த வேளைசரி யில்ல யில்ல !
நித்தமுந்தன் நெனப்புவந்து கொத்திக்கொத்தித் தின்னுதய்யா
நேருக்குநேர் பார்ப்பதெல்லாம் தொல்ல தொல்ல !!
நானுநீயும் தனிச்சிருந்தா ட்ரோனுசுத்திப் படம்பிடிக்கும்
நம்மமானம் காத்திலோடிப் போகும் போகும்!
வானுமண்ணும் சாட்சியாக நானிருப்பேன் ஒனக்காக
மண்ணச்சுற்றும் நோய்த்தொற்றும் சாகும் சாகும் !!
இந்தநிலை மாறிவிடும் தொந்தரவு தீர்ந்துவிடும்
இன்பமெல்லாம் கூடிவரும் முறையா முறையா !
சொந்தபந்தம் எல்லோரும் வந்திருந்து நமைவாழ்த்தச்
சுந்தரனே சேர்ந்திடுவோம் சரியா சரியா ??
சியாமளா ராஜசேகர்

வஞ்சியவளேயென் வாழ்வு ...!!!

Image may contain: Ramadoss Gandhi, standing and outdoor

அன்பு மிகுதியா லள்ளி யணைத்தனள்
சின்ன விதழில் சிரிப்பை யுதிர்த்தனள்
கன்னல் மொழியில் கவிதை வரைந்தனள்
இன்ப மளித்தன ளின்று.
இன்று மழைபோ லிதயங் குளிர்ந்தனள்
சென்றதை யெண்ணிச் சிலிர்ப்பில் மகிழ்ந்தனள்
கன்னி யிவளேயென் காதலி என்றிடப்
பொன்னா யொளிர்ந்தனள் பூத்து.
பூத்த மலராய்ப் பொலிவாய் விளங்கினள்
வார்த்தை யடுக்கி வசியப் படுத்தினள்
காத்துக் கிடக்கக் கனவில் கலந்தனள்
பார்த்ததும் கொஞ்சினள் பட்டு.
பட்டுப் புடவையில் பைங்கிளி போலவள்
மட்டிலா வின்ப மழையில் நனைத்தனள்
வெட்டியே மின்ன வெகுவாய்ப் பயந்தனள்
கட்டித்தான் கொண்டனள் கண்டு.
கண்டதும் காதல் கனிந்திடப் பாடினள்
வண்ண நிலவாய் வளையவந் தாடினள்
தண்டலைத் தென்றலாய்த் தாவித் தழுவினள்
பெண்மயிலா ளாக்கினள் பித்து.
பித்துப் பிடித்தெனைப் பின்தொடரச் செய்தனள்
பத்தரை மாற்றுப் பசும்பொன் னொளியவள்
தித்திக்கச் செந்தமிழ்த் தேன்பருகத் தந்தனள்
நித்தஞ் சுவைத்ததென் நெஞ்சு .
நெஞ்ச மிளகி நிழலாய்க் குளிர்ந்தனள்
மஞ்சள் நிறத்து மதியாய்ச் சிரித்தனள்
கொஞ்சு மழகில் குழவியை யொத்தனள்
வஞ்சி யவளேயென் வாழ்வு.
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!! ( காதல் )


தன்னான தன்னானத் தனதானா
தன்னான தன்னானத் தனதானா
பொன்மேகம் பன்னீரைப் பொழியாதோ
பொன்னான மண்மீதிற் கலவாதோ
மன்னாதி மன்னாமற் சரமேனோ
மண்ணாசை யிந்நாளிற் றகுமோசொல்
என்னோடு கண்மூடித் தனமேனோ
என்னாசை யெண்ணாமற் கனியாதோ
என்னாவி கண்ணீரிற் கரையாமல்
எந்நாளும் பெண்மானைத் தழுவாயோ!
மற்சரம் - போட்டி, பொறாமை
சியாமளா ராஜசேகர்