Friday, April 3, 2015

ஏ குருவி ....சிட்டுக்குருவி .....!!!



என் வீட்டு விட்டத்தை 
உன் வீடாக்கினாய் ! 
வாடகை ஏதுமின்றி 
குடித்தனம் பண்ணினாய் !! 

வெளியேற்ற மனமில்லை ! 
கலைத்து விட தைரியமில்லை ! 
குடும்பம் சிதைந்து போகுமென 
சிலர் சொல்லிச் சென்றதால்!! 

நாளாக நாளாக 
எம்முடன் நீயும் ஒன்றி விட்டாய் ! 
உன் சிங்காரக் குடிலுக்கு 
பங்கம் ஏதும் வாராமல் 
கண்ணின் இமைபோல் 
காத்திருந்தோம் !! 

கீச்கீச் ஒலியால் - எமை 
மயக்கிவிட்டாய் ! 
உன் சிணுங்கல் கேளா எம் செவியும் 
செவிடாய் எமக்குத் தோன்றிற்றே ! 

எத்தனையோ நீ பிரசவித்தாய் ! 
புது வரவு பார்த்துப் பூரித்தோம் ! 
குஞ்சுகள் சிறுகவே வாய் பிளக்க 
உன் அலகை அழகாய் உள் நுழைத்து 
இரையை ஊட்டிடும் காட்சி கண்டு 
வீட்டில் யாவரும் ரசித்திடுவோம் !! 

விதவிதமாய் உன்னை படமெடுத்தோம் ! 
கணிணியில் அதையும் சேமித்தோம் ! 
ஆறேழு மாதமாய் உனைக் காணாமல் 
கண்ணெறு பட்டதோவென கவலையுற்றோம் !! 

கைபேசிகோபுர கைங்கர்யத்தால் 
சிட்டென நீயும் பறந்தனையோ ? 
எம்மை நீயும் மறந்தனையோ ? - நீ 
சொல்லாமல் போன மாயம் சொல்வாய் !! 

எங்கே நான் சென்றுனைத் தேடுவேன் ? 
நினைவுகள் நீளும் வேளையிலே 
கணிணியில் உன் முகம் காண்கின்றேன் ! 
பலகணி திறந்து வைத்துக் காத்திருக்கின்றேன் !! 
என் சிட்டுக்குருவியே..... !! நீ வருவாயென ........ !!!

No comments:

Post a Comment