Wednesday, October 28, 2015

தயவுடன் திருந்திடச் செய்வாய் !! ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )



முப்புர மெரித்த சங்கரன் மகனே 
***முன்னவ நின்னடிப் பணிந்தேன் !
தப்பெது செயினும் தடுத்திட வருவாய்
***தயவுடன் திருந்திடச் செய்வாய் !
அப்பமும் வடையும் அவலொடு கடலை
***அன்புடன் படைத்திட மகிழ்வாய் !
ஒப்புமை யில்லா உச்சிதத் தேவே
***ஒற்றுமை ஓங்கிட வருளே !

Tuesday, October 27, 2015

தனிமையுணர்வை மாற்றினாள் ....!!



சன்ன லோர இருக்கையில் 
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!

அன்புக் காட்டி மறுத்தவன் 
***அமைதி பறித்துப் போகவே 
சின்ன மனத்தில் வேதனை 
***சிறகு விரிக்க ஏங்கினாள்!

கன்னந் தழுவும் தென்றலால் 
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள் 
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!

தன்கை என்று முதவிடும் 
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!

Saturday, October 24, 2015

காதல் பாக்கள் வடிக்குது ....!!!



பட்டுக் கன்னம் தொட்டுத் தீண்டப் 
***பாச நெஞ்சம் துடிக்குது ! 
கட்டிப் போட்ட கையி னாலே 
***காதல் பாக்கள் வடிக்குது ! 
எட்டி நின்று பார்க்கும் கண்ணில் 
***ஏக்கம் மட்டும் தெரியுது ! 
விட்டுச் செல்ல வுள்ள மின்றி 
***வீட்டுக் குள்ளே மறையுதே !! 

(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( தேமா தேமா தேமா தேமா 
தேமா தேமா விளம் )

வாழ்வும் சொர்க்க மாயிற்றே ....!!!



காஞ்சிப் பட்டுச் சேலை கட்டிக்  
***காதல் பார்வைப் பார்த்தாளே !
ஊஞ்ச லாடும் உள்ளந் தன்னை 
***ஊற்றாய்ப் பொங்க வைத்தாளே !
தீஞ்சொல் லாலே யீர்த்தா ளென்னை 
***தேனும் தோற்றுப் போயிற்றே !
வாஞ்சை யோடு கட்டிக் கொள்ள 
***வாழ்வும் சொர்க்க மாயிற்றே !

     ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Tuesday, October 20, 2015

நெஞ்சம் நெகிழும் ...!!! ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நீலமயில் வாகனனின் திருப்புகழைப் பாடிவந்தால் 
***நெகிழும் நெஞ்சம் !
மாலவனின் மருகனவன் மலர்த்தாளைப் பற்றிடிலோ 
***மயக்கம் தீரும் !
கோலவிழிக் குறமகளும் குறைதீர்க்க உடன்வருவாள் 
***கொழிக்கும் செல்வம் !
வேலவனின் அருள்கிட்ட மேதினியில் சிறப்புற்று 
***விளங்கும் வாழ்வே ! 

Thursday, October 15, 2015

மெல்லச் சென்று மறைந்ததே ....!!!



கொட்டுச் சத்தம் வானில் கேட்டுக் 
***கோலத் திங்கள் பயந்ததோ ?
எட்டிப் பார்த்து மின்னல் பூக்க 
***ஏத்திச் செவ்வாய் மலர்ந்ததோ ?
சொட்டு மாரி போட்ட தாலே 
***சொக்கி மேனி சிலிர்த்ததோ ?
விட்ட பின்னர் மீண்டும் தோன்ற 
***மெல்லச் சென்று மறைந்ததே ....!!!

     ( ஏழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

Wednesday, October 14, 2015

நீங்கா திருப்பாய் நிறைந்து .....!!! ( அந்தாதி வெண்பாக்கள் )

கருணை விழியால் கனிவுடன் நோக்கி 
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி 
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது . 

இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில் 
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த 
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட 
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .

தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும் 
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள் 
இடர்வரின் சிட்டாய் எழுந்து .

எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க 
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத் 
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும் 
நீங்கா திருப்பாய் நிறைந்து .

Tuesday, October 13, 2015

வரமெனக் கொள்வோமே ....!!!

விளம்பர மில்லாப் பொருட்களும் பெரிதாய் 
***விற்பனை யாவதுண்டோ ? 
களம்பல கண்ட மன்னனும் போரில் 
***கடைசியில் தோற்பதுண்டோ ? 
குளத்திடை சேற்றில் பூப்பினும் கமலம் 
***கோயிலில் மறுப்பதுண்டோ ? 
வளமிகு பாக்கள் வழங்கிடும் எழுத்தை 
***வரமெனக் கொள்வோமே ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 


( விளம் + மா +விளம் +மா 
விளம் + காய் )

யாப்பதன் மேன்மை காப்போம் !

பாவலர் பயிற்சி கண்டேன் 
***பைந்தமிழ்ச் சோலை தன்னில் ! 
பூவனச் சுகந்தம் போலே 
***பொற்புடன் மணக்கக் கண்டேன் ! 
ஆவலாய்க் கற்க நானும் 
***அன்புடன் இணைந்து விட்டேன் ! 
யாவரும் பயில வாரீர் 
***யாப்பதன் மேன்மை காப்போம் ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( விளம் + மா + தேமா )

ஒளிரும் தமிழே ....!!!

செந்தமிழ்ப் பாட்டு கேட்டால் 
***செவியொடு குளிரு முள்ளம் ! 
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம் 
***செம்மையாய்ப் பொங்கிப் பாயும் ! 
சந்தமும் கொஞ்சிக் கூட 
***சந்தன மணமும் தோற்கும் ! 
சுந்தரத் தமிழே என்றும் 
***சொக்கிட வைக்கும் தேனே ! 

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( விளம் + மா + தேமா )

காதலில் விழுந்த பின்னே ...!!

கண்களும் கதைகள் பேசும் 
***காதலில் விழுந்த பின்னே ! 
உண்பதும் மறந்தேப் போகும் 
***உள்ளமும் மிதக்கும் தன்னால் ! 
எண்ணிலாக் கனவு வந்தே 
***இன்பயாழ் மீட்டிச் செல்லும் ! 
வண்ணமாய் யாவும் தோன்றும் 
***வசந்தமாய்ச் சிறக்கும் வாழ்வே ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
(விளம் + மா + தேமா )

மோகனம் பாடும் வண்டே ....!!!



ஆதவன் கிழக்கில் தோன்றி 
***ஆயிரம் கரங்கள் நீட்ட 
காதலாய் அருகில் வந்து 
***கடலலை கொஞ்சிப் பேச 
நாதமும் தென்றல் மீட்ட 
***நாணியேக் கிளைக ளாட 
மோதலில் மொட்டும் பூக்க 
***மோகனம் பாடும் வண்டே !

துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?

கவலை வாட்டி வதைக்கும் போது 
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ? 
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க 
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ? 
அவலங் கண்டும் அமைதி காக்கும் 
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ? 
உவகை பொங்கும் நாளை எண்ணி 
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??

வெட்கியேப் பூத்தனளே ....!!!



கண்களில் மின்னல் காந்தமாய்க் கவரக் 
***காதலில் விழுந்துவிட்டான் !
பெண்ணவள் அழகில் சொக்கியே அவனும்
***பித்தனாய் மாறிவிட்டான் !
எண்ணிலாப் பாக்கள் இனிமையாய் வடித்து 
***எண்ணமும் சொல்லிவிட்டான் !
வெண்மதி முகத்தாள் மெல்லிடைத் துவள 
***வெட்கியேப் பூத்தனளே !

     ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
      ( விளம் மா விளம் மா விளம் காய் )