Wednesday, April 22, 2015

ஏழைச் சிறுவனின் ஏக்கம் !!



பள்ளிக்கூடம் சென்றதில்லை 
புத்தகமும் புரட்டவில்லை 
தோளில்பை சுமந்ததில்லை 
தோழனொடுகை கோர்த்ததில்லை ! 

சீருடையும் அணிந்ததில்லை 
சிரித்தரட்டை அடித்ததில்லை 
வீட்டுப்பாடம் செய்ததில்லை 
விரலெழுதி வலித்ததில்லை ! 

கண்முழித்துப் படித்ததில்லை 
கனவிலுமிது நடந்ததில்லை 
தேர்வுநானும் எழுதவில்லை 
தேர்ச்சியெனக்கு கிடைக்கவில்லை ! 

ஏழையாய்ப் பிறந்துவிட்டால் 
ஏற்றம்வாழ்வில் வாராதோ 
ஏக்கமுடன் கேட்கின்றேன் 
ஏட்டுக்கல்வி எனக்கும்வேண்டும் ! 

பாடசாலைப் போகவேண்டும் 
பாடம்நானும் படிக்கவேண்டும் 
தாயழைத்துச் செல்லவேண்டும் 
தன்கையால்சோறு ஊட்டவேண்டும் ! 

ஓடிவிளை யாடவேண்டும் 
ஓய்வும்கொஞ்சம் எடுக்கவேண்டும் 
மதிப்பெண்நிறைய வாங்கவேண்டும் 
மதிப்பாய்நானும் வாழவேண்டும் ! 

அன்றாடப் பாடங்களை 
அன்றன்றே படிக்கவேண்டும் 
ஆசைகள்யாவும் ஈடேற 
ஆண்டவனின் அருள்வேண்டும் ....!!!

No comments:

Post a Comment