Sunday, April 22, 2018

தேன் சிந்திய வானம் - கண்ணதாசன் !!!

மானிட யினத்தை வசீகரம் செய்த
***மாபெரும் கவிஞரை நினைத்தேன் !
தேனினு மினிய திரையிசைப் பாடல்
***சிந்தையி லினித்திடச் சுவைத்தேன் !
கானிறை மலராய்க் காற்றினில் கலந்த 
***கவிதைகள் மணத்தினை நுகர்ந்தேன் !
வானிறை முகிலாய் வார்த்தைகள் சிந்தும்
***மழையினில் உயிர்வரை நனைந்தேன் !
கவிஞரின் பாட்டில் கவினுற விளங்கும்
***கற்பனைத் திறத்தினை ருசித்தேன் !
செவிகளி னோரம் தென்றலாய் வருடச்
***சிலிர்ப்பினில் இதயமும் மலர்ந்தேன் !
தவிப்பினைப் போக்கும் தத்துவப் பாட்டில்
***தனித்துவம் கண்டதில் உறைந்தேன் !
புவியினி லிவன்போல் புலவனு முண்டோ
***புன்னகை விரிந்திட வியந்தேன் !
கண்ணனைப் பாடும் கனித்தமிழ்ச் சுகத்தில்
***கலப்பிலா அமுதினைக் குடித்தேன் !
உண்டிடும் போதும் உறங்கிடும் போதும்
***உடன்வரும் பாடலில் கனிந்தேன் !
புண்படும் நெஞ்சிற் காறுத லாகப்
***பொருந்திடும் பாவினிலில் உயிர்த்தேன் !
கண்களில் வடியக் கைகளைக் குவித்தேன்
***கண்ணனின் தாசனே வாழி !!
இலக்கிய நயத்தை இங்கித மாக
***இழைத்தவன் தந்ததில் கரைந்தேன் !
சலங்கைக ளொலியாய்ச் சந்தமும் துள்ளத்
***தண்டமிழ்க் கொஞ்சிடக் குளிர்ந்தேன் !
கலங்கரை விளக்காய்க் காதலில் வீழ்ந்தோர்
***கவிஞரைக் கருதிடக் கண்டேன் !
நிலமுள வரையில் நிச்சய மாக
***நிலைத்திடு மவர்புகழ் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

இதழகல் வெண்பா !!

குறள் வெண்பா
*****************
தென்ற லணைக்கையில் தேனிலா காய்கையில்
கன்னி யழகினைக் காண்.
நேரிசை வெண்பா
*********************
அழகிய நெற்கதி ராடிடக் கண்டேன்
கழனி யிலடித்த காற்றில்! - செழித்த
நிலத்தி னெழிலால் நெகிழ்ந்தென்றன் நெஞ்சில்
கலந்தினிக்கச் செய்ததே கார்.
இன்னிசை வெண்பா
***********************
எந்தை யிணையடி யெண்ணி யழைத்திடச்
செந்தில் நகரினில் சிந்தி லிசைத்திடச்
சிந்தை யினிக்கச் சிகண்டியி லேறிய
கந்த னெழிலினைக் காண்.

வளையற் சிந்து....!!!



வளையற் சிந்து ...!!
****************************
காலையிளங் காற்றுவந்து
காதோரம் பாடும் - அது
கார்குழலைக் கோதும் - இரு 
கண்ணிமைகள் மூடும் - உளம்
கனவினிலே கண்ணன்வரக்
காதலுடன் தேடும் !!

மாலையென்று பூக்குமென்று
மனக்கணக்கு போடும் ! - அது
மன்னவனை நாடும் ! - நிதம்
மையலுடன் கூடும் ! - பின்
மதுவுண்ட வண்டாக
மயக்கத்திலே ஆடும் !
சியாமளா ராஜசேகர்

Tuesday, April 10, 2018

இலாவணி


பெற்றவளைக் காப்பகத்தில் சற்றும்மன சாட்சியின்றிப் 
***பிள்ளைகளே சேர்க்கும்கலி காலம் காலம் !!
உற்றதுணை யாயிருந்து நற்பண்பை ஊட்டிவிட்ட 
***உத்தமியர் வாழ்வுமலங் கோலம் கோலம் !!

வேதனையில் கண்கலங்கும் மாதவளைப் பேணாமல்
***வெந்துமனம் நோகவிடல் நன்றோ நன்றோ  ??
பாதகத்தைச் செய்யுமவர் பாதைநாளை மாறிடலாம் 
***பண்ணியதே மீண்டும்கிட்டும் அன்றோ அன்றோ ??

சியாமளா ராஜசேகர் 

Monday, April 9, 2018

இலாவணி

இலாவணி ...!!
********************
ஆத்தங்கரை ஓரத்திலே காத்திருக்கேன் ஒத்தயிலே
***அத்தமக அன்னமேநீ எங்கே எங்கே ??
நாத்துநடும் போதினிலே கூப்பாடு போடாதே 
***நான்களத்து மேட்டினிலே இங்கே இங்கே !!!

வேலையெல்லாம் ஒண்ணுமில்ல சாயுங்காலம் வாரேன்னு
***வெள்ளந்தியாச் சொன்னதெல்லாம் பொய்யோ பொய்யோ ??
வேலைக்காளு இல்லயினு அப்பனாயி கூப்பிட்டாக 
***வேறென்ன சொன்னதெல்லாம் மெய்யே மெய்யே !!!

பட்டணத்தில் சீலவாங்கிப் பத்திரமா வச்சிருக்கேன் 
***பக்கத்துல வந்துதந்தா தப்பா தப்பா ??
கெட்டிக்கார மச்சானே எண்ணமெல்லாம் நானறிவேன் 
***கேட்டக்கேள்வி நிச்சயமா தப்பே தப்பே !!!

ஆசையாக ரெண்டுபேரும் பேசத்தடை போடலாமா 
***ஆத்தாடி! கோபம்மட்டும்  ஏனோ ஏனோ ??
மீசைக்காரா ! உந்தன்மேல கோபமொண்ணும் இல்லையையா
***வெக்கம்வந்தா என்னசெய்ய நானே நானே !!!

சந்தப்பக்கம் வந்தியனா செல்ஃபிநாம சேர்ந்தெடுப்போம்
***சம்மதமா சொல்லுபுள்ள நீயே நீயே ??
சொந்தபந்தம் பாத்துப்புட்டா கண்ணுகாது  மூக்குவச்சிச் 
***சோடிப்பாய்ங்க வம்பெதுக்குப் போயா போயா !!! 

மார்கழிக்கு அப்புறமாத் தைப்பொறந்த பின்னாலே 
***மாமனொன்னக் கட்டிக்கவா சொல்லு சொல்லு ??
சீர்செனத்தி யோடவந்து அத்தையிடம் பொண்ணுகேட்டுச்
***சீக்கிரமாப் பக்கத்தில நில்லு நில்லு !!!

தொட்டுத்தொட்டுப் பேசினாத்தான் தப்பென்ன செல்லக்கண்ணு 
***தோப்போரம் கொஞ்சநேரம் வரியா வரியா ??
பட்டுச்சேல வாங்கிவந்து மூணுமுடிச்சு போட்டுவிடு 
***பாலும்பழத் தோடுவாரேன் சரியா சரியா ??

சியாமளா ராஜசேகர் 


Sunday, April 8, 2018

பிறந்த வீடே போய்வரவா ???


மஞ்சள் தாலி கழுத்திலாட 
***மன்ன னுடனே கிளம்புகிறேன் !
நெஞ்சம் கனத்துக் கிடக்கிறது 
***நெகிழ்வில் விழிகள் வடிக்கிறது !
பஞ்சாய்ப் பறந்த மனமெங்கும் 
***பதற்றம் தொற்றிக் கொள்கிறது !
வஞ்சி யென்றன் உணர்வுகளை 
***வடிக்க சொற்கள் தேடுகிறேன் !!  (24)

இருபத் திரண்டு வருடங்கள் 
***இனிதே வளைய வந்தேனே !
அருமைத் தம்பி தங்கையுடன் 
***அன்பா யாடிக் களித்தேனே !
துரும்பைக் கூட அசைத்ததில்லை
***சுகமாய்க் காலம் கழித்தேனே !
வரும்நா ளெல்லாம் எப்படியோ 
***வருத்தம் சற்றே தோன்றிடுதே !!  (48)

முல்லைக் கொடியே மயங்காதே 
***முகைகள் பூக்க  வழியனுப்பு !
கொல்லைப் புறத்தில் நின்றிருக்கும் 
***கொய்யா மரமே கலங்காதே !
பல்லால் கடித்துப் பழுக்கவைத்த 
***பாவை யென்னை மறவாதே !
செல்லு மிடத்தில் நிதம்நினைப்பேன் 
***செய்த குறும்பைப் பகிர்ந்திடுவேன் !!  (72)

முற்றந் தெளித்து வண்ணத்தில் 
***முழுதாய்க் கோலம் யாரிடுவார் ?
வெற்றாய் விட்டால் வெதும்பாதே 
***விடுப்பில் வருவேன் அழகூட்ட !
சுற்றி வளர்ந்த வாழைகளே 
***சோர்ந்து விடாதீர் நானின்றி !
நெற்றிப் பொட்டு நிலைத்திருக்க
***நீங்கள் வாழ்த்தி யனுப்பிடுவீர் !!  (96) 

மறக்க வியலா நினைவுகளை 
***மனத்தில் சுமந்தே செல்கின்றேன் !
குறைகள் களைந்து புக்ககத்தில் 
***குணத்தால் எல்லோ ருளங்கவர்வேன் !
பிறரை மதித்துச் சொற்கேட்டுப்
***பெற்றோர் பேரை விளங்கவைப்பேன் !
பிறந்த வீடே போய்வரவா ?
***பிரியா விடையைத் தருவாயே !!  (120)

சியாமளா ராஜசேகர் 

Saturday, April 7, 2018

இரவின் வனப்பு ...!!!


வடிவில் குறைந்து வளரும் நிலவு
***வனப்பா யிரவில் ஒளியைக் கொடுக்கும் !
விடியும் வரையில் விரிந்த விசும்பு 
விளங்கு மழகில் வியப்பை யளிக்கும் !
இடியும் முழங்கப் பொழியும் மழையில் 
***இதயம் நனைய  உவகை பிறக்கும் !
செடியில் தவழும் வளியும் வருட 
***சிலிர்த்த மனமும் அமைதி யுறுமே !!

சியாமளா ராஜசேகர் 

ஆசானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் !

அச்ச மகற்றி மரபினையே
***அன்பாய்ப் புகட்டும் பாவலரே !
பச்சை மரத்தி லாணியெனப்
***பதிய வைத்தீ ரெளிதாக !
உச்ச மெட்ட ஏணியென
***உயர்த்தி விட்டு மகிழ்ந்திருந்தீர் !
மெச்சி யும்மைப் புவிபோற்ற 
***மேன்மை யோடு வாழியவே !

செய்யும் பணியை நேசித்துச் 
***சிறப்பாய்ச் செய்யும் செம்மல்நீ 
நெய்யும் பாவில் பிழைதிருத்தி 
***நெறியாய்ப் புகட்டும் ஆசான்நீ !
மெய்யை வருத்தித் தமிழுக்காய் 
***மெய்யா யுழைக்கும் புனிதன்நீ !
தொய்வே யின்றித் தொடரட்டும் 
***தொண்டு நாளும் சோலையிலே !!

மருந்தாய் நினைத்த மரபுகண்டு 
***மருண்டு மிரண்டே ஓடாமல் 
விருந்தாய்ப் படைத்து வியக்கவைத்தாய் 
***விருப்ப முடனே பயிற்றுவித்தாய் !
திருத்தம் செய்து தவறுகளைத் 
***தெளிவு படுத்தி விளங்கவைத்தாய் 
குருவே நின்றன் பிறந்தநாளில் 
***குவித்தேன் இருகை வணங்கிடவே !!

பாடிக் காட்டிப் பக்குவமாய்ப்
***பாக்க ளியற்றப் பழக்குவித்தாய் !
தேடி வந்து பயில்வோர்க்குத் 
***தேர்வும் நடத்தி விருதளித்தாய் !
ஈடி லாத செம்மொழியின் 
***இனிய மரபு மாமணியே !
கூடி  வாழ்த்து பாடிடுவோம் 
***குயில்க ளின்று சோலையிலே !!

அன்னை தமிழுக் கணிசெய்ய
***அறிந்த மரபைப் பிறர்க்களித்தாய்!
என்னே யுன்றன் கருணையுளம்
***என்றே நிதமும் வியக்கின்றேன்!
இன்னு மின்னு முன்னிடத்தே
***இனிதாய்க் கற்க விழைகின்றேன்!
நின்றன் பிறந்த நாளினிலே
***நெஞ்சம் நிறைந்து வாழ்த்துவனே!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாவலர் அவர்களே !!

Friday, April 6, 2018

காவிரியின் குரல் ...!!!


தாயென்றே போற்றுகின்றார் தமிழரென்னைப் பாடி
***தரணியெங்கும் போராட்டம் நடத்துகின்றார் கூடி !
சேயென்றே நான்கருதிச் செழிப்பூட்டச் சென்றேன்
***சேவைகளைத் தடுத்ததனால் செயலிழந்து நின்றேன் !
நாயென்று நினையாதே வாலாட்ட மாட்டேன்
***நம்பியோரை ஒருநாளும் கைவிடவே மாட்டேன் !
நீயென்னைத் தடுத்தாலும் நிறைந்தோடி விடுவேன்
***நீதியையும் புறக்கணித்துப் பயணத்தைத் தொடர்வேன் !
பொறுமையுடன் காத்திருப்பேன் புரியாதென் சித்தம்
***பொங்கிடுவேன் ஓர்நாளில் அன்றறிவாய் மொத்தம் !
சிறுமையுற நானென்ன நீசேர்த்த சொத்தா
***சிறுநரியாய்ப் பிதற்றுகின்றாய் உனக்கென்ன பித்தா ?
வறுமையினால் விவசாயி பிணமாகும் போது
***வலிக்கிறதே என்னிதயம் யார்செல்வார் தூது ?
வெறுத்துவிடும் முன்நீயும் களை-கட்டுப் பாட்டை
***வேண்டிடினும் அடங்காமல் ஆடிடுவேன் வேட்டை ...!!!
சியாமளா ராஜசேகர்

Monday, April 2, 2018

நீலவான வீதியிலே ...!!!

நீலவான வீதியிலே  தவழ்ந்து வந்து 
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர் 
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே  வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள் 
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப் 
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும் 
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும் 
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில் 
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறிவு கொண்டோரும் மதியின் முன்னால்
***முதிராத மழலையாகிப் போவார் தன்னால் !

நிலவின்றி இலக்கியங்கள் மண்ணில் இல்லை 
***நீந்துகின்ற அழகியலுக் குண்டோ எல்லை ?
உலகத்திற் கொளிகொடுக்கும் இரவின் தீபம் 
***உணர்வுகளைக் குளிர்வித்துத் தணிக்கும் தாபம் !
வலம்வானில் வரும்நிலவை  உவமை யாக்கி 
***வள்ளுவனும் பாரதியும் நெய்தார் பாவை !
மலர்ந்தொளிரும் விண்பூவை நிசியில் கண்டு 
***வருணிக்கா பாவலர்கள் எவரு முண்டோ ??

சியாமளா ராஜசேகர்