Friday, April 3, 2015

சிலிர்ப்புகள் .....!!!




நில மகளைத் தொடும் 
வான் மழையின் முதல் துளி ...... 
முத்தச் சிலிர்ப்பு ... !! 

தான் ஈன்ற கன்று 
பாலுக்கு மடி முட்ட ... 
பசுவின் சிலிர்ப்பு ....!! 

இதழ் விரிந்த மலரில் 
வண்டு அமர்ந்து தீண்ட .... 
பூவின் சிலிர்ப்பு .....!! 

வைகறைக் கனவில் 
காதலன் கரம் பற்ற .... 
முதிர்க்கன்னியின் சிலிர்ப்பு .....!! 

சுட்டெரிக்கும் கோடையில் 
மேனி தவழும் தென்றல் .... 
சுகமான சிலிர்ப்பு .....!! 

பசி கிள்ளும் வேளையில் 
தொண்டைக் குழி புகும் கூழ் .... 
வயிற்றின் சிலிர்ப்பு .....!! 

புதையுண்ட வித்து 
முளைக்க முட்டுகையில் ..... 
மண்ணின் சிலிர்ப்பு ....!! 

தளர்வுறும் போது 
தாங்கும் கை ... 
.நட்பின் சிலிர்ப்பு ...!! 


கருவில் உருவான சிசு 
பிஞ்சுக் காலால் உதைக்க .... 
தாய்மையின் சிலிர்ப்பு........!!

No comments:

Post a Comment