Wednesday, April 29, 2015

மனைவிக்கு விண்ணப்பம் ....!!

அன்பால் எனை ஆளவந்த திருமகளே ! 
இன்சொல்லால் எம்மை வசீகரித்தாய் ... 
புன்முறுவலுடன் பணி புரிந்தாய் ... 
பின்தூங்கி முன் விழித்தாய் ....!! 

அயர்வின்றி அடுக்களையில் வேலை செய்தாய் ! 
ஆளுக்கொரு விதமாய் சமைத்துக் கொடுத்தாய்! 
அன்பாய் நம் பிள்ளைகளை அரவணைத்தாய் ! 
அருமையாய் என் தாய்தந்தை சேவித்தாய் ...! 

ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினாலும் 
அமைதிகாத்து என்னை நாண வைத்தாய் ! 
தப்பேதும் நடந்தால் தப்பாமல் தப்பை 
சுட்டிக்காட்டி தப்பினி நடவாது தடுத்தாய் ! 

துளிர்த்த வியர்வை துடைக்கவும் மறந்து 
துரித கதியில் தேனியாய் சுழன்றாய் ...! 
துயர் வந்தபோது தோள் கொடுத்தாய் ! 
துலாக் கோலாய் நியாயம் காத்தாய் ! 

கோபத்திலும் நிதானமாய் செயல் பட்டாய் ! 
சோகத்தையும் சுகமான சுமையாய் சுமந்தாய் ! 
சோதனையைத் துணிந்து எதிர் கொண்டாய் ! 
வேதனையை வந்தவழி விரட்டி அடித்தாய் ! 

நீ சலித்து நான் பார்த்ததில்லை ... 
நான் கேட்டு நீ மறுத்ததில்லை ... 
நீ வேண்டும் இனிவரும் பிறவியும்..... 
பொன்மகளே உன் சம்மதம் தருவாயா .....???

No comments:

Post a Comment