Saturday, April 4, 2015

அன்னமே ..... அன்னமே .....!!



ஆற்றுப் புனலில் ஒயிலாக 
நீந்தி வரும் அன்னமே ...! 
வெண்மையான உன்னைக் காண 
கண்ணி ரெண்டும் கெஞ்சுமே ....!! 

பாலைத் தனியே பிரிக்குமழகை 
பார்க்க நெஞ்சம் ஏங்குமே....! - உன் 
தூவிஅடைத்த மஞ்சம் தன்னில் 
துயில உள்ளம் கேட்குமே .....!! 

மென்மையான நடை காண 
கன்னி மனம் விழையுமே ...! 
பங்கயமே பஞ்சணையாய் நீ 
துஞ்ச எழில் கொஞ்சுமே ....!! 

கார்மேகம் சூழக் கண்டால் 
குழாமுடன் வான் பறப்பாய் ...! 
பச்சை வண்ண கம்பளமாம் 
செந்நெல் வயல் உறங்குவாய் ...!! 

துயரெனினும் இடர் வரினும் 
துணை பிரியா அன்னமே ...! 
இணை விடாத ரகசியத்தை 
இனிதாய் எடுத்துச் சொல்லுவாய் ....!!

No comments:

Post a Comment