Thursday, December 20, 2018

செப்பேலோ ரெம்பாவாய் ...!!!

கோல வெழிலனைக் கோயிலுறை மாதவ
மாலவனை மண்ணையுண்ட மாயனைச் சென்றுதொழ
பாலைக் கறக்கும் பசுக்களும் கூடின;
சோலைக் குயில்கள் சுகமாகக் கூவின
காலை மலர்ந்ததே; காற்றில் பனங்குருத்
தோலைகளு ராய்ந்தே ஒலியெழுப்பக் கேட்டிலையோ?
சேலை யுடுத்தித் திலகமிட்டுப் பூச்சூடி
சீலத்து டன்நாமம் செப்பேலோ ரெம்பாவாய் !!
சியாமளா ராஜசேகர்

பாரதியே !

வெள்ளையனை வெளியேற்றத்
துடித்தாய் - தேச
விடுதலைக்கு வித்தாகத்
திகழ்ந்தாய் - மக்கள்
உள்ளமதில் அடிமைத்தளை
உடைத்தெறியும் பக்குவத்தை
உணர்ச்சிமிகு உரைகளினால்
வளர்த்தாய் - அவர்தம்
உயிர்க்காற்றாய் உணர்வுகளில்
நிறைந்தாய் !!
தாரணியில் பலமொழிகள்
கற்றாய் - நம்
தமிழ்மொழிபோல் இனிமையில்லை
என்றாய் - இந்தப்
பாரதிரப் புயலெனவே
பறங்கியரின் கொட்டத்தைப்
பாரதத்தில் நசுக்கிவிட
எழுந்தாய் - தமிழ்ப்
பாக்களிலே வீரத்தை
விதைத்தாய் !!
சாதிமத வேற்றுமைகள்
களைந்தாய் - பாட்டில்
சமத்துவத்தைக் காட்டியுளம்
கனிந்தாய்! - நல்ல
நீதிநெறி யில்நின்று
நெஞ்சத்தில் உரமூட்டி
நெருப்புமிழும் கவிதைகளால்
கனன்றாய் - மண்ணில்
நிலைகெட்ட மாந்தரெண்ணித்
தவித்தாய் !!
சிறுமைகளைக் கண்டுபொங்கிச்
சினந்தாய் - நற்
சிந்தனைகள் பாமழையாய்ப்
பொழிந்தாய் - நன்கு
முறுக்கிவிட்ட மீசையொடு
முண்டாசு கவியேநீ
மூச்செனவே சுதந்திரத்தை
நுகர்ந்தாய் - வெற்றி
முரசொலிக்க விடுதைலையை
உணர்ந்தாய் !!
புதுமைகளை வரவேற்கத்
துணிந்தாய் - பெரும்
புயலெனவே புரட்சிகளைப்
புரிந்தாய் - சாதி
மதம்பிடித்துத் திரிபவரின்
மடமைகளைக் களையெடுத்து
மகிமைமிகு பலகவிகள்
நெய்தாய் - நெஞ்சில்
மனிதநேயம் ஊற்றெடுக்கச்
செய்தாய் !!
பெண்ணடிமை கண்டுமனம்
கொதித்தாய் - பெண்டிர்ப்
பெருமையுற வேண்டுமென
நினைத்தாய் - நீ
விண்ணளவு குரல்கொடுத்து
விடுதலைக்குப் போராடி
விலங்குகளைத் தகர்த்தெறியச்
செய்தாய் - மாதர்
மேன்மைநிலை அடையவழி
வகுத்தாய் !!

கோல விழி மீனாள் ...!!!

சந்தக் கலிவிருத்தம்....!!!
********************************
( தானதன தானதன தானதன தானா )
கூட(ல்)நகர் மாதரசி கோலவிழி மீனாள்
ஆடலர சோடுநட மாடிவர லானாள்
நாடிவரு மேழையரை ஞானவடி வோடே
மாடுமனை யோடுநலம் வாழவருள் வாளே...!!!
சியாமளா ராஜசேகர்

அழகு சிரிக்குதே ...!!!

எண்ணம் முழுதும் அவளின் நினைவில்
இளமை பூக்குதே !
கண்ட வுடனே கவிதை யூற்று
கனிந்து பொங்குதே !
கண்கள் தொடுத்த கணையி லுள்ளம் 
களவு போனதே !
வண்ணக் கனவு வளைய வந்து
மனத்தைத் தாக்குதே !!
இதழ்கள் ஒட்டிப் பேச மறந்த
இதயம் துடிக்குதே !
மிதந்து செல்லும் மேக மாக
விண்ணில் அலையுதே !
வதனப் பொட்டு நிலவு போன்று
வடிவங் காட்டுதே !
உதயங் காணும் கிழக்கின் சிவப்பாய்
ஒளிர்ந்து மின்னுதே !!
அன்னம் தோற்கும் அவள்தம் நடையில்
அழகு சிரிக்குதே !
சின்ன விடையின் வளைவில் வழுக்கிச்
சேலை நழுவுதே !
பின்னிப் போட்ட கூந்தல் தன்னில்
பிச்சி மணக்குதே !
கன்னல் மொழியில் அழைக்கும் போது
காதி லினிக்குதே !!
வெள்ளிக் கொலுசின் சலங்கைச் சத்தம்
மீட்டும் இசையிலே
தெள்ளு தமிழில் கொஞ்சிக் கொஞ்சிச்
சிந்து பாடுவேன் !
புள்ளிக் கோலம் போட்டு நடுவில்
பூவை வைத்திடும்
கள்ளி யவளைக் கட்டி யணைத்துக்
காதல் பேசுவேன் !!
சியாமளா ராஜசேகர்

வீர சுதந்திரம்

கனல்தெறிக்கும் கவிதைகளால் எழுச்சி யூட்டிக்
***கருத்துகளால் உதிரத்தில் வீரம் பாய்ச்சி
மனத்தினிலே தமிழனென்ற இறுமாப் போடு 
***மக்கள்தம் உள்ளத்தைப் பண்ப டுத்தி
இனமதத்தைக் கடந்தன்பால் தமிழர் வாழ்வில்
***ஏற்றத்தை மலர்வித்த பாச ஏணி !
மனக்கண்ணில் சுதந்திரத்தை முன்பே கண்டு
***மகிழ்ச்சியுடன் பாநெய்த தேச ஞானி !!
வீரசுதந் திரம்வேண்டி வெகுண்டெ ழுந்து
***விடுதலைக்கு வித்திட்டுப் பாய்ந்த வேங்கை !
பாரதிரப் பாக்களினால் புரட்சி செய்து
***பக்குவமாய் மக்களுள மீர்த்த செம்மல் !
ஆரமுதாம் தமிழ்மொழியில் பற்று கொண்டே
***அழியாத கவிதைகளைத் தந்த கோமான் !
ஈரமனத் தோடுசமத் துவத்தைப் போற்றி
***இத்தரணி யில்செழிக்க வைத்த வல்லோன் !!
பெண்ணுரிமைக் காய்த்தொடர்ந்து குரல்கொடுத்துப்
***பெண்ணினத்தின் உயர்வுக்கு வழிவகுத்து
மண்ணுலகில் மங்கையர்தம் நிலையை மாற்றி
***மாண்போடு வாழவழி செய்த நல்லோன் !
புண்ணாகப் புரையோடிப் போய்க்கிடந்த
***பொலிவிழந்த சமூகத்தின் இருளைப் போக்க
விண்ணதிர முழக்கமிட்டு மீட்டுத் தந்த
***வீரசுதந் திரத்தையென்றும் பேணு வோமே ..!!!
( பாரதியார் இல்லத்தில் )

Sunday, December 9, 2018

கலைஞருக்குப் புகழாஞ்சலி ...!!!

அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்த ஆரூரின் வித்தே
***அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்த முத்தே !
அஞ்சாத உறுதியுடன் பகுத்தறிவுச் சுடராய்
***ஐந்துமுறை அரசாண்ட தமிழகத்தின் சொத்தே !
வஞ்சகமாய் நஞ்சுமிழ்ந்த எதிரிக்கும் நயமாய் 
***மனங்கோணா எள்ளலுடன் பதிலளித்த கனிவே !
தஞ்சமென வந்தோரை அரவணைத்து மகிழும்
***தமிழ்த்தாயின் தவப்புதல்வ ! வரலாறாய் வாழி !!
நற்றிறமை யோடுநலத் திட்டங்கள் தீட்டி
***நலிந்தோரும் ஏற்றமுற வழிவகைகள் செய்தாய் !
பற்றுடனே கழகத்தைப் பக்குவமாய்ப் பேணிப்
***பார்வியக்கப் பகைவிரட்டிப் போராடி வென்றாய் !
முற்போக்குக் கருத்துகளைப் படைப்புகளில் பெய்து
***முத்தமிழின் முகவரியாய் முப்போதும் திகழ்ந்தாய் !
சொற்பொழிவு கேட்போரை மெய்மறக்கச் செய்யும்
***சூத்திரத்தை நன்குணர்ந்தே அருவியெனப் பொழிந்தாய் !!
அண்ணாவின் வழியொற்றிக் கொள்கைகளிற் சிறந்தே
***அயராத உழைப்பாலே நற்பணிகள் செய்தாய் !
பெண்களுக்குச் சொத்துரிமைத் தடையாவு மகற்றிப்
***பெருமதிப்பாய் அவர்நிலையும் சீர்பெறவே செய்தாய் !
கண்ணான செந்தமிழைச் செம்மொழியாய் உயர்த்திக்
***கடைக்கோடித் தமிழனையும் பூரிக்க வைத்தாய் !
மண்ணுலகம் உள்ளவரை மறக்காதிவ் வையம்
***மாண்புமிகு தலைமையெனப் பேர்பெறுவாய் திண்ணம் !!
விடைபெற்றுச் சென்றாலும் மறக்கவில்லை நெஞ்சம்
***மீண்டுமுன்றன் தமிழ்கேட்க செவியிரண்டும் கெஞ்சும் !
கடலலைகள் ஓசையில்நீ கண்விழிக்க வேண்டும்
***கரகரப்பு குரலாலே கவர்ந்திழுக்க வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமாய்நின் கவிபாய வேண்டும்
***மறுபடியும் அதைப்பருகிக் கசிந்துருக வேண்டும் !
உடன்பிறப்பே எனவிளித்து மடல்விரிய வேண்டும்
***உரைவீச்சின் ஈர்ப்பினிலே புவிமயங்க வேண்டும் !!
சியாமளா ராஜசேகர்

வெண்பாத்_துணர் ...!!!



வெண்பாத்_துணர்...!!!
************************
குறள் வெண்பா ...!!!
**********************
கண்ணன் குழலிசை காற்றில் கலந்துவர
வண்ணமாய்ப் பூத்தது வான்.
நேரிசைச் சிந்தியல் வெண்பா....!!!
****************************************************
கண்ணனைக் கண்டதும் கன்னியர் காதலில்
எண்ணிலாப் பாக்க ளிசைத்திட - நண்பகலில்
மண்ணி லிறங்கியது வான்.
நேரிசை வெண்பா....!!!
*************************
கண்ணன் வரவில் கலாபம் விரித்தழகாய்த்
தண்டலையில் நீலமயில் தானாடும் - மண்ணிலிந்தக்
கண்கவருங் காட்சியைக் கண்டு மகிழ்ந்திடும்
வண்ணச் சிரிப்பொடு வான்.
இன்னிசை வெண்பா ....!!!
****************************
கண்ணனவன் செய்திடுங் கள்ளத் தனமறிந்தும்
கண்டிக்க உள்ளமின்றிக் காத்திருக்குந் பெண்ணவளின்
வண்ணமலர்ப் பாதம் வணங்கித் திரும்பிட
மண்ணிற்கு வந்தது வான்.
பஃறொடை வெண்பா ....!!!
*****************************
கண்ணன் மலர்முகம் காணாமல் வாடிநிற்கும்
வெண்மதியும் வானத்து வீதியில்! - தண்ணளியாள்
சோகத்தைத் தீர்த்துச் சுகமளிக்க வாரானோ
மோகத்தில் தாரானோ முத்தமொன்று - மேகங்கள்
கொண்டலுடன் தாளமிட்டுக் கொஞ்சுகையி லின்புடன்
மண்ணில் பொழிந்தது வான்.
சியாமளா ராஜசேகர்

தமிழ் வாழ்த்து

ஓடுகின்ற உதிரத்தில்
கலந்தாய் - என்றன்
உணர்வுகளில் உயிர்த்தெழுந்து
நிறைந்தாய் - உன்னைப்
பாடுகின்ற போதுவிழி
பரவசத்தில் நீர்ச்சொரியப்
பார்த்துநீயும் பூரித்து
மகிழ்ந்தாய் - என்னைப்
பைந்தமிழே பரிவுடனே
அணைத்தாய் !!
கன்னலெனச் சுவையினிலுன்
இனிமை ! - உண்டு
கண்டவர்க்கோ என்றுமில்லை
தனிமை - உன்னை
அன்புடனே அண்டியவர்
அகங்குளிரச் செய்திடுவாய்
அழகேவுன் வடிவமென்றும்
இளமை - இந்த
அவனியிலே உனக்குமுண்டோ
முதுமை !!
வாயார வாழ்த்திடுவேன்
நித்தம் - உன்னை
வணங்குகையில் குளிர்ந்திடுமென்
சித்தம் - என்னைத்
தாயாகத் தாங்கிடும்நீ
தயவுடனே இவ்வரங்கில்
சந்தத்துடன் துள்ளிவரும்
சத்தம் - கேட்டுத்
தமிழன்னாய் ! தணிந்திடுமென்
பித்தம் !!
எளியவளால் சீர்பெறுமா
பாட்டு - என்
இனியவளே வந்துசுவை
கூட்டு - இன்று
களிப்புடனே கற்கண்டாய்க்
கவிபாடச் செய்திடுவாய்
கைகுவித்து வணங்கிடுவேன்
ஏற்று - உன்
கருணைவிழி மலர்ந்தென்னை
மீட்டு !!
சியாமளா ராஜசேகர்

ஏழ மவ பொலம்பல்...!!

காச்சமரம் சாஞ்சிருச்சி
காத்துகொன்னு போட்டுருச்சி !
கண்ணுபட்டுப் போயிருச்சோ
காலனது வேலதானோ ??
பூச்சூட்டிப் பாத்தபுள்ள
பூப்படஞ்ச செல்லமவ
பூமிக்குப் பாரமுன்னு
புயல்கொண்டு போயிருச்சோ ??
பேச்செழந்து நடபொணமா
பீதியில ஒறஞ்சிநிக்கோம் !
பேக்காத்துப் போட்டஆட்டம்
பேதலிக்க வச்சிருச்சே !!
சீச்சீன்னு யெம்பொழப்பு
சீரழிஞ்சி போயிருச்சே !
சீறிவந்த கசாப்புயலு
செறகொடிச்சிப் போட்டிருச்சே !!
காதடச்சிப் போயிருக்கு
கடும்பசியும் தாங்கலயே
கால்வவுறு நெரம்பலயே
கால்கையில வலுவுமில்ல !!
வேதனையச் சொன்னாத்தான்
வெந்தமனம் ஆறுமய்யா
வேரோட நாசமானா
வேறென்ன செய்வதய்யா ??
ஆதரவா அரசுமில்ல
அக்கறையும் காட்டவில்ல
ஆருசெஞ்ச பாவமிதோ
ஆண்டவனே நீயுமில்ல !!
ஏதுசெய்ய என்னசெய்ய
எடுத்துரைக்க நாதியில்ல
ஏழைமக்க வாக்கையில
என்னைக்கும் ஏத்தமில்ல !!
பாடுபட்ட கழனியெல்லாம்
பாழாக்கிப் போட்டுருச்சே
பாருசாமி எங்கோலம்
பைத்தியமா ஆக்கிருச்சே !!
வீடுவாசல் ஏதுமில்ல
வீதியெது தெரியவில்ல
வேறுபொழப் பேதுமில்ல
விதிப்படியே நடக்கட்டும்
காடுகொண்டு போறவரை
கைகாலு சுகமிருந்தா
காடுகர வெளையவச்சி
கரையேறி பொழச்சிடுவோம்
நாடிவந்து பலவொதவி
நல்லமன சோடுசெஞ்சி
நனையவச்ச சாமிகளே
நன்றிசொல்ல வார்த்தையில்லே !!
சியாமளா ராஜசேகர்

வண்ண விருத்தம் ....!!



வண்ண விருத்தம் !!!
**************************
மழைச்சார லோடு முகிற்கோலம் போட 
***மலைக்கோயில் மீது மயிலோடே 
எழிற்கூடு மாறு தனித்தாடு வேல
***இளைக்காம லோடி வரவேணும் !
அழைக்காத போதும் விழிப்போடு பேணு
***மருட்தேவ னேவு னிணையோடே 
செழிப்பான சோலை மலைக்கார நீயும் 
***சிறப்போடு வாழ அருள்வாயே !
சியாமளா ராஜசேகர்

வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து

செஞ்சாலி சாய்ந்தாடும் தென்றல் தழுவலில்
கஞ்சமது பூக்கும் கதிர்வரவில் - நெஞ்செலாம்
பஞ்சுப் பொதியாய்ப் பறந்து மிதந்திடும்
வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து.
சியாமளா ராஜசேகர்

தென்றல் ...!!!

நதிக்கரை யோரம் நளினமாய்க் கொஞ்சி நடைபழகும்
புதுமலர்ச் சோலையில் பூக்கள் மணத்தில் புரண்டுவரும் 
மதியொளிர் வேளை வருடி யிதமாய் மதிமயக்கும்
அதியழ காக அருவமாய் வந்தே அணைத்திடுமே !!
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்

எழுசீர்ச் சந்த விருத்தம் ...!!!

எழுசீர்ச் சந்த விருத்தம் ..!!!
***************************************
மந்தி யாட மயிலு மாட
மானு மாடி மகிழுதே !
வந்த யானை யோடு காளை
மாடு கூடி யாடுதே !
அந்தி வானை மஞ்சு மூடி
அழகு கவிதை யாகுதே !
இந்த நேர மின்ப மாக
என்ற னுக்கு மானதே !!
சியாமளா ராஜசேகர்

கால் முளைத்த கனவுகள் !!


கால்முளைத்த கனவுகள் !! ( எழுசீர் விருத்தம் )
*************************************
வாடிய உழவர் மாடமா ளிகையில் 
     மகிழ்வுடன் உலவிடக் கண்டேன் !
பாடிய படியே தேக்கினில் செய்த 
     படிகளில் ஏறிட வியந்தேன் !
கூடிய நண்பர் குழுவுடன் சேர்ந்து 
     குறுங்கவி சமைத்திடச் சுவைத்தேன் !
ஈடிலா வின்பம் நுகர்ந்திடும் அவர்தம் 
       இயல்பினைக் கண்டுளம் நனைந்தேன் !

சுற்றிலும் படர்ந்த வயல்வெளி யெங்கும்
     சோர்விலாப் புன்னகை கண்டேன் !
நற்றமிழ் செழிப்பாய் உழுபவர் நாவில் 
     நனிநடம் புரிந்திடக் கண்டேன் !
புற்களின் மேலே பனித்துளி யாவும் 
     பொன்னென மின்னிடக் கண்டேன் !
நெற்கதி ராடச் சுமந்திடும் தாயாய் 
     நிலமகள் மலர்ந்திடக் கண்டேன் !!

தேங்கிய நீரில் மீன்களைக் கொத்தித் 
      தின்றிட நாரைகள் சூழ
ஓங்கிய தென்னை மரங்களின் நிழலில் 
     உழத்தியர் அம்மானை யாடப் 
பாங்கிய ரோடு கும்மிய டித்துப் 
     பழங்கதை களிப்புடன் பேசப்
பூங்குயில் பாட்டில் புத்துணர் வோடு
     பொறுமையாய்ப் பணிதொடர்ந் தனரே !!

பொன்னெழில் சிந்தும் அந்தியில் பரிதி 
     போகவே  வுளமின்றிச் சிவக்கத்
தென்றலி லாடும் நாற்றுகள் திரும்பிச் 
     செல்வோர்க்கு வாழ்த்துகள் கூற 
மென்னகை மாறா முகத்தொடே யவர்கள்  
     விடைபெறும் அழகினைக் கண்டு 
புன்சிரிப் போடு நெல்ஜெய ராமன் 
     புவனத்தி லுயிர்த்திடச் சிலிர்த்தேன் !!

எட்டிய தொலைவில் கால்முளைத் தாற்போல் 
     எழுந்தெதோ செல்வதை யுணர்ந்தேன் !
கட்டிலில் புரள நித்திரை கலைந்து 
     கண்டது கனவென அறிந்தேன் ! 
பட்டினிச் சாவு கண்முனே படமாய்ப் 
     பரிகசித் திடமனம் கசிந்தேன் !
மட்டிலா இன்பம் வழங்கிட இறையை
      வணங்கினேன் கைகளைக்  குவித்தே!! 

சியாமளா ராஜசேகர் 
      

தனிமையில் வருவாளோ ...?? ( எண்சீர் வண்ண விருத்தம் )


எண்சீர் வண்ண விருத்தம்... !!!
*****************************************
சந்தக் குழிப்பு :
********************
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தனதானா
பொலிவொடு பட்டுப் புடவையு டுத்திப் 
     பொடிநடை யிட்டுத் தனிமையில் வருவாளோ ?
சிலையென வெட்கப் படுமிரு சுட்டிச் 
     சிறுவிழி முத்துப் பரலென வொளிவீசும் !
தலைவியை மெச்சிக் கனிவொடு தொட்டுத் 
     தழுவிட யிற்றைக் கினியவள் விடுவாளோ ?
குலமகள் மத்தத் துடனெனை யொட்டிக் 
     குலவிட முத்தச் சுகமது புரிவேனே !!

சியாமளா ராஜசேகர் 

Saturday, November 10, 2018

பிறந்தநாள் வாழ்த்து ....!!! ( காவிரி மைந்தன் )

முத்தமிழும் சொந்தமென உன்னைச் சுட்ட
***முக்கனியின் சுவையினைநின் படைப்பு வெல்ல

முத்தான பாக்களினால் நெஞ்சை யள்ளி
***முழுமதியாய்க் கவிவானில் உலவும் உன்னை
முத்தய்யா முந்திவந்து வாழ்த்து  சொல்ல

***முப்பாலைத் தந்தோனும் ஆசி கூற
முத்தமிட்டுத் தமிழன்னை அணைப்பாள் அன்பாய்
***முல்லைப்பூ புன்னகையால் ஏற்பாய் இனிதே !!!


இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்கு 

காவிரியில் நீரோட ...!!!

எண்சீர்ச் சந்த விருத்தம் ...!!!
****************************************
காவிரியில் நீரோடக் கண்டவுள்ள மாடும் 
***காதலுடன் மன்னவனைக் கண்விரியத் தேடும் !
ஓவியமாய்க் கள்ளமிலா நெஞ்சத்தில் நிறைந்த 
***உத்தமனைக் கரையோரம் காணாமல் வாடும் !
பூவிலுள்ள மதுவுண்ணச் சுற்றிவந்து பாடும் 
***பொன்வண்டைத் தூதனுப்ப அன்புடனே வேண்டும் !
தாவிவரும் சிற்றலைகள் தனிமையிலே நிற்கும் 
***தையலெனைப் பரிவுடனே தள்ளாமற் போகும் !

சியாமளா ராஜசேகர் 

Friday, November 9, 2018

ஒற்றிலாச் சந்த இன்னிசை வெண்பா

(ஒற்றிலாச் சந்த இன்னிசை வெண்பா) 

காதல் நினைவொடு காலை முதலவள்
தூது  செலவொரு தோழி யறிகிலள்
பாடி யழுதனள் பாலை நிலமதில்
வாடி யுருகினள் மாது. 

சியாமளா ராஜசேகர் 

மழைக்கு ஒதுங்கிய வானம் ...!!

களிப்புட னாடுங் கருமுகிற் கண்ட கவின்மயிலாய்
உளத்தினிற் பொங்கு முவகை யிதமாய் உயிர்நனைக்கும்!
குளிர்வளி யோடு குலவிப் பெயலது கொஞ்சிவந்து 
துளித்துளி யாயுடற் தொட்டு நனைக்கும் சுகம்சுகமே !!
சுகத்தினி லுள்ளஞ் சுரங்க ளிசைத்துத் துயில்மறந்து
மகிழ்வுட னன்பாய் வரவேற் பளித்திடும் வான்மழைக்கு
நெகிழ்வுடன் மின்னல் நெளிந்து வளைந்து நிமிர்ந்தொளிர
முகில்களின் கூடலில் முத்த மிடியாய் முழங்கிடுமே !!
முழங்கு மொலியோ முறையாய் வருவதை முன்மொழிய
மழையின் பயணம் வடிவாய்த் தொடங்கி மயங்கவைக்கும் !
கழனி செழிக்க கடைக்கண் திறக்கும் கவின்மழையால்
உழவர் நிலையும் உயர்ந்திட வாழ்வும் உயிர்த்திடுமே !!
உயிர்ப்பொடு நாளு முயிரினம் யாவு முலகினிலே
துயர்களும் நீங்கிச் சுகத்துடன் வாழத் துணையிருக்கும்
இயற்கையைப் பேணுத லென்றும் கடமை யெனநினைப்போம்
பெயல்பொழி வாலே பெரும்பய னுண்டு பிழைத்திடவே !!
பிழைத்திடும் வண்ணம் பெருமழை பெய்திடில் பேறெனவே
விழைந்ததைச் சேமித்தால் மேன்மை யுறலாம் மிகவெளிதாய்
மழையிலை யென்றால் வறுமையும் பஞ்சமும் வாட்டிடுமே
மழையினைப் போற்றி வரமெனப் பண்பாடி வாழ்த்துவமே !!
( கட்டளைக் கலித்துறை )

மலையருவிச் சாரலிலே ....!!!



மலையருவிச் சாரலிலே மனம்சிலிர்த்துத் துள்ளும்
***வழியெங்கும் வெண்மேகம் வந்துமுத்தங் கொஞ்சும் !
குலைதள்ளும் வாழைப்பூ குங்குமமாய்ச் சிவக்கும்
***குளிர்ந்தாடித் தென்றலிலே கொடிமலரும் விரியும் !
வலைதப்பும் கயல்மீன்கள் வடிவாகச் சிரிக்கும் 
***மடைவழியே பாய்ந்திடவே வழிதேடித் திரியும் !
தலைமீதில் தண்ணீருந் தடையின்றிக் கொட்டும் 
***தாமரையும் புன்னகைக்கும் தள்ளாடிக் கொண்டே !!
சியாமளா ராஜசேகர்

இதழகல் நேரிசையகவற்பா ...!!!

இதழகல் நேரிசையகவற்பா..!!!
* * * * * * * * * * * * * * * * * * *.*.*.*.*.
ஆற்றில் கெண்டை யழகாய் நீந்தக்
காற்றி லாடிக் கதிர்கள் சிரிக்கத் 
தென்னங் கீற்றைத் தென்றலா ளசைக்கச்
சின்னச் சின்ன சிறகினை யடித்தே
கிளையினில் நல்லெழிற் கிளிகள்
இளகின காதலில் இதயஞ் சிலிர்த்தே !!
.
சியாமளா ராஜசேகர்

உலகாளும் உமையவளே

உலகாளும் உமையவளே உன்னை யெண்ணி
***உழலுமெனை ஒதுக்காமல் காப்பாய் தாயே !
தலந்தோறும் உன்புகழைப் பாடி நின்றேன்
***தாயேவுன் அருள்பெறவே ஏங்கிநின்றேன் !!
சிலர்வாழ பலர்தாழச் செய்தல் நன்றோ ?
***சிறியேனைக் கடைக்கண்ணால் பார்த்தா லென்ன?
சிலையாக இருந்தாலும் சத்தங் கேட்டுச்
***சிரித்தபடி அரவணைக்க விரைந்து வாராய் !!
மலர்போலும் கவின்முகத்தில் மஞ்சள் பூசி
***மங்களமாய்க் குங்குமத்தில் பொட்டு மிட்டுக்
கலகலவென் றேகையில் வளைகு லுங்கக்
***கருங்குழலில் மல்லிகையின் மணமும் மிஞ்ச
வலக்கையில் திரிசூலம் ஏந்திக் கொண்டு
***வடிவான இடையில்மே கலையும் பூட்டிச்
சலங்கையொலி கொஞ்சிடவே சந்தத் தோடு
***சதுராடி வருமழகைக் காண வேண்டும் !!
குழையாடத் தோள்களிலே மாலை யாடக்
***குறுநகையும் இதழோரம் அழகாய்ப் பூக்க
அழைக்குமுன்னே ஓடோடி வருப வள்தான்
***அன்னையென்றே உனைக்காட்டிச் சிலிர்க்க வேண்டும்!
பிழையேதும் நான்செயினும் தண்டிக் காமல்
***பெற்றவளாய்ப் பொறுமையுடன் உணர வைத்து
மழைபோலும் நின்னருளைப் பொழிந்தே என்றன்
***மனவழுக்கைச் சுத்தமாய்நீ கழுவ வேண்டும் !!
மொழிக்குழறிக் கசிந்துருகிப் பாடும் போது
***முன்வினையால் படுந்துயரைக் களையா விட்டால்
பழிவுனக்கே வந்துசேரும் அறியா யோநீ
***பார்நகைக்கும், தாங்குமோவென் னுள்ள மம்மா !
இழிவாகப் பிறர்பேசும் முன்னர் வந்தே
***எளியேனை யுன்மார்போ டணைக்க வேண்டும் !
விழிமலர்ந்து தலைகோதி முத்த மிட்டு
***மென்விரலால் கண்ணீரைத் துடைப்பாய் தாயே !!!
சியாமளா ராஜசேகர்

கவிஞர் பழனிகுமார் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து ...!!!

அன்பான உறவுகளின் அரவணைப்பில் நீயும்
***ஆறுபத்தை நிறைவுசெய்தே அடுத்தவடி வைத்தாய் !
இன்றுன்றன் பிறந்தநாளில் மனம்நிறைந்த வாழ்த்தை
***இன்றமிழில் சொல்லிடுவேன் ஏற்றுக்கொள் வாயே !
என்றும்நீ உடல்நலமும் உளநலமும் பெற்றே 
***எழுகதிராய்க் கவிவானில் வளையவர வேண்டும் !
பொன்போலும் மிக்கொளிரும் பண்பிலுயர் நட்பே
***புவனத்தில் பேரோடும் புகழோடும் வாழி !!
சித்தமெலாம் குமுகாய நலந்தன்னை நாடும்
***சீர்திருத்தும் எண்ணத்தில் அதுகுறித்தே பாடும் !
சத்தியத்தின் வழிநின்று அறிவுரைகள் சொல்லும்
***சமத்துவத்தை வலியுறுத்தி நற்படைப்பு நல்கும் !
முத்தான கவிதைகளில் மனிதநேயம் பூக்கும்
***முப்போதும் முழுவீச்சில் வாட்டத்தைப் போக்கும் !
தித்திக்கும் தமிழன்னை ஆசிகளால் நீயும்
***சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழி !!
ஈன்றெடுத்த அன்னைமனம் ஈரவிழி யுடனே
***எங்கிருந்த போதுமுனை அன்போடு வாழ்த்தும் !
வான்மேகம் குளிர்ந்துவந்து வாழ்த்துமழை தூவும்
***வளர்நிலவும் வழிமொழிந்து தண்ணொளியால் வாழ்த்தும் !
மேன்மைமிகு நின்பாக்கள் பார்மெச்ச வேண்டும்
***வித்தகனே நின்பெருமை விண்பேச வேண்டும் !
தேன்தமிழ்போல் இனிமையுடன் இளமையொடு நாளும்
****திக்கெட்டும் புகழ்மணக்க நூறாண்டு வாழி !!
அன்பிற்கினிய சகோதரர் கவிஞர் பழனிகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

மழைக்கு ஒதுங்கிய வானம்


#மழைக்கு_ஒதுங்கிய_வானம் 

களிப்புட னாடுங் கருமுகிற் கண்ட கவின்மயிலாய்
உளத்தினிற் பொங்கு முவகை யிதமாய் உயிர்நனைக்கும்!
குளிர்வளி யோடு குலவிப் பெயலது கொஞ்சிவந்து 
துளித்துளி யாயுடற் தொட்டு நனைக்கும் சுகம்சுகமே !!

சுகத்தினி லுள்ளஞ் சுரங்க ளிசைத்துத் துயில்மறந்து 
மகிழ்வுட னன்பாய் வரவேற் பளித்திடும் வான்மழைக்கு 
நெகிழ்வுடன் மின்னல் நெளிந்து வளைந்து நிமிர்ந்தொளிர
முகில்களின் கூடலில் முத்த மிடியாய் முழங்கிடுமே !!

முழங்கு மொலியோ முறையாய் வருவதை முன்மொழிய 
மழையின் பயணம் வடிவாய்த் தொடங்கி மயங்கவைக்கும் !
கழனி செழிக்க கடைக்கண் திறக்கும் கவின்மழையால் 
உழவர் நிலையும் உயர்ந்திட வாழ்வும் உயிர்த்திடுமே !!

உயிர்ப்பொடு நாளு முயிரினம் யாவு முலகினிலே 
துயர்களும் நீங்கிச் சுகத்துடன் வாழத் துணையிருக்கும்
இயற்கையைப் பேணுத லென்றும் கடமை யெனநினைப்போம்
பெயல்பொழி வாலே பெரும்பய னுண்டு பிழைத்திடவே !!

பிழைத்திடும் வண்ணம் பெருமழை பெய்திடில் பேறெனவே
விழைந்ததைச் சேமித்தால் மேன்மை யுறலாம் மிகவெளிதாய் 
மழையிலை யென்றால் வறுமையும் பஞ்சமும் வாட்டிடுமே 
மழையினைப் போற்றி வரமெனப் பண்பாடி வாழ்த்துவமே !!

( கட்டளைக் கலித்துறை )

Wednesday, October 10, 2018

பேத்திக்குப் பிறந்தநாள் வாழ்த்து ....!!!


எங்கள் வீட்டுத் தேவதை
***எழிலாய்ப் பூத்த தாரகை!
தங்க முகத்தில் புன்னகை
***ததும்ப விரியும் நறுமுகை!
செங்க ரும்பின் சுவையெனச்
***சிந்தும் மொழியின் இன்சுவை!
பொங்கும் இன்பத் தேன்நிலா
***பொம்மி இவள்தான் வினுஷரா!
கன்னல் பேச்சில் மயக்குவாள்
***கண்ணால் கதைகள் சொல்லுவாள்!
அன்பால் மனத்தை உருக்குவாள்
***அக்கா வென்றால் உருகுவாள்!
அன்னை தந்தைச் செல்லமாய்
***அமுதத் தமிழின் இனிமையாய்
என்றும் வாழ்வில் சிறந்திட
***இதயங் கனிந்து வாழ்த்துவேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வினுஷரா செல்லம்💐💐💐🎈🎈🎈🎉🎉🎉🎁🎁🎁🎂🎂🎂🍫🍫🍫🌹🌹🌹

Monday, October 8, 2018

தமிழா உடனே விழி ...!!!

தமிழா உடனே விழி ...!!!
********************************

தமிழ னென்று சொல்லடா
தலைநி மிர்ந்து நில்லடா!
அமுத மொழியைக் கேட்டதும்
அகம் சிலிர்க்கு தல்லவா ?
கமழு மலரி ருக்கையில்
காகி தப்பூ தேவையோ ?
நமது தமிழி னிக்கையில்
நஞ்சைக் கலத்தல் நியாயமோ ?
படிக்க எளிய செம்மொழி
பாரிற் சிறந்த இன்மொழி
தடைகள் தாண்டி வந்துநீ
தமிழைத் தாயாய் மதித்திடு !
அடச்சீ நம்மை ஆங்கிலம்
அடிமை யாக்கி யாள்வதா ?
உடன் விழித்துக் கொள்ளடா
உலகைத் தமிழால் வெல்லடா !
கொடுமை கண்டு பொங்கிநீ
கொள்கைக் காகப் போரிடு !
மடமை தன்னை மாற்றிட
மரபின் பெருமை காத்திடு !
திட மனத்தில் துணிவெனும்
திறன் வளர்த்துக் கொள்ளடா !
கடமை யாற்றி உயர்ந்திடு
கர்ம வீரன் வழியிலே !
உழைக்கும் வருக்கம் மேம்பட
உரிமைக் குரலெ ழுப்படா !
அழிவி லிருந்து காத்திடா
அரசால் என்ன பயனடா ?
உழவர் நிலைமைத் தாழ்ந்திடில்
உணவுக் கென்ன செய்குவோம் !
விழிப்பு டன்நீ செயல்பட
வீறு கொண்டெ ழுந்திடு !
மதுவுக் கடிமை யாகிடில்
வாழ்வு நரக மாகிடும் !
மதங்க ளென்ற போர்வையில்
மதம் பிடித்துத் திரிவதா ?
வதைத்த தெல்லாம் போதுமே
மனித நேயம் காத்திடு !
புதிய பாதை வகுத்துநீ
புனித னாக வாழ்ந்திடு !
இயற்கை நமக்கு வரமடா
இதனை நினைவில் வையடா
இயைந்து வாழப் பழகடா
இலையேல் நாசம் நமக்கடா
முயன்றால் வானும் வசப்படும்
முன்னோர் வார்த்தை பலமடா !
தயக்க மென்ன சொல்லடா
தமிழா! விழித்துக் கொள்ளடா !!!

சியாமளா ராஜசேகர்

வெண்பாக்கள்

ஈற்றடிக்கு வெண்பா!
**********************
#நெஞ்சத்தில்_நிற்கும்_நிறைந்து!
கண்ணால் கதைபேசிக் காத லுறவாடி
வண்ணமலர்ச் சோலையில் வந்தணைத்(து) - அன்புடன்
பஞ்சனைய செவ்விதழால் பாவையவள் தந்தமுத்தம்
நெஞ்சத்தில் நிற்கும் நிறைந்து.
சற்றும் விழிகள் சலிக்காமல் பார்க்க,வான்
முற்றத்தில் கோலம் முளைத்திருக்கும் - பற்பல
வண்ணத்தில் பூத்து வளைந்தழகாய்த் தோன்றுமே
விண்ணில் விழுந்த விதை.

முருகன் தோடகம் ...!!


அடியார் மனமே கதியா யுறையும்
அழகா! அலைவாய்க் கரையின் அரசே !
முடியா முதலா மரனின் மகனே!
முருகா குமரா சரணம் சரணம் !! ..1.
உமையாள் தனயா! உயிரே ! உறவே!
உளறி யழுதேன்! உருகித் தொழுதேன்!
தமிழா மமுதைத் தயவா யருளே
தணிகா சலனே சரணம்! சரணம் !! 2.
தொடரும் வினையால் துவளும் பொழுதில்
துணையா யுனையே உளமும் கருதும்
இடமும் வலமும் எளியே னருகில்
எழுவாய் முருகா சரணம்! சரணம் !! 3.
திருமால் மருகா! திருவே! சுடரே!
தெளிவை யருளத் தருண மிதுவே !
குருகுக் கொடியோய்! குறைகள் களையக்
குருவாய் வருவாய் சரணம் சரணம் !! 4.
பிறவிப் பிணிதீர்த் திடவே மயிலில்
பிரிய முடனே இனிதே வருவாய் !
மறவே னுனைநான் வடிவே லவனே
வயலூர் முருகா சரணம் சரணம் !! 5.
துணைவி யருடன் குலவி எழிலாய்
சுகம தருள இனிதே வருவாய் !
பணியு மடியார் பரிவில் மகிழும்
பழனி முருகா சரணம் சரணம் !! 6.
பகலு மிரவும் நொடியும் மறவா
படரும் நினைவைத் தருவாய் பரிசாய்
முகமா றுடையோய்! இளமை யுடையோய் !
முருகா! இறைவா ! சரணம் சரணம் !! 7.
மலருள் மணமாய்க் கனியுட் சுவையாய்
வளியாய் வெளியாய்ப் புனலா யனலாய்
நிலமாய் மலையாய் முகிலுள் துளியாய்
நிறையும் முருகா சரணம் சரணம் !! 8.
சியாமளா ராஜசேகர்
( கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களின் வழிகாட்டலில் எழுதியது )

ராகத்தில் வந்த ரசம் ...!!!

ஈற்றடிக்கு வெண்பா....!!!
*************************
மங்கள மார்கழியில் மாலைப் பொழுதினில்
சங்கீத முள்ளத்தைத் தாலாட்டும்! - பொங்கிடும்
சோகத்தி லும்சுவைக்கும் தூய பிலஹரி
ராகத்தில் வந்த ரசம்.
காற்றில் தவழ்ந்துவந்து காதோரம் தேன்பாய்ச்சும்
ஊற்றாய்ப் பெருகி உளமுருக்கும்! - வீற்றபடி
பாகவதர் மெய்யுருகிப் பாடிய பைரவி
ராகத்தில் வந்த ரசம்.
அள்ளிப் பருகிட ஆவலுடன் காத்திருந்து
தெள்ளுதமிழ்ப் பாட்டைச் செவிகேட்க - உள்ளத்தின்
தாகந் தணிக்குமோ சாயா தரங்கிணி
ராகத்தில் வந்த ரசம்.
சாயாதரங்கிணி - இராகத்தின் பெயர்

சந்த வேற்றொலி வெண்டுறை



நதியோடும் வழியெங்கும் நாணல்புல் அசைந்தாட
நளினம் கொஞ்சும் !
கதிராடும் கழனியிலே காற்றுடனே கதைபேசிக் 
கண்கள் துஞ்சும் !
மதியின் வரவில் மனமுந் துள்ளக் 
கொதித்த நினைவும் குளிர்ந்தி டாதோ ?
சியாமளா ராஜசேகர்