Wednesday, April 29, 2015

சாட்டை சுழற்று ....!!

பச்சைவண்ணப் பட்டுடுத்தி 
பொன்னணி கலன்பூட்டி 
வாசமல்லிச் சரஞ்சூடி 
வாட்டமான மனதோடு 
நாணத்தால் தலைகவிழ 
நான்நின்றேன் உன்முன்னே !! 

மண்பார்த்து நின்றயெனை 
கண்நோக்கிப் பார்த்தநொடி 
உன்முகம்போன போக்கென்ன ? 
உன்னுறவுகளும் முழித்ததென்ன ? 
களையானபெண்ணென்று
 தரகருஞ் சொன்னாரோ ? 
கருப்பென்றஉண்மைதனைச் 
சொல்லாது மறைத்தாரோ ? 

வாய்பேசாது வயிறுநிறைத்து 
போய்ப்பின்னே சொல்வோமென 
விடைபெற்றுச் சென்றீரே .... 
விடையிலெனைக் கழித்தீரே ...! 
மங்கையுள்ளங் கொதிக்கிறதே ... 
கங்கைபோலப் பொங்கிடுதே ...! 

குணம்பாராமல் நிறங்கண்டாய் 
குறையென்றே புறக்கணித்தாய் ! 
காக்கைச்சிறகின் வண்ணத்தில் 
கண்ணனைக்கண்ட மீசைபாரதியே ! 
மீண்டுமுதித்துவா முண்டாசுகவியே ! 
வண்ணபேதமொழிய சாட்டைசுழற்று ...!!

No comments:

Post a Comment