Wednesday, October 30, 2019

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல்
* * * * * * * * * ** * * *
சந்தக்குழிப்பு
* ** * *** *** * *
தந்ததன தானனன தந்ததன தானனன
தந்ததன தானனன தனனானா
மஞ்சுதவழ் வானமதி லம்புலியும் பேரழகு
வண்டலுட னாறுகளு மழகேதான் !
வண்டமரும் பூவிதழில் வெண்பனியி னீரமதில்
வந்தொளிரு மேகதிரு மெழிலோடே !
செஞ்சிறிய கால்களொடு தண்டலையில் நீலமயில்
திந்திமிதி தீதியென வடிவோடே !
தென்றலுட னாடிவர மங்கையுளம் போலவது
சிந்தைமகிழ் வோடுநட மிடுதேகாண் !
கொஞ்சிவரு பூமணமும் வஞ்சிமகள் மேனியொடு
கொஞ்சமுற வாடவென வரலாமோ ?
கொண்டலொடு தேவதையின் நெஞ்சுதவழ் சேலையொடு
குந்தளமு மாடுகையில் மனமாடும் !
விஞ்சுமெழி லோடுநதி நங்கையென வோடுமுனை
விண்பறவை யேறிவர விடுவேனே ?
விந்தைதனை யேபுரியு மன்புமிக வேபெருக
மென்சிதர மாயெனையு மணைவாயே !!
சியாமளா ராஜசேகர்

Tuesday, October 22, 2019

அரவணைக்கத் தயங்காதீர் ....!!!

பத்துத் திங்கள் கருவறையில்
பாசத் தோடு சுமந்திருந்தாள்!
தத்தித் தவழ்ந்து நடைபழகத்
தன்னை மறந்து மகிழ்ந்திருந்தாள்!
முத்த மழையால் குளிர்வித்தாள்
மூச்சாய்க் கருதி அரவணைத்தாள்!
பொத்திப் பொத்தித் தான்வளர்த்தாள்
புதிராய் ஒன்றும் தோன்றவில்லை!!

நாளும் பொழுதும் பறந்தோட
நானும் வளர்ந்தேன் பொலிவோடு!
ஆளைப் பார்த்தால் ஆணுருவம்
ஆனால் பெண்மை உள்சுரக்கும்!
நீளும் இரவு கண்ணீரில்
நெஞ்சங் கசியும் செந்நீரில்!
மீள வழியே தெரியாமல்
மிரண்டேன் துவண்டேன் பெண்ணுளத்தில் !
புரிந்து கொள்ள யாருமில்லை
பொய்யாய் வேடம் பிடிக்கவில்லை!
திரித்துக் கதைகள் வெளிக்கிளம்பத்
திகைத்த தாயும் வெறுப்புமிழ்ந்தாள்!
விரிந்த உலகில் ஆறுதலாய்
விழிநீர் துடைக்க விரலின்றிப்
பிரியத் துணிந்தேன் உறவுகளைப்
பிரியா விடையும் பெற்றுவிட்டேன்!!
பட்ட துன்பம் கொஞ்சமில்லை
பரிக சிப்பும் நிற்கவில்லை!
தொட்டுப் பின்னால் தொடர்ந்துவந்து
தொல்லை கொடுத்த பாதகரை
வெட்டிச் சாய்க்க மனந்துடித்தும்
வெறுப்பை வெளியில் காட்டவில்லை!
சுட்ட கல்லே உறுதிபெறும்
சுயத்தை யுணர்ந்தே அமைதிகொண்டேன்!
சொல்லில் வடிக்க வியலாத
சோகத் தில்நான் கரைந்துவிட்டேன்!
கல்லுக் குள்ளுந் தேரைக்குக்
கருணை யோடு வழிவைத்த
நல்ல வன்தான் இறைவனவன்
நைந்த வுள்ளம் தேற்றிவிட்டான்!
இல்லை யென்றால் மண்ணுலகில்
இல்லா மல்தான் போயிருப்பேன்!!
பழித்துப் பேசும் உலகோர்முன்
படித்துப் பணியில் அமர்ந்தபடி
உழைத்தேன் கவனம் சிதறாமல்
உயர்வை எட்டிப் பிடித்துவிட்டேன்!
பிழையாய்க் கருதிப் புறக்கணித்தோர்
பெருமை யுடனே அண்டிவர
மழைபோல் ஈர மனத்துடனே
மகிழ்வாய் உதவி செய்கின்றேன்!!
தானே விரும்பி ஏற்றதுவா
தலைவன் படைத்த படைப்பன்றோ?
ஊனோ டெலும்பி னாலான
உடலைத் தானே கொண்டுள்ளோம்?
ஏனோ இழிவாய் எண்ணுகிறார்
எள்ளி மகிழ்வு கொள்கின்றார்!
ஆனால் இனியும் வதைக்காதீர்
அரவ ணைக்கத் தயங்காதீர்!
சியாமளா ராஜசேகர்

அப்பாவென நீயழைக்கையில்....!!!

அப்பாவென நீயழைக்கையில் அகமுழுவதும் சிலிர்க்கும்
எப்போதுமுன் எழிற்பூமுகம் இதயந்தனி லினிக்கும்
முப்போதிலு மென்நெஞ்சமுன் முத்தங்களை நினைக்கும்
ஒப்பாருனக் கிலையெனும்படி உயர்வெய்திட மலைக்கும் !!

துவளுங்கண முன்பார்வையில் துடித்தெழுந்திட வேண்டும்
உவகையில்மனம் துளிர்த்தாடிட உயிர்பூத்திட வேண்டும்
தவப்பயனென ஊர்மெச்சிடும் தகைமையைப்பெற வேண்டும்
அவையத்துனை முன்நிறுத்தியென் அகங்குளிர்ந்திட வேண்டும் !!
அறிவைத்தரும் சிறப்பைத்தரும் அமுதத்தமிழ் பயில்வாய்
அறப்பணிகளில் மனம்லயித்திடில் அன்பேசிவம் உணர்வாய்
சிறகுகள்விரி! தடைகளைமுறி! சிகரத்தினைத் தொடுவாய்
திறன்வளர்த்திடு கடுமுழைப்பொடு செயல்முடிவுற மகிழ்வாய் !!!
சியாமளா ராஜசேகர்

Thursday, October 17, 2019

வருவாயா ...??

அள்ளவள்ளக் குறையாத அமுதமென நகையுணர்வால்
உள்ளவரை மகிழ்வித்தாய் ! உள்ளத்தில் நிறைந்துவிட்டாய் !
கள்ளமிலா வுனைநினைத்தால் கண்ணீரும் பெருகுதய்யா !
பிள்ளைமொழி போலும்யாம் பிதற்றலன்றி என்செய்வோம் !!

கண்ணைவிட்டுப் போனாலும் கருத்தைவிட்டுப் போகவில்லை 
வெண்பாட்டு நிற்கவில்லை வெற்றிடமாய் விடவில்லை !
நண்பன்தான் தொடர்கின்றான் நாள்தோறும் உன்நினைவில் 
வண்ணத்தில் பாட்டெழுத வருவாயா கிரேசியண்ணா...!!!

சியாமளா ராஜசேகர் 

கண்ணதாசா ...!!!

கற்றோரும் மற்றோரும் எளிதாக விளங்குவண்ணம்
கவியரசா நீவடித்தாய் பாட்டு !
காற்றோடு கலந்தினிக்கும் காலமெல்லாம் புகழ்கூட்டும்
கண்ணதாசா உனக்கில்லை மாற்று !!
சொற்சுவையும் பொருட்சுவையும் நயங்கொஞ்சும் எழில்நடையும்
துள்ளிவரு மின்சந்தத் தோடு
சுகமாக நெஞ்சள்ள சோகத்தை யும்மறந்து
சொக்கித்தான் போகிறோமே கேட்டு !!
வற்றாத ஊற்றாக வளமான தத்துவங்கள்
வாழ்விற்கு நல்லவழி காட்டும் !
மனநோய்க்கு மருந்தாக உறவாட விருந்தாக
மயிலிறகாய் வருடித்தா லாட்டும் !!
முற்றாத இளமையொடு குன்றாத பொலிவோடு
முத்தாக ஒளிவீசி மின்னும் !
முப்போதும் தப்பாமல் திக்கெட்டும் ஒலித்திருக்கும்
முத்தையா நின்பாக்கள் என்றும் !!
தெவிட்டாத பாசமைத்தாய் தினந்தோறும் பருகுகிறோம்
தீரவில்லை இன்னுமெங்கள் தாகம் !
தேமதுர மொழியினிலே தேவசுக மீட்டலிலே
தென்றலுக்கும் பிறவாதோ மோகம் ??
கவிமகனே! உன்படைப்பை மிஞ்சுதற்கு நீயிந்தக்
காசினியில் பிறப்பெடுப்பாய் மீண்டும் !
கவல்போக்கும் களிம்பாகிக் காயத்தை ஆற்றிவிட
கடவுளுனை இங்கனுப்ப வேண்டும் !!
செவிகுளிர இனுஞ்சொல்லி நம்பிக்கை ஒளியூட்டச்
சித்தனுன்றன் தத்துவமும் வேண்டும் !
திருநீற்றுக் கீற்றோடு நெற்றியிலே பொட்டிட்டுச்
சிறுகூடற் பட்டியானே வாராய் !!
புவியினிலே உன்புகழைப் பாடுவதே தன்பணியாய்ப்
போற்றிவாழும் அன்பருளர் பாராய் !
பொலிவான சிலைவைத்துப் பெரும்பேறாய் அதைநினைத்துப்
பூசிப்போர் பூரிக்க வாராய் !!!

சியாமளா ராஜசேகர்
பாரதி தேவி 
****************
பொறுப்புடன் கடமை தவறாமல் 
****புகழுக்கு மயக்கம் கொள்ளாமல் 
திறமையும் துடிப்பும் மிகக்கொண்டு 
****செம்மையாய்ச் சேவை உளத்தோடு 
சிறப்புடன் மக்கள் பணியாற்றும் 
****திருமதி பாரத தேவியுனை 
இருகரம் கூப்பி வரவேற்பேன் 
****இக்கணம் வருக வருகவென்றே...!!!

பட்டாசு பஜாருக்கு பாரத தேவியே வருக !!!

அமுதவல்லி 
******************
குழந்தை பெண்கள் முதியோரின்
****குறைகள்  தீர்க்கும் நன்மணியே! 
தழைக்கச் செய்தாய் நலத்திட்டம் 
****சமூக நலத்துறை ஆணையராய் 
பழகிட இனிய பெண்மணியே 
****பட்டாசு பஜாரைத் திறந்துவைக்க 
அழைத்தோம் உனையே விருந்தினராய் 
****அமுத வல்லி வாருங்கள் !

சுற்றுலாத்துறை இயக்குனரே வருக வருக 

வெள்ளையன் 
***************

வெள்ளை மீசை முறுக்கோடு
***வெற்றிப் புன்னகை எழிலோடு 
கள்ள மில்லா  உளத்தோடு
***கருணை பொங்கும் விழியோடு 
துள்ளல் நடையில் மிடுக்கோடு 
***துடிப்பாய்ப் பேசும் சிறப்போடு
வள்ளல் உன்னை அழைக்கின்றேன் 
***வணிகர் சங்கத் தலைமையே .....

வருக வருக 


Friday, October 11, 2019

முறையோ சொல்வாய்

கதியென்று கட்டத்தை முழுதாய் நம்பிக்
காலத்தைக் கடத்துவது முறையோ சொல்வாய் !
விதியென்று மனம்நொந்து முடங்க லாமோ
வீறுகொண்டு செயலாற்றப் பழகிக் கொள்வாய் !
எதிர்நீச்சல் போட்டால்தான் வெற்றி கிட்டும்
எதற்குமச்சங் கொள்ளாமற் துணிந்து நிற்பாய் !
மதிசொல்லும் வழியினிலே நடை பயின்றால்
மதிப்போடு வாழ்ந்திடலாம் புவியில் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

பாரதி ...!!!

முகத்தில் ஞான வெளிச்ச மேவு
முறுக்கு மீசை பாரதி !
மொழிக்குள் நாத மொலிக்கு மாறு
முழக்கி வீசும் பாநதி !
அகத்து ளாயு மழுக்கை வேரொ(டு)
அகற்று மாவ லோடவன்
அழித்த வாசை அடக்கி யாள
அதிர்த்த லோடு பாடினன் !
சுகத்தை நாடி அவத்தை யோடு
சுறட்டு வோரை ஏசினன் !
சுவைக்கு மாறு கவிக்கு ளோடு
சுழற்றி வாளை வீசினன் !
நெகிழ்ச்சி யாக வடித்த பாவின்
நிறத்தில் வேறு பாடிலை !
நிலத்தில் நேய மிகுத்த மேதை
நினைப்பில் நாளும் வாழியே !!
சியாமளா ராஜசேகர்

முடியரசர் புகழ் வாழி ...!!!

கொள்கைநெறி பிறழாத தன்மானத் தங்கம்
கொடுமைகளைக் கொதித்தெதிர்க்கும் பகுத்தறிவுச் சிங்கம் !
எள்ளளவும் புகழுக்கு மயங்காத கோமான்
ஏழ்மைநிலை யுற்றபோதும் மண்டியிடாச் சீமான் !
வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் பைந்தமிழின் சுவைஞன்
வீறுகவி யரசரென்ற பெரும்புரட்சிக் கவிஞன் !
கள்ளனைய சுவைகூட்டும் மரபுகவிச் சுரங்கம்
கற்கண்டு கவிக்கேட்டால் மயங்கிநிற்கும் அரங்கம் !!
சொல்லொன்று செயல்வேறாய் மாற்றமேது மின்றிச்
சொன்னவண்ணம் இறுதிவரைச் செயல்பட்ட தீரன் !
பொல்லாங்கு கண்டுவிட்டால் எரிமலையாய் வெடித்துப்
பொசுக்கிவிடத் தான்துணிந்த பெரியாரின் நேயன் !
பல்கலையின் வித்தகனாய் இனமானம் காத்த
பாவேந்தர் பரம்பரையின் பாசமிகு சீடன் !
வில்லாகப் புறப்பட்டுக் கனல்கவிகள் பாய்ச்சி
வீரமுழக் கஞ்செய்த காரைநகர் வாசன் !!
கத்தியின்றிப் போராடக் கையிற்கோ லேந்திக்
கவிதைகளால் சமத்துவத்தைப் போதித்த ஞானி !
எத்திக்கும் தமிழ்முழங்கப் பெரும்பாடு பட்ட
ஈடிலாப் பாக்கடலின் ஒப்பற்ற தோணி !
தத்தளித்த குமுகாய அவலத்தைத் திருத்திச்
சாதிமத வேறுபாட்டை நிமிர்த்திவிட்ட ஏணி !
முத்தமிழே மூச்சாகப் பேச்சாக வாழ்ந்த
முடியரசன் புகழென்றும் செந்தமிழ்போல் வாழி !!
சியாமளா ராஜசேகர்

நாடிவந்தளிப்பான் நலம் ...!!!

வெண்சங்கு மேனியனை வெற்றிதரும் நாயகனைக்
கண்ணாரக் கண்டு களித்தேன்யான்! - தண்டமிழில்
பாடி யுருகிப் பதம்பணிந்தேன் வேழமுகன்
நாடிவந்த ளிப்பான் நலம்.

சியாமளா ராஜசேகர்

கருணை காட்டு ...!!!



அணைத்துவிட் டாயோ அமேசான் வனத்தீ
சுணங்காம லோடியிசைத் தூறி ! - இணையில்லா
மாதவனே ! மெய்சிலிர்க்க வைக்கும் சிவந்தவுன்
பாதத்தை நக்கும் பசு.
குழலூதி யெம்முள்ளம் கொள்ளைகொண்டு விட்டாய்
மழைபோலன் பைப்பொழிய வாராய் - அழகாய்
இடைவளைத் தாடும் இடையர் குலத்தோய் !
கடைக்கண்ணா லுன்கருணை காட்டு.
ஓவியம் - கேசவ்ஜி

ஆசானுக்கு வாழ்த்து ...!!!

நெஞ்சினிக்கும் செம்மொழியாம் பைந்தமிழோ டுறவாடும்
நேயக் காரன் !
கொஞ்சுதமிழ்ப் பாக்களினால் கோடியின்பச் சுவைதன்னைக்
கூட்டும் மாயன் !
அஞ்சாமல் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைப்போல்
ஆற்றல் மிக்கோன் !
நஞ்சென்று பிறவொதுக்கித் தனித்தமிழைச் சீராட்ட
நாட்டம் கொண்டோன் !!
கொண்டலெனப் பொழிந்தாலும் தணியாத தமிழ்ப்பற்று
கொண்ட கோமான் !
கண்ணிமையாய்ச் செந்தமிழின் சீரான மரபுகாக்கும்
காவல் காரன் !
வண்டமிழாள் மலரடியை இதயத்தில் தான்பதித்த
வரத ராசன் !
எண்ணற்ற பாவலரைச் சோலையிலே வளர்த்துவிடும்
எங்கள் ஆசான் !!
ஆசானென் றாலிவர்போல் மிகவாழ்ந்த தெளிவான
அறிவு வேண்டும் !
காசாக்க முயலாமல் கற்றவற்றைப் பிறர்க்களிக்கும்
கருணை வேண்டும் !
கூசாமல் விருதுக்கு விலைபோவோர் மத்தியிலே
குன்றாய் நின்று
பேசாமல் அமைதியாகப் பலபுதுமை செய்துயரப்
பெருமை பெற்றோன் !!
பெற்றமக வைப்போல்தான் நிறுவியபாச் சோலையினைப்
பேணிக் காக்கும்
நற்றமிழ்த்தாய் தவப்புதல்வ னாம்வரத ராசனையிந்
நாடே போற்றும் !
கற்பித்த லைவிரும்பிக் கைம்மாறு கருதாமல்
கடமை யாற்றும்
வற்றாத தமிழ்நதியை மனதார வாழ்த்துமிந்த
வையம் என்றும் !!
என்றுமுள தென்றமிழின் தேமதுர மரபுதனை
எல்லோ ருக்கும்
கன்னலெனச் சாறெடுத்தே எளிதாகப் புகட்டிவிடும்
கனிந்த உள்ளம்
குன்றனைய உயர்வான புகழீட்டி எந்நாளும்
குறையில் லாத
நன்மணியாய் ஒளிவீசும் பாவலரை வணங்கியன்பாய்
நன்றி சொல்வோம் !!
சொல்வோம்பைந் தமிழ்ச்சோலைக் குயில்களெல்லாம் வாழ்த்துகளைத்
தூய அன்பால்
கல்லையும்பொற் சிலையாகச் செதுக்கியநம் சிற்பிக்குக்
கவிதை யாலே !
நெல்லுக்குள் மணியாக மறைந்திருக்கு மிவர்பெருமை
நீடு வாழ
வல்லவளாம் தமிழன்னைப் பொற்பாதம் வணங்கியொன்றாய்
மகிழ்வோம் யாமே !!
( எங்கள் ஆசான், பைந்தமிழ்ப்பேராசான், மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களுக்கு சோலையின் நான்காம் ஆண்டு நிறைவுவிழாவில் , 20 கவிஞர்கள் யாத்த 'பைந்தமிழ்ச் சோலை பன்மணிமாலை என்ற ' நூலைக் காணிக்கையாக்கினோம்.. அதில் நான் எழுதிய பாக்கள் )
சியாமளா ராஜசேகர்

பைந்தமிழ்ச் சோலை ...!!!

பைந்தமிழ்ச் சோலை ....!!!
***********************************
பாமலரும் சோலையிது பைந்தமிழின் சோலை
பாவலர்மா வரதராசன் தோற்றுவித்த சோலை !
தேமதுர மரபிலவர் பயிற்றுவிக்கும் சோலை
தீந்தமிழை முகநூலில் அலங்கரிக்கும் சோலை !
நாமகளும் நனியழகாய் நடமாடும் சோலை
நற்றமிழாள் மகிழ்ச்சியுடன் உறவாடும் சோலை !
பூமணத்தை விஞ்சிநிற்கும் பாமணத்தை நுகர்ந்தோர்
பூரிப்பில் மனமுவந்து வாழ்த்துகின்ற சோலை !!
விருத்தங்கள் விளையாடத் திளைத்திருக்கும் நெஞ்சம்
வியக்கவைக்கும் சந்தத்தில் வண்ணங்கள் கொஞ்சும் !
அருவியென வெண்பாக்கள் அமுதாகப் பொழியும்
அதில்நனைந்த உள்ளத்தில் கவிபொங்கி வழியும் !
இருள்விலக்கும் தமிழ்க்கூடல் நினைத்தாலே இனிக்கும்
இணையில்லாச் சேவைகண்டு விழியிரண்டும் பனிக்கும் !
பெரும்பேறு பெற்றதனால் இணைந்தோமிச் சோலை !
பேரழகாய்ச் சூட்டிடுவோம் யாப்பினிலே மாலை !!
பெருங்கவியாம் பாவலரின் வழிகாட்ட லோடு
பீடுநடை போடும்பைந் தமிழ்ச்சோலை பாரில் !
திருவண்ணா மலையினிலும் தன்கிளையை விரித்துச்
சிறப்பாக ஓராண்டை நிறைவுசெய்த சோலை !
அருந்தமிழின் எழில்மரபைக் காப்பதேதன் பணியாய்
அரவிவேகா னந்தனிங்கே செயலாற்றும் சோலை !
விருந்தாக மாதமொரு கவியரங்கம் நடத்தி
வெற்றிக்கு வித்திட்ட திருவருணைச் சோலை !!
பொறுப்போடு கற்பிக்கும் பயிலரங்கம் உண்டு
போட்டிகளு முண்டிங்கே விருதுகளும் உண்டு!
சிறப்பான ஏடுகளின் அறிமுகமு முண்டு
சிந்தைக்கு விருந்தாகச் சிறப்புரையு முண்டு !
முறையோடு நெறிப்படுத்தும் முனைவரிவர் தொண்டால்
முத்தமிழும் மனங்குளிரும் பேரவையைக் கண்டு !
குறைவின்றி இச்சோலை பணிசிறக்க வேண்டும்
குவலயமே வியக்குவண்ணம் உயர்வடைய வேண்டும் !!
தேவைகளைக் கண்டுணர்ந்து புகட்டும்நற் றாயாய்
செந்தமிழைத் தெவிட்டாமல் ஊட்டிவிடும் சோலை !
பாவகைகள் பலவற்றை ஆவலுடன் இங்கே
பாட்டறிந்த புலவோரும் கேட்டறிந்து செல்வார் !
காவியமும் படைத்திடுவார் மரபறிந்த பின்னால்
கணினிவழிக் கனித்தமிழைக் கற்பிப்பார் பின்னாள் !
பாவலரால் உருவான பைந்தமிழின் சோலை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழி !!
சியாமளா ராஜசேகர் !
( பைந்தமிழ்ச் சோலை திருவண்ணாமலைக் கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்த கவிப்பொழிவில் வாசித்த கவிதை )

பாடு பாடு பாடு பாடு

பாடு பாடு பாடு பாடு
பணிவுடன் பாடு !
பாவம் தீரக் கண்ணீர் மல்கப்
பரமனைப் பாடு !
தேடு தேடு தேடு தேடு
சித்தனைத் தேடு !
சிந்தை குளிரச் செய்யு மினிய
தேவாரம் பாடு !
நாடு நாடு நாடு நாடு
நம்பிக்கை யோடு !
நல்ல வண்ணம் வாழ வைப்பான்
நற்றுணை யோடு !
கூடு கூடு கூடு கூடு
கோயிலில் கூடு !
கொஞ்சு மொழியில் நெஞ்ச முருகிக்
கூத்தனைப் பாடு !
ஆடு ஆடு ஆடு ஆடு
அன்புட னாடு !
ஆடல் வல்லான் ஆடி வருவான்
அம்பிகை யோடு !
காடு போகு முன்னர் ஈசன்
கழலடி பற்று !
காம குரோத லோப மென்ற
கயமைகள் விட்டு !!
வீடு பேற்றை யளிக்க வல்ல
வேதங்கள் ஓது !
வெண்ணீ றணிந்த இறைவன் பார்க்க
விலகிடும் தீது !!
சியாமளா ராஜசேகர்

பன்னிரண்டுசீர் விருத்தம் ...!!!

கருணைக் கடலென்று கருதி உனைநம்பிக்
கந்தா ஓடிவந்தேன் !
கவலை வறுத்தெடுக்கக் கண்ணீர் ஊற்றெடுக்கக்
கதறி அழுதுநின்றேன் !
இருளில் ஒளிதேடி ஏழை படும்பாட்டை
இறைவா அறியாயோ ?
இதயம் குளிர்விக்க அன்போ(டு) அரவணைக்க
இனியும் தயக்கமென்ன ?
மருதா சலனுன்னை மனத்தில் நினைத்தபடி
மலையி லேறிவந்தேன் !
வழியில் மயிலாட அதுதான் நீயென்று
மௌன மாய்ச்சிலிர்த்தேன் !
அருளைப் பொழிவதற்குச் சற்றும் மனமிலையா
அழகா இதுமுறையா ?
அடிமேல் அடிவிழுந்து துடிக்கு மிதயத்தை
அன்பால் வருடாயோ ?? 1.
வெள்ளைப் பட்டுடுத்தி நீல மயிலேறி
வீடு பேறருள
வெற்றி வேலேந்தி சேவற் கொடியோடு
விரைந்து வரவேண்டும் !
அள்ளும் அழகிலிரு வல்லி மாரோடும்
அன்னை தந்தையோடும்
அண்ணன் கணபதியும் துணையாய் உன்னுடனே
ஆடி வரவேண்டும் !
துள்ளி வருங்கோலம் விழிகள் கண்டவுடன்
துன்பம் விலகியோடத்
தொடரும் இன்பத்தில் உள்ளம் நெகிழ்ந்தபடிச்
சுகமாய் நனையவேண்டும் !
வள்ளல் உன்புகழைத் தெள்ளு தமிழில்நான்
வடித்து மகிழவேண்டும் !
வற்றாக் கவிமழையில் உன்னைக் குளிர்வித்து
வாழ்த்து பெறவேண்டும் !! 2.
கல்லாய் இருந்தாலும் கண்ட கண்களிலுன்
காட்சி கிடைத்துவிட்டால்
கள்ளம் அழிந்துவிடும் உள்ளம் தெளிந்துவிடும்
கவலை தோற்றோடும் !
சொல்லே எழும்பாமல் சும்மா இருப்பதுதான்
சுகமென் றுணருமுள்ளம் !
சுற்றி நடப்பதெல்லாம் அழுத்தம் தந்தாலும்
சுமையாய்த் தோன்றாது !
முல்லை மலர்போலும் முத்து நகைசிந்தி
முருகா வந்திடுவாய் !
மூல மந்திரத்தை ஓதும் அடியவரின்
மூளும் வினைதீர்ப்பாய் !
புல்லில் பனித்துளிபோல் நிலையில் லாவாழ்வைப்
புரிய வைத்திடுவாய் !
பொன்னை நிகர்த்தவுனைப் பொலிவில் சுந்தரனைப்
போற்றி வணங்குவனே !! 3.
கொஞ்சு தமிழ்பேசும் அடியார் மனங்களிலே
குமரா களித்திருப்பாய் !
கோல விழியாளின் பாகு கனிமொழியில்
குளிர்ந்து மகிழ்ந்திருப்பாய் !
கஞ்ச மலர்ப்பாதம் பற்றிப் பணிவோரைக்
கனிவாய்க் காத்திடுவாய் !
கழலில் சிலம்பொலிக்க ஆறு தலையளிக்கக்
கடம்பா ஓடிவாராய் !
தஞ்ச மடைந்தோரைத் தணிகை வேல்முருகா
தயவாய்த் தாங்கிடுவாய் !
தங்கத் தேரேறிப் பவனி வரும்போது
தமிழால் வாழ்த்திடுவாய் !
பஞ்சா மிர்தமென வாழ்வின் சுவைகூட்டிப்
பத்தர் உளங்கவர்வாய் !
பழனி மலைமீதில் தண்டா யுதபாணி
பாலா அருள்புரிவாய் !! 4.
அலைகள் முத்தமிடும் செந்தூர்க் கடலோரம்
அழகாய் வீற்றிருப்பாய் !
அசுர வதஞ்செய்து தேவர் குலங்காத்தே
அமைதி யாகநிற்பாய் !
தலைகள் ஓராறு கொண்ட அறுமுகவா
தகப்பன் சாமிநீயே !
தரும மிகுசென்னை கந்த கோட்டமெனும்
தலத்தில் உறைபவனே !
மலையில் முகிலிறங்கி மாயோன் மருகனுன்னை
வணங்கும் எழில்கண்டேன் !
மயில்கள் நடனமிடும் விராலி மலையிலுன்றன்
மயக்கும் காட்சிகண்டேன் !
நிலைத்த பத்தியினால் கன்னல் திருப்புகழை
நித்தம் பாடிடுவேன் !
நெஞ்சம் கசிந்துருகிப் பாட நீகேட்டு
நிறைவாய் ஆட்கொளவா !!! 5.
சியாமளா ராஜசேகர்

என்ன தவம் செய்தோம் ...!!!


என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
எழில்கொஞ்சும் திருநாட்டில் இப்பிறப்(பு) எடுத்தோம் !
பொன்னான பல்வளங்கள் நிறைந்தெங்கும் மிளிரப்
பூமித்தா யின்கொடையாய் இயற்கைவரம் பெற்றோம் !
அன்பொன்றே சிவமென்ற சித்தர்வாக்(கு) உணர்ந்தோம்
அன்னைதந்தை முதற்கடவுள் என்றுபணியக் கற்றோம் !
பன்மொழிகள் இப்புவியில் பவனிவந்த போதும்
பைந்தமிழே முதன்மையென்று மார்தட்டி நின்றோம் !!
பழங்காலக் கோயில்கள் கலைநயத்தைக் காட்டப்
பண்பாட்டில் சிறந்திருந்த பெருமையைமதித்தோம் !
அழிவில்லா இலக்கியங்கள் தமிழ்மொழியில் தோன்றி
அறநெறியை எடுத்தியம்ப நல்வழியறிந்தோம் !
வழுவில்லா இறையுணர்வால் பக்திநெறி யோங்க
வளமையான பனுவல்கள் வரமாகப் பெற்றோம் !
எழுச்சியுறச் செய்தபல கவிகளின் படைப்பை
எல்லையில்லா மகிழ்வுடனே இதயத்தில் பதித்தோம் !!
எத்தனையோ இருந்தாலும் நிறைவென்னுள் இல்லை
இன்றமிழில் எழுதுவதே இன்பமென்று ணர்ந்தேன்!
தித்திக்கச் சொல்லடுக்கிக் கவிவனைந்த போதும்
சிறிதேனும் அதிலுள்ளம் அமைதிகொள்ள வில்லை !
சத்தான மரபினிலே நாட்டமிகக் கொண்டு
தணியாத தாகத்தில் முதலடியெடுத்தேன் !
முத்தாக மணியாகச் சுடர்விட்ட குழுவை
முகநூலில் இனங்கண்டு மகிழ்விலுளம் பூத்தேன் !
மரபுகற்றுக் கொடுக்கும்பைந் தமிழ்ச்சோலை வாசம்
மனத்தையள்ள பாவலரின் சோலையிலி ணைந்தேன் !
வரமென்றே தான்கருதிப் பயிற்சியில்பங் கேற்று
மாவரத ராசனிடம் பாட்டியற்றக் கற்றேன் !
அரும்பாக்கள் சோலையிலே பூத்துமணம் வீச
அழகழகாய்ப் பலவகையில் மரபில்சமைத்தேன் !
தருவாகப் பயன்கருதாத் தமிழ்த்தொண்டு செய்யும்
தமிழ்மகனைக் கண்டதுமென் தவப்பயனால் தானோ ??
என்போன்றே பலருக்கும் தன்னார்வத் தோடே
எளிமையாகக் கற்பிக்கும் பாவலரின் சேவை
முன்பைப்போல் எஞ்ஞான்றும் அன்புள்ளத் தோடு
முழுவதுமாய் வற்றாமல் முகநூலில் தேவை !
கன்றுகளின் பசியறிந்து பால்புகட்டும் தாயாய்க்
கனித்தமிழை நமக்கூட்டும் நல்லாசான் கிட்ட
என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
இத்தருணம் நன்றிசொல்வோம் கையிரண்டைக் குவித்தே !!
சியாமளா ராஜசேகர்

சோலை விழாவுக்கு வரவேற்பு ...!!!

சுற்றத்து டன்நட்பும் சூழ்ந்திட வாருங்கள்
சோலை விழாவினைக் காண்பதற்கு !
நற்றமிழ் அன்னையும் வந்திடு வாளங்கு
நல்ல தமிழ்ப்பாக்கள் கேட்பதற்கு !!
நான்காவ தாண்டு விழாவினில் சென்னையில்
நாமொன்று கூடி மகிழ்ந்திடலாம் !
வான்மழை யும்பன்னீர்த் தூவிட இன்புற்று
வாழ்த்தாய் நினைத்துச் சிலிர்த்திடலாம் !!
பாவலர் காட்டிய பாதையி லேநாமும்
பைந்தமிழ்ச் சோலையில் கற்றறிந்தோம் !
ஆவலுடன் பட்டம் பெற்ற பூரிப்பினில்
ஆனந்த யாழினை மீட்டிடுவோம் !!
விருதுகள் பெற்றிடும் ஆன்றோரு ரைகேட்க
விருப்பத்து டன்நாமும் காத்திருப்போம் !
விருந்தாய வர்மொழி கேட்டதிலே உள்ளம்
மிக்க நிறைந்திடப் பூத்திருப்போம் !!
ஆண்டுதோ றும்பல புதுமைக ளைச்செய்யும்
ஆசானை யும்வாழ்த்திப் பாடிடுவோம் !
மூண்டெழும் அன்பினில் மூப்பில்லா அன்னையாம்
முத்தமி ழாளை வணங்கிடுவோம் !!!
மலராக வாருங்கள் ....... மணத்தோடு வாழ்த்துங்கள் !!!

தமிழ்த்தாய் சூடிய அணிகலன்கள் ...!!!

எழிலார்ந்த கன்னியவள் இளமையுடன் மிளிர்பவளாம்
மொழிகளுக்கே தாயவளாம் மூன்றாகத் திகழ்பவளாம்
அழகான இலக்கணத்தை அரணாக உடையவளாம்
அழிவில்லா இலக்கியங்கள் அணியாகக் கொண்டவளாம் !!
பொன்னொளிரும் மேனியிலே பொலிவான அணிகலன்கள்
அன்னையவள் தான்சூடி அகம்சிலிர்க்க வைத்திடுவாள்
இன்னமுதை யும்மிஞ்சும் ஈடில்லாச் சுவையுடையாள்
தொன்மைமிக்க அவள்மரபைத் தொல்காப்பி யம்பேசும் !!
அருந்தமிழாள் சூடியுள்ள அணிமணிக்கு நிகரேது
கருணையுள மார்மீது கவின்மிகுசிந் தாமணியும்
மருதாணி யிட்டகையில் மயக்குவளை யாபதியும்
திருவடியில் சிலம்பொலிக்கத் தேன்பாயும் செவியோரம் !!
ஒள்ளொலியாய்ச் சிற்றிடையில் ஒப்பில்லா மேகலையும்
உள்ளமள்ளும் பேரெழிலாய் உச்சியில்சூ ளாமணியும்
கொள்ளையழ காய்க்காதில் குண்டலகே சியுமாட
வள்ளுவனார் திருக்குறளும் மணிமகுட மாய்ச்சிறக்கும் !!
இரட்டைமணி மாலைசூடி இளமையாகச் சிரித்திடுவாள்
திருப்புகழும் வாசகமும் திருப்பாவை தேவாரம்
புருவங்கட் கிடையினிலே பொட்டாக அலங்கரிக்க
வரமருளும் தமிழ்த்தாயின் மலரடியைப் பணிவோமே ...!!!
சியாமளா ராஜசேகர்

சரண்புகுவாய் ....!!!

ஆயிரம் காக்கைக் கொருகல்லே போதும்
அடர்மரக் கிளைவிடுத் தோடும் !
தூயவன் கடைக்கண் பார்வையும் பட்டால்
தொடர்ந்திடும் துயர்பறந் தோடும் !
நோயினில் வீழ்ந்து பாயினிற் கிடந்து
நொந்துளம் நைந்தது போதும் !
தாயினும் சாலப் பரிந்தவன் காப்பான்
தாள்களில் சரண்புகு வாயே !!
சியாமளா ராஜசேகர்

உளம்‌ நனைக்கும்....!!!

சாரல் மழையும் குளிர்ந்த காற்றும் உடல்தழுவும்!
சறுக்கி மலையில் வழியு மருவி உளம்நனைக்கும்!
ஆர வாரத் தோடு கொட்டிச் சிலிர்க்கவைக்கும்!
அடங்காத் தாகங் கொண்டு குளித்த அகமலரும்!
ஈர மேகம் கீழி றங்கி வருடிவிடும்!
இயற்கை வனப்பில் தோய்ந்த இதயம் மயங்கிவிடும்!
வாரி யணைத்து முத்தங் கொஞ்ச மனந்துடிக்கும்!
வரமாய்க் கிடைத்த வாய்ப்புக் கென்றும் நன்றிசொலும்!!!


சியாமளா ராஜசேகர் 

வானவில்லைத் தூளியாக்கி ....!!!

எண்சீர் விருத்தம் ...!!!
*******************************
வானவில்லைத் தூளியாக்கி உன்னைத்தா லாட்டவா
வளையவரும் முகில்மடித்து விசிறியாக்கி வீசவா ?
தேனருவிச் சாரலிலே நனைந்தபடி யாடவா
தேவதையுன் கவின்சிரிப்பில் மனம்மயங்கிப் பாடவா ?
சீனியெனத் தித்திக்கும் கவிதைகளைச் சொல்லவா
சீராட்டி அன்பினாலே உன்றனுள்ளம் வெல்லவா ?
ஆனந்தம் பூத்துவரக் காதலோடு கிள்ளவா
ஆசையாலே என்னிரண்டு கைகளினால் அள்ளவா ??
சியாமளா ராஜசேகர்