Tuesday, March 30, 2021

இதழகல் நேரிசை அகவல்....!!!


நின்னை நினைத்தே நின்றே னிங்கே
தென்னங் கீற்றில் தென்றல் காற்றாய்
அழகே சிலையே அழைத்த கணத்தில்
எழிலிடை யாட இழைந்த இசையாய்
அங்கயற் கண்ணியே அங்கே
தங்கத் தேராய்த் தங்கி னாலென்?
சியாமளா ராஜசேகர்

மங்காச் செல்வம் ...!!!

 இதழொட்டும் நிலைமண்டில ஆசிரியப்பா ....!!!

வளியாய் வருடும் மனத்தை மயக்கும்
களைப்பை விரட்டும் கவலை தீர்க்கும்
மழலை என்னும் மங்காச் செல்வம்
மழைபோல் பொழியும் வற்றா இன்பம்
வீட்டில் பெருகிட விளையும் சுகத்தைப்
பாட்டில் விதைத்தேன் பாசத் தோடே!!
சியாமளா ராஜசேகர்

ஞாயிறே போற்றி ...!!!

 விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !!

****************************************************************
இரவில் சூழ்ந்த இருளை விரட்டக்
கருணை யுடனே கரங்கள் நீட்டி
ஒளியால் மெழுகி உளமது வியக்கக்
களையாய்க் கிழக்கில் களிப்புட னெழுந்தாய் !
உயிர்கள் வாழ்வில் உயர்வை யெட்டத்
தயக்க மின்றி தயைநீ புரிந்தாய் !
ஓயுமோ நின்பணி? ஓயா துழைக்கும்
நாயக! வானொளிர் ஞாயிறே வாழியே!!
சியாமளா ராஜசேகர்