Thursday, August 15, 2019

பிறந்தநாள் வாழ்த்து ....!!!

தம்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்து ...!!!
************************************************
பத்தைந்தை யின்றுதொட்ட 
     பாண்டியனார் குலக்கொழுந்தே !
முத்தான நற்குணத்தில் 
     முதல்வனாகத் திகழ்பவனே !
தித்திக்கத் தான்பேசும்
     சிறப்பியல்பைக் கொண்டவனே !
எத்திக்கும் புகழ்மணக்க 
     இத்தரணி யில்வாழி !!

முயற்சியுடன் நல்லுழைப்பால்
      முன்னேற்றம் நீகண்டாய் !
பெயல்போலும் கருணையுடன் 
     பிறர்க்குதவி செய்திட்டாய் !
துயருற்றோர் கண்ணீரைத் 
     துடைத்துவிடும் விரலானாய் !
உயர்வான பேரெடுத்தே 
      உடன்பிறப்பே நீவாழி !!

பெற்றோரை மிகமதித்துப் 
     பேணியன்பாய்க் காத்திருந்தாய் !
நற்றுணையாய் உடனிருந்து 
     நன்மகனாய் நீதிகழ்ந்தாய் !
சுற்றத்தை அரவணைத்துத் 
      தோள்கொடுத்தே உயர்த்திவிட்டாய் !
வெற்றியுன்னைத் தொடர்ந்துவர 
     வேண்டிடுவேன் இறைவனிடம் !!

வருகின்ற நாட்களிலுன் 
      வாழ்விலின்பம் ஓங்கவேண்டும் !
விரும்பியன யாவுமுன்றன்
     வீடுதேடி வரவேண்டும் !
அருட்கொடையாய்த் தேகநலம் 
       அன்னையவள் தரவேண்டும் !
குருவருளும் முப்போதும் 
     கூடநின்று காக்கவேண்டும் !!

இல்லார்க்குத் தானுதவும்
     ஈரமனத் தோன்வாழி !
நல்வழியில் நேர்மையுடன் 
     நடைபோடும் தம்பிவாழி !
வல்லவனாய் விளங்குகின்ற
     வடிவேலன் பேரருளால் 
பல்லாண்டு பல்லாண்டு 
     பார்போற்ற வாழியவே !!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுரேஷ் !
வாழ்க வளத்துடன் !!

சியாமளா ராஜசேகர்