தம்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்து ...!!!
************************************************
பத்தைந்தை யின்றுதொட்ட
பாண்டியனார் குலக்கொழுந்தே !
முத்தான நற்குணத்தில்
முதல்வனாகத் திகழ்பவனே !
தித்திக்கத் தான்பேசும்
சிறப்பியல்பைக் கொண்டவனே !
எத்திக்கும் புகழ்மணக்க
இத்தரணி யில்வாழி !!
முயற்சியுடன் நல்லுழைப்பால்
முன்னேற்றம் நீகண்டாய் !
பெயல்போலும் கருணையுடன்
பிறர்க்குதவி செய்திட்டாய் !
துயருற்றோர் கண்ணீரைத்
துடைத்துவிடும் விரலானாய் !
உயர்வான பேரெடுத்தே
உடன்பிறப்பே நீவாழி !!
பெற்றோரை மிகமதித்துப்
பேணியன்பாய்க் காத்திருந்தாய் !
நற்றுணையாய் உடனிருந்து
நன்மகனாய் நீதிகழ்ந்தாய் !
சுற்றத்தை அரவணைத்துத்
தோள்கொடுத்தே உயர்த்திவிட்டாய் !
வெற்றியுன்னைத் தொடர்ந்துவர
வேண்டிடுவேன் இறைவனிடம் !!
வருகின்ற நாட்களிலுன்
வாழ்விலின்பம் ஓங்கவேண்டும் !
விரும்பியன யாவுமுன்றன்
வீடுதேடி வரவேண்டும் !
அருட்கொடையாய்த் தேகநலம்
அன்னையவள் தரவேண்டும் !
குருவருளும் முப்போதும்
கூடநின்று காக்கவேண்டும் !!
இல்லார்க்குத் தானுதவும்
ஈரமனத் தோன்வாழி !
நல்வழியில் நேர்மையுடன்
நடைபோடும் தம்பிவாழி !
வல்லவனாய் விளங்குகின்ற
வடிவேலன் பேரருளால்
பல்லாண்டு பல்லாண்டு
பார்போற்ற வாழியவே !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுரேஷ் !
வாழ்க வளத்துடன் !!
சியாமளா ராஜசேகர்