Wednesday, April 1, 2015

ஈழம் ....!!




இந்தியப்பெ ருங்கடலில் ஈழமும் தோன்றுமே 
சிந்துமொற்றைக் கண்ணீர்த் திவலையாய் - பந்தமாய்
சுற்றிலும் ஆழிசூழ் சுந்தரத் தீவிதிலே
வற்றாமற் பொங்கும் வளம் .

இயற்கையெழில் கொஞ்சும் இலங்கையின் காட்சி
மயங்கிட வைக்கும் மனதை - முயங்கும்
முகிலும் மலைமேனி மூடி யுறங்கும்
தெகிட்டா அழகிற் சிறந்து.

கற்கண்டாய்ப் பேசி கனிவாய் உபசரித்து
நற்றமிழா ளள்ளிடுவார் நம்மிதயம் - அற்புதமாய்
ஈழத் தமிழரின் இன்முகப் புன்சிரிப்பில்
தோழமைப் பூக்கும் தொடர்ந்து .

கடற்கரை வெண்மணலும் கைதுசெய்யு முள்ளம்
அடவியும் தோன்று மழகாய் ! - இடர்நீங்கி
பாடட்டு மின்பகானம் பாரினில் ஈழமும்
கூடட்டும் மக்கள் குளிர்ந்து .

சுற்றுலா ஆர்வலர்க்குச் சொர்க்கபுரி ஈழமாம்
சற்றே உணர்ந்திடுக சான்றோரே - துற்கதி
நீங்கி இலங்கையில் நீடிக்கும் நிம்மதியும்
மங்கா மகிழ்ச்சி மலர்ந்து .

அன்புநிறை மக்கள் அகமும் மலர்ந்திட
இன்பவெள்ளம் பாயட்டும் ஈழத்தில் - வன்கொடுமை
தோற்றோடிப் போகட்டும் துன்பமெலாம் தீரட்டும்
ஏற்றம் பெருக்கட்டு மே ! 


தடாகம் இலக்கிய வட்டம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த கவிதை . " கவிச்சுடர்  "  என்ற பட்டம் கொடுத்த தடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றி ....!!!

No comments:

Post a Comment