Monday, May 28, 2018

ஓடிப்போகட்டும் ஒழிந்து ...!!!


மூடினால் போதுமா ? மூட்டையைக் கட்டுவீர் ! 
ஆடியது போதாதா ? ஆண்டவனே ! - கேடிகளைக் 
கோடிகளாய்க் கொட்டினாலும் கூண்டோ டனுப்பிடுவாய் 
ஓடிப்போ கட்டும் ஒழிந்து .

உள்ளக் கொதிப்பு ...!!! ( ஸ்டெர்லைட் )

கொலைவெறி கண்டு கொதித்துத் துடிக்கு(து) 
உலைக்களம் போலெம துள்ளம் !- விலைபோன 
இவ்வரசின் கேடுகெட்ட ஈனத் தனத்தினை 
எவ்விதம் தாங்க இனி ? 

மூச்சடக்கி முக்குளித்து முத்தெடுக்கும் நன்னகரின் 
மூச்சை நிறுத்திட மும்முரமாய்க் - கூச்சமின்றிப் 
பெற்றபொரு ளுக்காய்ப் பெரிதுழைப் போர்களைச் 
சுற்றி வளைத்துச் சுடு. 

சியாமளா ராஜசேகர்

வான வீதியில் ...!!!



வான வீதியில் மேக ஊர்வலம் 
***வனப்பில் விழிகள் விரிந்திடும் ! 
வான வில்லதும் வண்ணக் குடையென 
***வடிவு காட்டிச் சிரித்திடும் ! 
வானம் பாடியாய்க் கானம் பாடியே 
***மழையும் நிலத்தில் பொழிந்திடும் ! 
வானத் துளிகளின் முத்தம் பெற்றதும் 
***மண்ணும் நாணிச் சிலிர்த்திடும் !! 

சியாமளா ராஜசேகர்

முருகன் மும்மணிக் கோவை ...!!!



சிற்றிலக்கியப் படையல் ...!!! 
************************************** 
மும்மணிக் கோவை ....!!! 
********************************** 
காப்பு ....!!! 
*************** 
மும்மணிக் கோவையில் முப்பது பாக்களால் 
பெம்மான் முருகன் பெருமையைச் - செம்மையாய் 
நற்றமிழில் யான்பாட ஞான முதல்வனே 
பற்றினேன் நின்றன் பதம் . 

நூல் !! 
******** 
நேரிசை ஆசிரியப்பா ...!!! 
********************************** 
சிவனா ருமையின் செல்வக் குமரன் 
குவலயம் போற்றும் குறத்தி மணாளன் 
குன்றுகள் தோறும் குடிகொண் டிருப்பான் 
பன்னிரு விழிகளால் பவவினை தீர்ப்பான் 
அடியவர் கூடி அவன்புகழ் பாடி 
அடிதொழு திடவே அகங்குளிர்ந் திடுவான் 
கோல மயிலில் குறைகள் களைய 
பாலகன் வடிவில் பறந்து வருவான் 
நெஞ்ச முருகி நெகிழ்ந்து 
தஞ்ச மடைந்தால் தயைசெய் வானே ! 1. 

வெண்பா ...!!! 
******************* 
வான்மதி யோடு வனப்பாய் நதிசூடி 
மான்மழு வேந்தியோன் மைந்தனை - நான்மறை 
யோதும் முனிவர் உளத்தே நிறைந்தோனைக் 
காதினிக்கப் பாடு கனிந்து . 2. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************ 
கனிந்த மனத்தில் கவின்மிகு காட்சியைக் கண்டபடிப் 
பனித்த விழிகள் பரவசத் தோடு படையலிட 
இனிக்குந் திருப்புக ழெங்கும் முழங்கி எதிரொலிக்க 
நினைத்த பொழுதில் நிறைவாய்த் தொடர்வான் நிழலெனவே ! 3. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
நிழலின் குளுமையாய் நெஞ்சம் நிறைந்த 
அழகன் வாழும் அறுபடை வீட்டின் 
புகழைச் சொல்லப் புண்ணியம் கிட்டும் 
பகலு மிரவும் பக்கத் துணையாய்க் 
குருகு கொடியுடன் கூர்வேல் தானும் 
இருபுற மிருந்தே இனிதே காக்கும் ! 
துதிக்கு மடியவர் துயரை விலக்கி 
விதியையும் மாற்றி வினைக ளறுத்திடும்! 
கதியென நம்பிக் கைத்தொழ 
எதிரில் தோன்றும் இனியவன் முகமே! 4. 

வெண்பா ...!!! 
********************** 
முகங்களோ ராறுடன் முத்தா யொளிர்வான் 
இகபர நற்சுக மீவான் - குகனை 
தினந்தொறும் நெஞ்சுருகிச் சேவிக்கு மன்பர் 
மனக்குறை தீர்ப்பான் மகிழ்ந்து. 5. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************* 
மகிழ்ச்சிப் பெருக்கில் மலர்ந்த முகங்கள் வனப்புடனே 
ககன முலவும் கவின்நில வாயெழிற் காட்சிதரச் 
சிகண்டி தனிலேறித் தேவிய ரோடு திருவருளை 
முகிலாய்ப் பொழியும் முருகன் விழைவது முத்தமிழே !! .6. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
*********************************** 
முத்தமிழ் வல்ல முதியவள் ஔவை 
சித்தங் குளிரச் செய்த பாலன் ! 
அல்ல லளித்த அசுரரை அழித்தே 
எல்லை யில்லா இன்ப மளித்தவன் ! 
சீரலை வாய்தனில் சேவலும் மயிலுமாய்ச் 
சூரனை யேற்றுச் சுகப்பட வைத்தவன் ! 
அரனார் செவியில் அழகுற ஒமெனும் 
பிரணவத் துட்பொருள் பிரியமா யோதத் 
திருவே ரகத்திற் சீர்மிகத் 
திருவாய் மலர்ந்த சிவகுரு நாதனே !! 7. 

வெண்பா ....!!! 
******************* 
நாத வடிவாகி ஞாலம் நிறைந்தே,ஐம் 
பூதமா யெங்குமுள புண்ணியனின் - பாதம் 
பணியுமெழில் மீன்விழியாள் பார்வதி மைந்தன் 
தணிகைவடி வேலே சரண் . 8. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************ 
சரண்புகு மன்பரைத் தாயாய்ப் பரிவுடன் தாங்குபவன் 
துரத்திடும் வெவ்வினை தூர விரட்டிடும் தூயனவன் 
தரணியோர் போற்றும் தமிழ்க்கட வுள்திருத் தாள்பணிய 
அரவணைப் பானவன் அன்பி லுருகி யருள்பொழிந்தே !! 9. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
அருளைப் பொழியு மறுமுகன் விழிக 
ளொருபன் னிரண்டு முயர்வைத் தந்திடும் ! 
கரங்களீ ராறும் கண்ணீர் துடைத்து 
நரகெய் தாமல் நலமுடன் காக்கும் ! 
பாதம் பற்றிடப் பவவினை தீரும் 
வேதனை மாற்றி மீண்டிடச் செய்யும் ! 
பொன்னொளிர் மார்பில் பூண்ட வணிகளும் 
புன்னகை முகத்தில் பொலிவினைக் கூட்டும் ! 
சந்தம் கொஞ்சும் சலங்கைகள் 
கந்தன் வரவைக் காதலாய்ச் சொல்லுமே !! 10. 

வெண்பா ...!!! 
****************** 
சொல்ல வினிக்கும் துயரந் தொலைத்திடும் 
அல்லும் பகலும் அருந்துணையாய் - நல்ல 
வழிகாட்டும் ஓமெனும் மந்திரந் தன்னை 
மொழிவாய் மனமே முனைந்து . 11. 

கட்டளைக் கலித்துறை 
******************************** 
முனைந்து திருப்புகழ் முப்பொழு தோத முறுவலுடன் 
தனையே மறந்து தகதிமித் தோமெனத் தாளமிட்டு 
நனைந்த வுளத்துடன் நாடி வருவான் நலமளிக்க 
மனையா ளிருபுற மாக வமர்ந்து மயிலினிலே!! 12. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
மயில்கள் விராலி மலையி லாடக் 
குயில்கள் சேர்ந்து கூவி யழைக்கக் 
குளிர்ந்த குமரன் குன்றின் மீது 
களிப்பி லாடும் காட்சி விரியும் ! 
இமைகள் மூடும் இரவில் கனவில் 
உமையின் மைந்தன் உருவம் தோன்றும் ! 
நெஞ்ச முருகி நெகிழ்ந்து கசியத் 
தஞ்ச மடைந்து சந்ததம் நினைக்க 
முத்தி யளிக்க முருகன் 
சித்தங் கொள்வான் சிரித்த படியே !! 13. 

வெண்பா ...!!! 
****************** 
படியேறிச் சென்று பரமன் மகனை 
அடிமுத லுச்சிவரை யன்பால் - வடியும் 
விழிகளாற் கண்டுவிம்மி மெய்யுருகி வேண்டப் 
பழிபாவ மோடும் பயந்து. 14. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************ 
பயமேன் மனமே! பகலவன் கண்ட பனித்திரையாய் 
மயக்கம் விலகும் மயில்வா கனத்தினில் மால்மருகன் 
வயலூ ரினில்வாழ் வடிவே லழகன் வருகையிலே 
வியப்பி லுறையும் வியனுறைத் தேவர் விழிகளுமே!! 15. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
விழிகளின் பார்வையில் மேனி சிலிர்க்கும் 
மொழிகளும் மறந்து மோனம் பிறக்கும் ! 
பழனி மலையில் பாங்குடன் வீற்ற 
அழக னருளால் அதிசயம் விளையும் ! 
மார்பி லணிந்த மலர்மா லைகளும் 
சீர்மணம் பரப்பிச் சிந்தையில் நிறையும் ! 
செவ்வேல் தாங்கியச் செவ்விய தோளும் 
கொவ்வை இதழில் குறுநகை விரிப்பும் 
உவகை யளிக்க உள்ளம் 
கவலை மறக்கும் கடம்பனைக் கண்டே !! 16. 

வெண்பா ....!!! 
******************* 
கண்டமனம் பூத்திடும்; கண்கள் பனித்திடும்; 
வண்டமிழில் பாக்கள் வடித்திடும்! - தண்டனிட்டுக் 
கந்தனடி பற்றிக் கதறி அழுதிடும் 
செந்தூரில் கண்டு சிலிர்த்து.. 17. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************** 
சிலிர்த்த இதயம் திருவருள் நாடித் தினம்துதிக்க 
ஒலிக்கும் அலைகளில் ஓமெனும் சத்தம் உளம்நனைக்கப் 
பொலிவாய்க் குருபரன் பூரிப் புடனிதழ் புன்னகைத்து 
மலர்ந்த குறிஞ்சி மலராய் மகிழ்வான் மலையினிலே !! 18. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
மலையில் வாழும் மாலின் மருகன் 
சிலையாய் நெடிதுயர்ச் சிறப்பினைப் பெற்றுப் 
பத்த மடையில் பக்தருக் காக 
நித்த மருளை நீங்கா தருள்வான் ! 
அருண கிரியார்க் கருள்மழை பொழிந்து 
திருப்புகழ் பாடச் செய்த வேலன் 
முத்தை தருவென முதற்சொல் லெடுத்துச் 
சத்தாய்க் கொடுக்கச் சந்தங் கொஞ்சும் 
நற்றமிழ்ப் பாக்கள் நயமுடன் 
அற்புதஞ் செய்யும் அறுசுவை விருந்தே !! 19. 

வெண்பா ....!!! 
****************** 
விருந்தாய்த் தமிழை விரும்பிச் சுவைத்துக் 
குருவாய் விளங்கும் குகனின் - அருளால் 
நடப்பவை யாவும் நலமாய்த் திகழ்ந்து 
சுடரா யொளிரும் சுகம். 20. 

கட்டளைக் கலித்துறை ....!!! 
************************************* 
சுகந்தரும் வாழ்வில் துயர்கள் விலக்கித் துணையிருக்கும் ! 
தகதக வென்றொளி தங்கமாய் மின்னித் தகவளிக்கும் !! 
அகத்திருள் நீக்கி அறிவொளி கூட்டும் அருந்தவத்தால் 
பகலிர வில்வேல் பகையை விரட்டிப் பலந்தருமே !! 21. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
தருவா னுவப்புடன் சங்கத் தமிழை 
உருகி கேட்டா லுள்ள மலர்ந்தே ! 
முந்தை வினைகளும் முடிவினை யெட்டும் 
கந்த வேளின் கருணைப் பார்வையால் ! 
சரவண பவனென சந்ததம் சொல்லப் 
பரகதி யவனும் பரிவுட னளிப்பான் ! 
சந்தனம் மணக்கும் சன்னதி தன்னில் 
கந்தனின் பொன்முகம் காந்தமா யீர்க்கும் ! 
வல்லிமா ரிருவரை வணங்க 
இல்லற மென்று மினிமையாய் விளங்குமே !! 22. 

வெண்பா ...!!! 
****************** 
விளங்குமெழிற் காந்தனாம் வெற்றிவடி வேலன் 
திளைப்புடன் வள்ளியைச் சீண்டி - வளத்தவளைக் 
காதல் மணமுடித்துக் கன்னல் மொழியாளின் 
பாதம் வருடியதைப் பார் . 23. 

கட்டளைக் கலித்துறை ...!!! 
************************************* 
பார்த்த விழிகளில் பாசத் துடனே பரிவிருக்கும் ! 
ஆர்க்கும் நதியில் அயிரைமீன் துள்ளு மழகிருக்கும் ! 
வார்த்தை வராமல் மவுனமாய்க் கண்கள் வடித்திருக்கும் ! 
சேர்ந்து வழிபடச் செப்பிடும் நாமம் தினமழகே !! 24. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
அழகன் ! விசாகன் ! அடியவர்க் கெளியவன் ! 
பழத்திற் காகப் பழனி உறைந்தவன் ! 
குக்குடக் கொடியோன் ! குன்றம் நிறைந்தோன் ! 
சொக்கனின் மைந்தன் ! சூரனை வென்றவன் ! 
வஞ்சிய ருடனே மங்கள மாக 
மஞ்ஞையி லேறி வாழ்த்து வழங்கச் 
சலங்கை யொலியின் சந்தம் கொஞ்சக் 
கலியுக வரதன் கடுகி வருவான் 
திருப்புக ழாலே தினந்தினம் 
விருப்பொடு துதிக்க வீடுபே றருளவே !! 25 . 

வெண்பா ...!!! 
***************** 
அருள்நிறை சித்தர்க் கருள்சிவ பாலன் 
அருணகிரி நாதரை ஆட்கொண் - டருளி 
அருணையில் காட்சி யளித்ததைக் கேட்டால் 
அருவியாய்க்கண் கள்சிந்து மாம் . 26. 

கட்டளைக் கலித்துறை ....!!! 
************************************* 
சிந்துமாம் வான்மழை சிங்கார வேலவன் தேரினிலே 
வந்திடும் போழ்தினில் வாகாய் வளியுடன் வாழ்த்திடவே ! 
சந்திர சூரியர் தாமும் தொழுது தலைவணங்கிச் 
செந்தமிழ்ப் பாக்களால் தேன்பாய்ச் சிடுவார் செவிகளிலே !!! 27. 

நேரிசை ஆசிரியப்பா ....!!! 
********************************** 
செவிகளில் பாயும் தீந்தமிழ் கானம் 
தெவிட்டா தென்றும் செங்கோ டனுக்கு ! 
அசையும் குண்டல மழகா யாட 
இசைக்கு மயங்கி இசைந்து வருவான் ! 
பட்டுக் கழுத்தில் பவள மாலையும் 
தொட்டுத் தழுவும் துகிலொடு நூலும் 
நெற்றியில் நீறும் நீண்ட திலகமும் 
பற்றி யிழுக்கும் பரவசத் தோடு 
சுண்டி யிழுக்கும் தூயனைக் 
கொண்டா டிடவே குளிர்வான் மனமே !! 28. 

வெண்பா ...!!! 
******************* 
மனத்தி லமைதி மலர்ந்திடும் வண்ணம் 
சினமும் மறைந்திடச் செய்வான் ! - வனத்தில் 
தவழும் இளங்காற்றாய்ச் சாமரம் வீசி 
உவகை யளிப்பான் ஒளிர்ந்து. 29. 

கட்டளைக் கலித்துறை ....!!! 
************************************** 
ஒளிரும் சுடரென ஓமெனும் மந்திரத் துள்ளிருப்பான் ! 
குளிர்ந்த நிலையில் குமரா வெனவே குரல்கொடுத்தால் 
விளித்த வுடனே விரும்பி யணைக்க விரைந்துவந்துத் 
தெளிவை யுணர்த்திடும் சேயோன் வணங்கும் திருச்சிவனே !! 30. 

நூற்பயன் ...!!! 
****************** 
மும்மணிக் கோவையின் முப்பது பாக்களை முப்பொழுதும் 
செம்மணி மார்பன் திருவடி போற்றியே செப்பிடுவோர் 
இம்மையில் வாட்டும் இடர்க ளனைத்து மினிவிலகி 
நம்பிய வண்ணம் நடந்திடும் யாவும் நலத்துடனே !!! 

சியாமளா ராஜசேகர் 

மும்மணி மாலை ...!!!

#சிற்றிலக்கியப்_படையல் :8 
கல்வியா ? செல்வமா ? வீரமா ? 
மும்மணிமாலை 
★ 
ஆக்கம்; 
ஆசுகவி வெங்கடேசன் (வெண்பா) 

ஆசுகவி விவேக்பாரதி (கட்டளைக் கலித்துறை) 

ஆசுகவி சியாமளா ராஜசேகர் 
(ஆசிரியம்) 
★ 
காப்பு 

(நேரிசை வெண்பா) 

கல்வியைச் செல்வத்தைக் காத்துநிற்கும் வீரத்தைச் 
சொல்லவந்தோம் பாட்டினில் தூய்தமிழே - வெல்லமாய் 
யாவரும்கேட் டின்புற அந்தமிழ்ச் சொற்களைப் 
பாவ விடுவாய் பரிந்து 

நூல் 

(நேரிசை வெண்பா) 

என்றும் எவருக்கும் எங்கும் பயன்தரும் 
நன்றெனச் சான்றோர் நவிலுவர் - குன்றின்மேல் 
நல்விளக் காய்த்தோன்றி நல்வழி காட்டும்நற் 
கல்வியைக் கற்பாய் களித்து (1) 

(கட்டளைக் கலித்துறை) 

களித்திடும் ஆவல் கருத்தினில் பூக்கக் கரமசைத்து 
விளித்திடும் போது வியனுல கேநம் விரலடைய 
அளித்திடும் செல்வம் அளந்திடும் நற்பணி ஆர்புரிவார் 
துளிர்த்திடும் செல்வம் சுரப்பது நாமுடன் துய்ப்பதற்கே! (2) 

(அகவல்) 

துய்த்திடுங் காதலும் துணிவெனும் வீரமும் 
உய்த்திடுஞ் சிறந்த உணர்வுக ளாகும் ! 
சற்றுஞ் சலியாத் தகைமை யோடு 
வெற்றியை யீட்ட வீரம் வேண்டும் ! 
நாட்டில் நாடொறும் நடக்கும் கேட்டினைச் 
சாட்டை யெடுத்துச் சுழற்றி வீச 
வல்லமை யுடனே மண்ணில் 
பொல்லது போக்கப் பொங்குக இன்னே !! 3. 

(நேரிசை வெண்பா) 

இன்னவர் ஈவா ரெமக்கின் னுரையென்றோர் 
எண்ணம் கொடுக்கும் எவருளரோ - அன்னவர் 
தாள்தொட் டவர்பால் தரமான கல்விபெறல் 
வாள்தொடும் வண்மையதற் கொப்பு (4) 

(கட்டளைக் கலித்துறை) 

ஒப்பில் பொருள்நமக் கோங்குதற் குற்ற உயர்வழிகள் 
செப்பும் பரம்பரை சேர்த்தவை தீர்த்தவை சேருழைப்பின் 
திட்ப மளிக்கும் திரட்டு கலைஞர் திறனறிந்து 
நட்பும் உலகமும் நல்குவ தென்றிவை நன்கறியே! (5) 

(அகவல்) 
நன்கறி மனமே! நந்தமிழ் மரபின் 
தன்னிக ரற்ற தலைமைப் பண்பாம் 
வீரந் தன்னை விவேகத் துடனே 
தீர மிக்கவன் செயல்படுத் திடுவான்! 
வித்தைகள் கற்று விரிந்த அறிவால் 
புத்தியுந் தீட்டிப் புரிந்திடும் போரில் 
விலைமதிப் பில்லா வெற்றியால் 
தலைநிமிர்ந் திடுவது தமிழரின் செருக்கே!! 6. 

(நேரிசை வெண்பா) 

செருக்கொடு தானெனும் தீக்குணம் மாய்த்து 
வருத்திடா இன்சொலே வாய்மேல் - வருமாம் 
நலந்தரும் கல்வி நயமாய்ப் பயில 
வளந்தருமக் கல்வி வளர் (7) 

(கட்டளைக் கலித்துறை) 

வளர்க்கும் பொருள்நல் வழியில் வருமேல் வளர்கருணை 
துளிர்க்கும் மனத்தில் துறவோர் இடம்படும் தூய்பொருள்போல் 
அளிக்கும் குணமும் அளக்கும் அறிவும் அணுகிவந்து 
தளர்த்தும் வறுமைத் தளையை நலப்பொருள் தந்திடுமே! (8) 

(அகவல்) 

தந்திடும் நன்மைகள் தரணியில் பலவாம் 
விந்தைகள் விளைந்திடும் வீரத் தாலே 
வங்கக் கரையினில் மாணவர் திரண்டு 
சிங்கத் தமிழராய்ச் சீறி யெழுந்து 
ஜல்லிக் கட்டைத் தமிழினம் மீட்க 
வெல்லும் முறையில் விதைத்த வீரம் 
நன்னெறி வகுத்து நடந்திடப் 
புன்னகை யோடுளம் போனது களவே!! 9. 

(நேரிசை வெண்பா) 

களவொடு கத்தும் கலையெனக் கொண்டு 
வளமுறக் கற்க மறுப்பாய் - அளவிறந்த 
துன்பமும் தோற்றுவிக்கும் தூய்மையிலாக் கல்வியது 
வன்முறைக் கீந்திடும்வாய்ப்பு (10) 

(கட்டளைக் கலித்துறை) 

வாய்த்திடும் செல்வம் வளமிலா அல்வழி வந்திடிலோ 
ஏய்த்திடும் கர்வம் எவரையும் போற்றா தெதிர்த்துவரும்! 
காய்ந்திடும் வன்மம் கடுஞ்சினம் யாவும் கவிந்துவரும் 
மாய்ந்திடும் நேசம்! மனங்களில் சோகம் மலிந்திடுமே! (11) 

(அகவல் ) 

மலிந்திடும் நாட்டில் வன்முறை தினமும் 
வலிகளால் துயருறும் மக்களின் நிலைமை 
சொல்லவு மியலுமோ? துட்டரின் வீரம் 
நல்லதற் கன்று; நச்சினைப் போன்றது! 
கத்தியால் குத்திக் கொலைகள் கொள்ளை 
நித்தமும் நடக்கும் நிலைமையைக் கண்டால் 
பிள்ளை மனமும் பித்தாய்த் 
துள்ளும் அசட்டுத் துணிச்சலைக் கற்றே!! 12. 

(நேரிசை வெண்பா) 

கற்கையில் வந்த களிப்பினை மிக்குமாம் 
கற்றதை மற்றவர்க்குக் கற்பிக்கக் - கற்றவர் 
உற்ற உயர்வெலாம் கற்பித்த வாசானுக் 
கெற்றைக்கும் ஈயுமாம் இன்பு (13) 

(கட்டளைக் கலித்துறை) 

இன்புடைச் செல்வ மியற்றும் பயனதை ஈதலென்பார்! 
துன்புடை மக்கள் துணையென நின்று துயரறுக்கும்! 
அன்புட னாழ்ந்த அறிஞர் கரத்தில், அகண்டதெரு 
முன்புறை ஊருணி போல்பயன் நல்கும் முழுப்பொருளே! (14) 

(அகவல்) 

பொருளா லுதவி புரிவார் சிலபேர் 
விரும்பி யுழைத்து வியக்கவைப் பார்சிலர் ! 
இருப்பினும் வீர மிருந்தா லென்றும் 
வருத்து மின்னலை மாய்த்திட லாமே ! 
எல்லையைக் காக்கும் இராணுவத் தாரும் 
தொல்லைகள் போக்கித் துணையா யிருப்பார்! 
போரில் வீரம் பொங்கச் 
சோர்வறச் சுடுவார் துமுக்கி யெடுத்தே!! 15. 

( துமுக்கி - துப்பாக்கி ) 

(நேரிசை வெண்பா) 

எடுக்க எடுக்க குறையுமொரு செல்வம், 
கொடுக்கக் கொடுக்கக் குறையா - மிடுக்குடை 
கல்விக் கிணையாமோ காசினியில் கல்வியே 
செல்வத்தின் மேலான சீர் (16) 

(கட்டளைக் கலித்துறை) 

சீருடன் பாடும் சிறந்த புலவனும் செல்வமடைந் 
தூருடன் வாழும் உயர்நெறி வேண்டி ஒருவரின்பால் 
பேருடன் பாடி பெரும்பொருள் கேட்டுப் பெறும்நிலத்தே 
ஆருடன் சொல்வர் அறிவு பொருளின் அரியதென்றே! (17) 

(அகவல்) 
அரிய தென்றே அனைவருஞ் சொல்வர் 
விரிந்த அறிவாய் விளங்கும் கல்வியை ! 
புரியார் சொல்வார் பொன்னும் பொருளும் பெரிதாய்க் கூட்டும் பெருமை யென்றே ! மிக்குயர் வானது வீர மென்றே 
இக்கண முணர்ந்தா லெளிதாய்ப் புரியும் ! நெஞ்சி லச்சம் நிலைத்தால் 
எஞ்சும் வாழ்வில் இடர்கள் வருமே !! 18. 

(நேரிசை வெண்பா) 

இடர்வரின் அக்காலம் எப்படி யேனும் 
உடனொரு செய்கையால் உய்வுண்(டு) - இடங்கருதிச் 
சிந்திக்கும் ஆற்றல் சிறப்பான கல்விதரும் 
என்றைக்கும் கல்வியே ஏர் (19) 

(கட்டளைக் கலித்துறை) 

ஏர்பிடிக் கின்ற உழவரும் மல்லரங் கேறியிங்கு 
மார்பிடிக் கின்ற மறவரும் வல்ல மதக்கரியால் 
போர்பிடிக் கின்ற பொறியுடை வீரரும் போகமெனும் 
தேர்பிடிக் கின்றவர் செல்வர்பின் னோடித் திரள்பவரே !(20) 

( அகவல் ) 
திரள்திரளாய்க் கூடிச் சேர்ந்து போரிட 
வரமாய் வெற்றியை வளைத்துப் போடலாம்! 
நெஞ்சி லுரத்துடன் நேர்மைத் திறத்துடன் 
வஞ்சக அரசை மாற்றி யமைக்கலாம் ! 
கல்வியால் பணத்தால் கைவரப் பெறாததை 
வெல்லலாம் முயன்றால் வீரத் தாலே! 
மறக்குடி பிறந்தோர் வாழ்வில் 
சிறப்புடன் சவால்களைத் தேடிச் செல்வரே!! 21. 

(நேரிசை வெண்பா) 

செல்வர்க் கடங்குவோர் சீறவும் செய்வரே 
செல்வரின் செல்வம் மறையுமேல் - கல்வியில் 
வல்லவர்தம் சீரோ மறையா தொருகாலும் 
கல்விகுன்றாத் தன்மையான் காண் (22) 

(கட்டளைக் கலித்துறை) 

காணும் பொருளதே கல்விக் கடித்தளம் கற்றவர்கள் 
பூணும் பெயரும் புகழும் பொருளைப் புரட்டலிலே! 
பேணும் பொருளினைப் பெற்றவர் கொள்ளும் பெருமையெலாம் 
பாணர் புலவர் படைப்பது மில்லையிப் பாரினிலே! (23) 

(அகவல்) 

பாரினில் வீரமே பகைவரை யொடுக்கும் 
சீரிய பண்பாம்; செல்வ மின்றி 
ஏழையா யிருக்கலாம்; என்றும் வாழ்வில் 
கோழையா யிருத்தல் கூடா தென்றுணர் ! 
கற்றிலன் ஆயினும் காதால் கேட்கலாம் 
வெற்றி யடைய வீரமே தேவை ! 
முன்னோர் பாதையில் முனைந்தே 
என்றும் நனிபுக ழீட்டுவர் மறவரே !! 24. 

(நேரிசை வெண்பா) 

மறவோர்க் கடங்குவோர் மல்லர் ஒருநாள் 
மறைவரேல் தாரார் மதிப்பை - அறவழிக் 
கற்றோர்தம் சீரோ கரையா தொருநாளும் 
உற்றவழி கல்வியென் றோர் (25) 

(கட்டளைக் கலித்துறை) 

ஓர்புக ழாரம் உணவளிக் காதே! உறுதியுடன் 
போர்புகும் வீரம் பசியறுக் காதே! புகல்மறத்தால் 
சேர்ப்புக ளாகச் செருக்கே மலரும்! செழுமையெலாம் 
தீர்ப்புகள் போடும் திருவுடை யான்கண் திகழ்பவையே! (26) 

(அகவல் ) 

திகழ்பவை யாவும் சீர்மீக வமைய 
அகவாழ் வினிலும் ஆற்றல் வேண்டும் ! 
சங்க காலத் தமிழர் வாழ்வில் 
மங்கையர் வீரம் மகத்துவம் மிக்கது 
படித்தறி யாத பாவையார்க் கூடத் 
துடிப்பு மிகுந்து துணிச்ச லுடனே 
எதிர்கொண் டிடுவார் இன்னலை 
அதிசயந் தானவர் அறிந்திடார் கல்வியே !! 27. 

(நேரிசை வெண்பா) 

கல்வி கவினுறு சீரெனினும் கற்றவர்க்குச் 
செல்வத் தொடுமறமும் சேர்ந்திடல் - நல்வழியாம் 
இம்மூன்றும் நன்றாய் இயைந்தவர்க் குண்டாகும் 
இம்மை மறுமையில் இன்பு (28) 

(கட்டளைக் கலித்துறை) 

மறுமையும் இன்பம் வளர்த்திடுங் கல்வி! மகிழ்ச்சிதந்து 
வறுமையின் துன்பம் வதக்கிடும் செல்வ வளம்நிலைக்க 
மறமையும் தேவை மதியிலிம் மூன்றும் மலர்ந்துவிட்டால் 
திறமையும் செல்வத் திரட்சியும் வீரமும் சேர்ந்திடுமே! (29) 

(அகவல்) 

சேர்ந்திடும் போது சிறப்புறும் மூன்றும் 
நேர்வழி காட்டி நிமிர்ந்திட வைக்கும்! 
எண்ணும் எழுத்தும் ஏற்றம் தந்திடும் 
மண்ணில் செல்வமே வளத்தினைக் கூட்டிடும்! 
துணிவைத் தக்க துணையாய்க் கொண்டால் 
அணியாய் விளங்கும் அவனியில் வாழ்வு ! 
வீரத் தோடு தேவை 
சீரெனக் கல்வியுஞ் செல்வமு மென்றுமே !! 30. 

நூற்பயன் 
************* 
மூவ ரிணைந்து முத்தொளிர் பாக்கள் 
ஆவ லுடனே அள்ளி வழங்கினோம் ! 
வெண்பா காரிகை விரும்பு மகவலைச் 
செண்டெனக் கல்வி செல்வம் வீரத்தை 
மும்மணி மாலையாய் மொத்தமாய்த் தொடுத்தோம் ! 
அம்புவி வாழ்விலிவ் வனைத்தும் பெறுவதன் 
அவசிய முணர்ந்தே அன்புடன் 
கவனமாய்ப் படிக்க காரியம் துலங்குமே !! 
★★★