Wednesday, April 29, 2015

ரசிக்க வாங்க ....!!

ஆற்றோர நாணல் அது 
அழகாக வீசிவிட ... 

கரை நிற்கும் மாந்தருவில் 
கனிபிளந்து சாறுசொட்ட ... 

பாதை வழித் தென்றலும் 
பூவாசம் சுமந்துவர ... 

நீருக்குள் கெண்டைக் கூட்டம் 
ஒய்யார நடனமிட ... 

மைனா அமர்ந்த மரவிழுதும் 
ஊஞ்சல்போல் அசைந்தாட ... 

மலர் நாடும் வண்டினமும் 
சங்கீதமாய் ரீங்காரமிட .... 

பொந்துள் ளிருந்து பார்த்தபடி 
மரங்கொத்தி குரலெழுப்ப ... 

மெல்லவந்து எட்டிப் பார்த்த 
நத்தையாரும் வாழ்த்துரைக்க ... 

நீர்ப்பாம்பு தலை தூக்கி 
காட்சிகளைப் படம்பிடிக்க ... 

தாவி குதிக்கும் தவளைகளும் 
உற்சாக முழக்கமிட .... 

நீலவண்ண வான் மகளும் 
சாரல்மழை பூத்தூவ ... 

சிறகு விரிக்கும் பட்டம்பூச்சி 
சிங்காரமாய் ஆடிவர ... 

பொன்எழிலாள் வரும் வழியில் 
பூமரமும் குடை விரிக்க .... 

மேகத்திரை விலக்கிக் கதிரும் 
ரசித்திடவே நிலம் நோக்க ... 

தன்னந்தனி வழி வந்து 
நீந்தி களித்து நீராடி ... 

மஞ்சள் மேனி பளபளக்க 
ஒயிலாக நடை போட்டாள்.... 

கன்னியவள் வனப்பு கண்டு 
விரிந்தஇதழ் சிவந்திருக்க .... 

தடாகத் தாமரையும் போதையில் 
ஆடியதே அலைகளிலே ....!!!

No comments:

Post a Comment