மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா ...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா
***மதவெறியால் தறிகெட்டுத் திரிய வேண்டா
சினங்கொண்டு சுடுசொற்கள் உமிழ வேண்டா
***தீயோரை நட்பாகக் கொள்ளல் வேண்டா
கனித்தமிழில் பேசுதற்குத் தயக்கம் வேண்டா
***கடுகளவும் பிறரைப்புண் படுத்த வேண்டா
புனிதமிகு பண்பாட்டை மறக்க வேண்டா
***பொலிவான இயற்கைதனைச் சிதைக்க வேண்டா !!
உதவிசெய்ய ஒருபோதும் தயங்க வேண்டா
***உயிர்களிடம் அன்புகாட்ட மறக்க வேண்டா
வதந்திகளை அப்படியே நம்ப வேண்டா
***வருந்துயரால் கவலையிலே மூழ்க வேண்டா
பதவியினால் பொல்லாங்கு செய்ய வேண்டா
***பணத்தாலே விலைக்குவாங்க எண்ண வேண்டா
விதியென்று மூலையிலே முடங்க வேண்டா
***வியர்வைசிந்த உழைக்காமல் இருக்க வேண்டா !!
முகநூலில் முப்போதும் மூழ்க வேண்டா
***முகம்தெரியா மனிதருடன் பழக வேண்டா
சுகம்மட்டும் வாழ்வென்று கருத வேண்டா
***சோகத்தை இதயத்தில் சுமக்க வேண்டா
புகழென்னும் போதையிலே திளைக்க வேண்டா
***பொய்யான காதலொடு திரிய வேண்டா
அகல்விளக்காய் ஒளிகொடுக்கத் தயங்க வேண்டா
***அடைக்காலமாய் வருவோரை வெறுக்க வேண்டா !!
புறங்கூறி நல்லபெயர் வாங்க வேண்டா
***பொறுப்புகளை உதறிவிட்டுச் சுற்ற வேண்டா
அறநெறியின் வழியினின்றும் விலக வேண்டா
***ஆசைகளை அளவின்றிச் சுமக்க வேண்டா
பிறர்பொருளை அபகரிக்க முயல வேண்டா
***பெற்றோரைச் சுமையாகக் கருத வேண்டா
இறப்புவரு மென்றுதினம் அஞ்ச வேண்டா
***இறைவனது தாள்பற்ற மறவாய் நெஞ்சே !!
சியாமளா ராஜசேகர்