Thursday, April 9, 2015

இதயம் பூக்கும் சுகவனமாகும் ....!!!


உணர்வுகள் ஒளிந்து தூங்கிடும் நேரம் 
உளத்தின் பாடு ரணகளமாகும் ....!! 

இரவுகள் சுமையைக் கூட்டிடும் போது 
இசையே மெய்யாய் அருமருந்தாகும் ...!! 

வறுமைகள் துரத்தி வாட்டிடும் போது 
வரமே தெய்வத் திருவருளாகும் ....!! 

முயற்சிகள் சரிந்து வீழ்ந்திடும் போது 
முடங்கும் நெஞ்சம் மிகக்கடுப்பாகும் ...!! 

கனவுகள் கலைந்து தோற்றிடும் போது 
கடக்கும் பாதை கடும்புயலாகும் ....!! 

பிணக்குகள் மிகுந்து ஓட்டிடும் வாழ்வு 
வினையால் தாக்கும் தலைவிதியாகும் ...!! 

கடமைகள் வதைத்து ஆட்டிடும் போது 
விழிகள் பொங்கி சிறுகுளமாகும் ....!! 

கவலைகள் மனதைக் கொன்றிடும் வேளை 
மழலைப் பேச்சு நனிவரமாகும் .....!! 

உறவுகள் பகையாய் மாறிடும் போது 
உலகில் நட்பே உறுதுணையாகும் ...!! 

கவிதைகள் நதியாய் பாய்ந்திடும் போது 
இதயம் பூக்கும் சுகவனமாகும் .....!!!

No comments:

Post a Comment