Friday, April 3, 2015

தமிழ் திருப்புகழ் ...!!

சங்கம் அமைத்துன்னை வளர்த்திட
தங்கத் தமிழ்நாளும் ஒளிர்ந்திட
எங்கட் கருள்செய்து மகிழ்ந்திடு -தமிழ்த்தாயே
அன்பா லுனைப்போற்றி வணங்கிட
இன்பந் தருபாவால் புகழ்ந்திட
கன்னல் மொழியாளே அருளிட -வரவேணும்
சந்தத் திருப்பாடல் படித்திட
சொந்த மெனவந்து ரசித்திட
இந்தத் தமிழ்முந்தும் தளத்தினில் –பதிவாகும்
சித்த முடன்வந்து களித்திடு
இத்த ரணிமீதில் கலந்திடு
புத்தி தெளிவித்துச் சிறந்திட -துணையாவாய் !
கல்லைக் கனியாக்குந் திறமுடன்
சொல்லைக் கவியாக்கிப் பொலிவுடன்
வெல்லு மிதுவேநற் தருணமாய்- உரைப்பாயே !
பட்டத் துயர்போதும் எமக்குமே
தட்டுத் தடுமாறா துலகினில்
எட்டுத் திசையுந்தன் அருள்மழை -பொழிவாயே !
திக்கித் தடுமாறித் தவிக்குமுன்
சிக்கிச் சிதறுற்றுச் சரியுமுன்
சொக்கும் படியெம்மை அணைத்திடல் - முடியாதோ
சந்திப் பிழையின்றிப் பொருளுடன்
தந்துப் பயன்பெற்று மகிழ்ந்திட
முந்துத் தமிழ்மாலை அணிந்திட- வருவாயே !

No comments:

Post a Comment