Tuesday, December 20, 2016

நிலையாமை !

ஆட்டம் முடிந்ததும் ஆறடி மண்ணுள் அடங்கியப்பின் 
ஈட்டிய செல்வம் எதுவும் வருமோ இதையுணர்வாய் !
கோட்டை பிடிப்பினும் கூட்டைப் பிரிந்தவர் கொள்வதெது ?
பாட்டை யறிந்தால் பதப்படு முள்ளமும் பண்புடனே ! 

ஆகாவுன் காட்சி அழகு ....!!!



ஆகாவுன் காட்சி அழகு ....!!!
*****************************************
கருணை விழிகளால் காத்திடும் தாயே
மருவூ ரரசியே வாராய் ! - விருப்புடன்
பூமாலை சூட்டிட பூரித்தாய், நான்சூட்டும் 
பாமாலை யும்கேட்டுப் பார் . 1.
பார்போற்றும் அன்னையே! பாவத்தைப் போக்கிடுவாய்
கூர்விழியால் நோக்கிக் குறைகளைவாய் - தேர்மீதில்
வாகாய்ப் பவனி வரும்பரா சக்தியே !
ஆகாவுன் காட்சி அழகு . 2.
அழகே யுருவான அன்னையின் கோலக்
கழலின் தரிசனம் கண்டால் - உழலும்
மனக்கவலை தீரும், மகிழ்ச்சிப் பெருகும்
கனவும்கைக் கூடிடும் காண் . 3.
காண்பேனோ வுன்றன் கமலமலர்த் தாளினை
வீண்பொழுது போக்காமல் வேண்டுவனோ - நீண்டொலிக்கும்
கோவில் மணியாய்க் குளிர்ந்திடச் செய்வேனோ
பாவியெனைக் காப்பாய் பரிந்து . 4 .
பரிந்துநீ காவாக்கால் பார்தூற்று மம்மா
சரியென்றால் விட்டுவிடு தாயே! - உரிமையுடன்
கேட்கிறேன் அன்பினால் கெஞ்சிக் கதறுகிறேன்
ஆட்கொள்வா யென்னை அணைத்து. 5.
அணைக்குமுன் கைகளை ஆசையுடன் தொட்டுப்
பிணைத்துக்கொள் வேன்நானும் பேறாய் ! - துணையாய்
வருமுன்னை நெஞ்சத்தில் வைத்துச் சுமப்பேன்
திருமுகம் கண்டே திளைத்து . 6.
திளைக்குமென் னுள்ளமும் தேவியுனைக் கண்டு
சளைக்காமல் சந்ததமும் தாவும் !- விளையாட்டும்
ஏனம்மா? பிள்ளையெனை ஏற்பாய் பரிவுடன்
தேனமு தூட்டியெனைத் தேற்று . 7.
தேற்றும் பரிவுகண்டு தேம்பி யழுவேனே
போற்றி யடிபணிவேன் பூரிப்பில் ! - கூற்றுவன்
வந்தால் கலங்கவே மாட்டேன், முழுமனதாய்
அந்தகனு டன்செல்வேன் ஆம். 8.
ஆமம்மா! உன்னருளே ஆயுளுக்கும் போதுமுன்
நாமமே சொல்லி நலம்பெறுவேன்! - கோமதியே !
கொண்டைப்பூ வாசம் குளிர்விக்கக், கால்களிலே
தண்டையுங் கொஞ்சவந்து தாங்கு . 9.
தாங்கினாய் மேல்மருவூர் தாயே! தயாபரியே!
ஓங்கார ரூபிணியே! உத்தமியே! - பாங்குடன்
ஆடிப்பூ ரத்தில் அழகாய்ப் பவனிவரப்
பாடிடுவேன் வெண்பா படைத்து . 10.

ஒற்றை ரோஜா ....!!!


முள்ளிடையே மலர்ந்தாலும் மோகனமாய்ப் புன்னகைக்கும் 
கள்ளிருக்க வண்டீர்க்கும் காற்றினிலே அசைந்தாடும் 
கிள்ளியதைச் சூடிடவே கெஞ்சிநிற்கும் கன்னிமனம் 
கொள்ளைகொள்ளும் காதலரைக் கொஞ்சிடவே ஏங்கிநிற்கும்  !

இளஞ்சிவப்பு நிறத்தினிலே இனிதாக மொட்டவிழும் 
இளங்காலைப் பொழுதினிலே இதயத்தை வருடிவிடும் 
களங்கமிலாப் பனித்துளியைக் கனிவுடனே சுமந்திருக்கும் 
உளம்விரும்பும் மலர்களிலே ஒற்றைரோஜா மிகவழகே !

Sunday, December 11, 2016

முத்துக் குமரா வருக வருக ...!!!





முதிரா யிளமை யோடே யென்றும் 
****முத்தா யொளிரும் முத்துக் குமரன் !
துதிக்கு மடியார் துயரைத் துடைக்க 
****துள்ளி குதித்தே ஓடி வருவான் !
விதியை மாற்றி விளங்க வைப்பான் 
****வீடு பேற்றை விரும்பி அருள்வான் !
கதியே நீதா னென்றா லவனும் 
****கண்ணீர்த் துடைக்கக் கடிதே வருவான் !

குருகு கொடியைக் கையி லேந்திக்
****கோல மயிலில் குளிர்ந்தே வருவான் !
உருகி யழைத்தால் உள்ள மினிக்க 
****உவகை யோடு காட்சி கொடுப்பான் !
முருகா வென்றால் முன்னே நிற்பான் 
****முடியாச் செயலை  முடித்து வைப்பான் !
விருத்தம் பாடி வெண்ணீ றணிய 
****விரைந்து வந்தே வினைகள் தீர்ப்பான் !

குறைகள் களைய குகனே வருக 
****குன்றி லமர்ந்த கோவே வருக !
மறைகள் போற்று மழகா வருக  
****வள்ளி மணாளா வருக வருக !
நிறைந்த மனத்தில் நிமலா வருக 
****நெஞ்சம் கனிந்து தயவாய் வருக !
இறைவா நீயும் இனிதே வருக 
****ஈசன் மகனே இசைந்தே வருக !


Friday, December 9, 2016

உடையாத நீர்க்குமிழி ....!!!

கலங்க வேண்டாம் அன்னையே ....!!!



அன்னை யுன்றன் வேதனை 
****அறிய முடிய வில்லையே !
என்ன சொல்லித் தேற்றிட 
****எனக்கு வயது மில்லையே !
சின்னப் பிள்ளை யாயினும் 
****சிறந்தத் துணையாய் விளங்குவேன் !
உன்னை வாழும் நாள்வரை 
****உள்ளன் போடு போற்றுவேன் !

சென்ற நாளை மறந்திடு 
****செல்ல மகனை நினைத்திடு !
வென்று நானும் காட்டுவேன் 
****விடியல் பூக்கும் பொறுத்திரு !
துன்பம் விலகும் நிச்சயம் 
****துடைப்பேன் உன்றன் துயரினை !
நன்மை கூடி வந்திடும் 
****நடுக்கம் வேண்டாம் வாழ்வினில் !

வண்ண மாக மாற்றுவேன் 
****வருத்தம் வந்தால் ஓட்டுவேன் !
புண்ணாய்ப் போன மனத்தினைப் 
****புரிந்து நடப்பேன் என்றுமே !
விண்ணும் மண்ணும் போற்றிட 
****வியக்கச் செய்வேன் உண்மையாய் !
கண்ணுள் வைத்துத் தாங்குவேன் 
****கலங்க வேண்டாம் அன்னையே ! 

Thursday, December 8, 2016

வளமாக வாழ்ந்திடுவோம் ....!!!

கரமிரண்டும் சேர்ந்தால்தான் பிறக்கும் சத்தம் 
****கவனத்தில் கொண்டாலே தெளியும் பித்தம் !
உரமிட்டு வளர்த்திடுவோம் உறவைப் பேணி 
****உரிமையுடன்  கரைசேர்க்கும்  பாசத் தோணி !
தரணியிலே தாயன்புக் கீடே யில்லை  
****தண்டமிழின் இனிமைக்கு முண்டோ யெல்லை   !
வரமான பண்பாட்டைக் கண்போல் காத்து 
****வளமாக வாழ்ந்திடுவோம்  மண்ணில் பூத்தே  ...!!

Tuesday, December 6, 2016

அழகு !



வழியும் விழியில் வடிவாய் விளங்கும் 
அழியா முதல்வி அழகு !

வழியும் விழியில் வதனம் மலர 
அழியா முதல்வி அழகு .



மதித்திடு தாய்மொழித் தமிழை ....!!!

இயலிசை யோடு நாடக மென்ற
***இன்றமிழ்  மூன்றினைப் போலே 
மயக்கிடும் வேறு மொழியெது முண்டோ
***மதித்திடு தாய்மொழித் தமிழை !
சுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச் 
***சுத்தமாய்க் கலப்பட மின்றி 
வியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி
***விளங்கிடச் செய்திடல் நன்றே !

ஈரவிழி காயவில்லை இன்று ....!!!


அஞ்சாத சிம்மமே! ஆற்றலில் கொற்றவையே! 
நெஞ்சுள் நிறைந்தாய் நினைவுகளாய்!- எஞ்ஞான்றும் 
ஈடில்லாப் பெண்ணரசி! என்றினி காண்போம்யாம் 
வாடினோம் கண்ணீர் வடித்து. 

அங்குவிழி மூடி அமைதியாய்த் தூங்குகிறாய் 
பொங்கிவரும் கண்ணீரால் போற்றுகிறேன்! - மங்காதே 
உன்றன் புகழிவ் வுலகமும் உள்ளவரைச் 
சென்றுவா அம்மா சிறந்து. 

திரும்பாத நல்லிடந் தேடியே சென்றாய் 
செருக்கின்றி வாழ்ந்தாய்ச் சிறப்பாய்! - அரும்புமுன் 
புன்சிரிப்பும் எங்கினிப் பூக்குமோ சொல்லம்மா 
வென்றாயெ முள்ளம் விரைந்து 

இங்கென் மனமும் இளகித் தவிக்கிறதே 
வங்கக் கரையில் வனப்பாய்த் துயில்வாயோ 
மங்கையுன் சக்தி மகத்தான சக்தியம்மா 
எங்கும் நிறையும் இனிது. 

பகுத்தறிந்து பாங்குடனே பாதை வகுத்தாய் 
தகுதியுடன் நல்லாட்சி தந்தாய் - வெகுமதியாய்ப் 
பெற்றோமே யுன்னைப்! பிரிவென்றால் தாங்குமோ 
பற்றுடன் பாடினேன் பா. 

மதிக்கு மிதயத்தில் வாழ்வாய்நீ என்றும் 
எதிலுனையான் காண்பேன் இனிமேல்! -விதியால் 
பிரிந்திடினும் தாயேநற் பேறேநீ தானே 
மரித்தாலும் இம்மண்ணில் வாழ். 

வளர்த்தக் கழகத்தை மாசின்றிக் காப்போம் 
உளமார நேசிப்போம் உய்யத்!- தளர்வின்றி 
நாளு முயர்ந்திட நாமும் துணையிருப்போம் 
தோளுடனீ வோம்தோள் தொடர்ந்து. 

விதவிதமா யஞ்சலி வெண்பாவாய்ப் பூக்கும் 
முதல்வருக் கன்புடன் முத்தாய்! - இதமாய்த் 
துயிலுமம் மாவுக்குச் சூட்டுவேன் மாலை 
உயிராய் நினைப்பேன் உணர்ந்து. 

குளிர்வித்தா யம்மா கொடைவள்ளல் நீயே 
களிப்புறச் செய்தாய்க் கனிந்து !- உளியாய்ச் 
செதுக்கித் தமிழ்நாட்டைச் சீர்தூக்கி விட்ட 
புதுமைப்பெண் தொண்டினைப் போற்று . 

விண்ணிற்குச் சென்றாலும் மேதினியில் யாம்மறவோம் 
கண்ணின் மணியாய்க் கருதிடுவோம் !- பெண்களிலே 
பேரரசி! நற்புகழ் பெற்றக் கலையரசி! 
ஈரவிழி காயவில்லை இன்று .

Thursday, December 1, 2016

வாழ்த்து ...!!!




செல்லாமற் போனதேன்? சேமித்து வைத்தவற்றை 
இல்லாமல் மாற்றிடவே இல்லைமனம்! - சில்லறையாய் 
ஆயிரமும் ஐநூறும் கைமாற்றி வாங்கிடினும் 
வாயிலாத் தாட்களை வாழ்த்து.

இதழகல் வெண்பா ....!!!



கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன் 
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா 
காய்கிறதே! தாரகை கண்ணடித்தே செல்கிறதே! 
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.

Wednesday, November 30, 2016

காவிரியே களித்தோடிவா ...!!!



தடைபோட்டுத் தடுத்தாலும் தமிழ்நாட்டின் வளம்காக்கத் 
****தயங்காமல் தவழ்ந்தோடிவா ! 
இடையூறு கொடுத்தாலும் இமைப்போதும் அசராமல் 
***இயல்பாக எதிர்த்தோடிவா ! 
விடைகூறி விரைவாக விவசாயம் செழித்தோங்க 
****விருப்போடு சிரித்தோடிவா ! 
புடைசூழ வருவோரின் புரியாத பகைமாற்றிப் 
****பொலிவோடு புரண்டோடிவா ! 

அடைத்தாலும் மறித்தாலும் அடங்காமல் திமிராக 
****அணைப்போரை இனங்காணவா ! 
மடைதாவி விளையாடி மருண்டோடும் கயல்மீனை 
****மறவாமல் உடன்கூட்டிவா ! 
நடைபோட்டு மிடுக்காக நதியேயுன் எழிலோடு 
****நலம்வாழக் குதித்தோடிவா ! 
கடைத்தேற வழிபார்த்து கருவாயுன் கவிகேட்டுக் 
****கனிவோடு களித்தாடிவா ....!!!

என்னுயிர் நீதானே ....!!!

உன்னையே எண்ணினேன் நீலவண்ணா 
****உலகமே நீயென வாழ்ந்திருந்தேன் !
அன்பினால் இறைஞ்சினேன் கழல்பணிந்து 
****அருகினில் நீவர ஏங்கிநின்றேன் !
இன்பமோ துன்பமோ  எதுவரினும் 
****இனியவன் உன்னுடன் ஏற்றிடுவேன் !
மின்னலாய் மறைந்தது மேன்கண்ணா ?
****விரைந்திடு என்னுயிர் துடிக்குதடா !

மூடிய திரைதனை நீக்கிவிடு 
****முன்பனி வாட்டுமுன் வந்துவிடு !
தோடியில் பாடினேன் கேட்கலையோ
****தோகையென் இன்குரல் ஈர்க்கலையோ ?
தேடினேன் நதிக்கரை வழியெங்கும் 
****தேகமும் அசதியில் சோர்ந்ததடா !
வாடிய பயிரென வதங்கிவிட்டேன் 
****மாயனே மயக்கிட வாராயோ ?

கோதையின் நெஞ்சமும் அறியாயோ 
****கோபியர் கொஞ்சிடக் களித்தாயோ ?
கீதையின் நாயகா கெஞ்சுகிறேன் 
****கீதமுன் காதிலே கேட்கலையோ ?
பாதையில் பார்வையைப் பதித்தேனே 
****பாவியென் நிலையினைப் பாராயோ ?
பேதையைத் தவித்திட வைப்பாயோ 
****பேறென அணைத்துக் கொள்வாயோ ?

ஊதிடும் குழலிசை கேளாமல் 
****ஊனமாய் ஆனதே என்னிதயம் !
சேதியை யாரிடம் சொல்லுவதோ 
****சேடியும் இவ்விடம் காணலையே !
சோதியில் நின்முகம்  தெரிந்ததடா 
****சொர்க்கமாய்க் காட்சியும் இனித்ததடா !
காதிலுன் நாமமே ஒலிக்குதடா 
****கண்ணனே என்னுயிர் நீதானே !



Tuesday, November 29, 2016

நதிக்கரையினிலே ....!!!

ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும் 
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும் 
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும் 
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் ! 

இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும் 
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும் 
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும் 
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ? 

ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும் 
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும் 
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும் 
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே 

நதிக்கரை ஞாபகங்கள் ....!!!


வளைந்துசெலும் வழியெங்கும் வளத்தைக் கூட்டும் 
****வனப்பினிலே அகங்குளிர வதனம் பூக்கும் ! 
களைப்பகற்றத் தென்றலுடன் கலந்து வந்து 
****காலடியை முத்தமிட்டுக் காதல் சொல்லும் ! 
திளைத்தமனம் புத்துணர்வால் தெளிவைப் பெற்றுச் 
****செயலாற்ற நாள்முழுதும் சிறப்பாய்ச் செல்லும் ! 
விளைந்திருக்கும் நெற்கதிர்கள் வெட்கம் மின்ன 
****விருப்பமுடன் தலையசைத்து நன்றி கூறும் ...!!! 

மதிவந்து முகம் பார்த்து மயங்கி நிற்க 
****மகிழ்வுடனே நதிநீரும் மையல் கொள்ளும் ! 
குதித்தோடிக் கயலுடனே குலவும் கெண்டை 
****கொஞ்சிவிளை யாடிடுமே கூடி ஒன்றாய் ! 
நதியோடு நினைவலையில் நனைந்து மூழ்க 
****நடந்ததெலாம் மனத்திரையில் நடன மாடும் ! 
புதிராகப் போயிற்றே புனலில் போக்கு 
****பொலிவிழந்தக் காரணத்தைப் புரட்டு முள்ளம் ...!!! 

செழிப்பான நதியெங்கே தேடிப் பார்க்கும் 
****சிறுவர்தம் மணல்வீடாய்ச் சிதைய லாச்சோ ? 
கழிவுகளால் சீர்கெட்டுக் கசடாய் மாறிக் 
****கருவேலம் படர்ந்துள்ளக் காடாய்க் கண்டோம் ! 
வழித்தெடுத்து மணற்கொள்ளை வகையாய்ச் செய்யும் 
****வஞ்சகரால் விவசாயி வாழ்வும் மங்கும் ! 
அழிந்துவரும் நதிவளத்தை அரசும் காத்து 
****அனைத்துநலத் திட்டங்களும் அளித்தால் நன்றே ...!!! 

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நிலவும் நானும் ....!!!


நிலவுடன் நானும் தோழமை யோடு 
****நினைவுகள் யாவையும் பகிர்ந்தேன் !
மலர்ந்தவள் வானில் வந்திடும் தருணம் 
****மகிழ்வுடன் நெஞ்சமும் குளிர்ந்தேன் !
உலகமே வியக்கும் வெண்ணில வவளை 
****உரிமையாய் உறவெனக் கொண்டேன் !
பலகணி வழியே பாத்தவ ளழகைப் 
****பருகியே கவிதையும் வனைந்தேன் !

மயக்கிடும் அந்திப் பொழுதினில் மெல்ல 
****மதிமுகம் கண்டதும் சிலிர்த்தேன் !
வியப்புறும் வண்ணம் வடிவினைக் கண்டு 
****விடிந்திடும் வரையிலும் விழித்தேன் !
நயம்பட நாளும் நடந்ததைச் சொல்லி 
****நலமுடன் நட்பினை வளர்த்தேன் !
இயற்கையின் எழிலை அனுதினம் ரசித்தே  
****இறைவனை வந்தனை செய்தேன் !

முகிலினுள் ஒளிந்து முகத்திரை போட்டு 
****முழுவதும் மறைந்ததில் துடித்தேன் !
சகியவள் வெளியே வந்ததும் தானே 
****தனிமையில் புன்னகை புரிந்தேன் !
நெகிழ்வுடன் பேசி நிழலெனத் தொடரும் 
****நிலவுடன் உள்ளமும் கலந்தேன் !
பகிர்ந்திட ஆசை கொண்டத னாலே 
****பழகிய சுகந்தனை வடித்தேன் !

சியாமளா ராஜசேகர் 

தேடு ....!!!


மண்ணுலக வாழ்விற்குப் பொருளைத் தேடு!
***மகிழ்வாகும் இல்வாழ்வு நாளும் ஓடு!
விண்ணுலக வாழ்விற்கோ அருளைத் தேடு!
***வித்தாகு மான்மீக மிதுகண் கூடு!
நுண்ணறிவு பெற்றிடவே குருவைத் தேடு!
***நொந்தமனம் தெளிவுபெற உதவும் ஏடு!
திண்மையுடன் உள்ளமதில் இறையைத் தேடத்
***தீவினைகள் தோற்றோடக் காண்பாய் நெஞ்சே !
சியாமளா ராஜசேகர்

தனிச்சொல் வெண்பா ....!!!

கண்ணுக்கு ளுன்னைவைப்பேன்! காலமெல்லாம் காத்திருப்பேன்! 
எண்ணமெல்லாம் நீயாக ஏங்கிடுவேன்!- கண்ணம்மா ! 
வண்ணப்பா வொன்றை வடிவா யியற்றிடுவேன் 
பண்ணிசைத்துப் பாடிடுவேன் பார் . (1) 

சின்ன இடையினில் சேலை நழுவிடும் 
கன்னக் குழியும் கவிபாடும் - என்னவளின் 
புன்னகை யில்மனம் பூத்துக் குலுங்கிடும் 
பொன்னொளிர் மேனி பொலிவு . (2) 


தனிச்சொல் வெண்பா 
``````````````````````````````````` 
தனிச்சொல், வெண்பாவின் நான்கு அடிகளுக்கும் பொருந்திப் பொருள்தரவேண்டும்!

அவளும் நானும் ....!!!



அவளும் நானும் அன்பா லிணைந்தோம் 
உவகைப் பெருக்கால் உள்ளம் பூத்தோம் 
கவலை மறந்து கனவை வளர்த்தோம் 
சிவந்த இதயச் சிலிர்ப்பில் நெகிழ்ந்தோம் ! 

நிலவின் ஒளியில் நெஞ்சம் குளிர்ந்தோம் 
மலரின் மணத்தில் மயங்கிக் கிடந்தோம் 
குலவி தினமும் கொஞ்சி மகிழ்ந்தோம் 
புலனை வென்று புரிந்து நடந்தோம் ! 

அருவிக் கரையில் அவளும் நானும் 
பெருகும் நினைவில் பெருமை கொண்டோம் 
விருப்பத் தொடு விருந்தா யானோம் 
வருத்த மின்றி வளைய வந்தோம் ! 

கனிவாய்ப் பேசிக் காதல் வளர்த்தோம் 
இனிமை ததும்பும் இயற்கை ரசித்தோம் 
பனியில் நனைய பழுதும் மறந்தோம் 
புனிதம் காத்துப் புகழைப் பெற்றோம் ! 

அழகின் சிரிப்பில் அவளும் நானும் 
பழகிப் பார்த்துப் பயணம் தொடர்ந்தோம் 
எழிலாம் இனிய இயற்கை ரசித்தோம் 
விழியின் மொழியில் விதைத்தோம் அன்பை !

Thursday, November 24, 2016

கண்ணன் திருப்புகழ் ....!!!




தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத் - தனதானா
சீலமு லாவிய கோபியர் நெஞ்சத்
தோவிய மாயுறை மோகன னின்பொற்
சேவடி யேகதி யேயென யின்புற் - றிடுவேனோ
தேடியு மோடிடு பாசமு டன்சிட்
டாகது வாரகை யேகிவி ளங்கித்
தேவதை போலெழி லாளைவி ரும்பித் - தடுமாறும்
பாலனை மாயனை நேசமு டன்பித்
தானது போலுள மாகிட வஞ்சிப்
பாடலொ டாடிடு வோனைவ ணங்கிப் - பணிவேனே
பாவைய ராசையி னாலுனை நம்பிப்
பாசுர மேதின மோதிம யங்கிப்
பாவன மேபுரி ராதையி னன்பைப் - பெறுவோனே !
சோலையி லேகுழ லூதம யங்கித்
தோழியர் கூடிட லீலைநி ரம்பித்
தோகையர் பூவிழி பேசிட அந்திப் - பொழுதோடே
சூடிய பூவது வாடிடு முன்பட்
டாடையி லேயொரு சேடிந டுங்கிச்
சோதனை தீரவி னாவிடு கெஞ்சிக் - கனிவோடே
கோகுல வாசனை மாலையில் கொஞ்சிக்
காதலி னோடுகு லாவிட வொன்றிக்
கூடிய கோபிய ரோடும னஞ்சற் - றிளகாதோ
கோமள னேமது சூதன னின்பொய்க்
கோபமு மேயறி யாதவ னன்பிற்
கோதையி னோடுற வாடும னந்தப் - பெருமாளே !

Thursday, November 17, 2016

மனம்மயக்க வருவாயா ...???

காத்திருந்த நேரமெல்லாம் கண்ணனுனைக் காணாமல் 
பூத்தவிழி சோர்ந்துவிட புன்னகையும் மறந்ததடா !
சாத்திவிட்ட மனக்கதவைத் தட்டியெழுப்பி அணைப்பாயோ ?
ஆத்தாடி ! என்செய்வேன் ஐம்புலனும் தவிக்குதடா !

நித்தமுன்றன் நினைவாலே நெஞ்சமெல்லாம் கொதிக்குதடா 
நித்திரையும் மறந்ததடா! நெக்குருக மாட்டாயோ ?
சுத்தமனத் தொடுன்னைச் சுற்றிவரு மென்னைநீ 
பித்தாக்கி விடுவாயோ ? பிழையென்ன கண்டாய்சொல் !

தென்றலெனைச் சுட்டிடுதே செந்தேனும் புளித்திடுதே 
கன்னலதும்  கசந்திடுதே காதலுளம் கசிந்திடுதே 
சின்னயிடைத் துவண்டிடுதே செவ்விதழும் உலர்ந்திடுதே 
மன்னவனே வந்திடடா மனமுருக வேண்டுகிறேன் !

கால்கடுக்க நிற்கின்றேன் காத்திருப்பு கொடுமையடா 
சேல்விழியும் கலங்குதடா சீக்கிரமே வந்திடடா !
பால்முகமும் வாடுதடா பாவையெனைப் பார்த்திடடா 
மால்வண்ணா! குழலூதி மனம்மயக்க வருவாயா ....?