Thursday, November 26, 2015

மரத்தின் புன்னகை ....!!!


மழைக் காற்றில்
குலுங்கிக் குதித்துக் 
குத்தாட்டம் போட்ட மரங்கள் 
குளித்து முடித்து 
சுத்தமாய் தலை உலர்ந்த 
பூரிப்பில் ....
அமைதியாய் அழகாய் 
அசைந்தாடின 
பச்சை இலைகளில் 
புன்னகை சுமந்தபடி !

Sunday, November 15, 2015

வான் மழையே ....!!!




ஏன்வந்தா யென்றுனை ஏச முடியவில்லை 
தேன்மாரி யென்றுந் திளைக்கவில்லை - வான்மழையே ! 
கொட்டியது போதும் குமுறாதே, சீற்றத்தை 
விட்டுவிட்டுச் செல்கவுன் வீடு .

நின் புகழ் வாழுமே நீடு !

தன்னல மில்லாத் தகைமையிற் சீலரே
தன்னடக் கத்தின் தலைமகனே ! - அன்புடன்
தன்னம்பிக் கையூட்டிச் சாதிக்கச் செய்தவரே
நின்புகழ் வாழுமே நீடு !
வல்லரசாய்த் தாய்நாட்டை மாற்ற வழிகாட்டி
நல்லறி வூட்டிய நாயக !- செல்லுமிட
மெல்லாம்நீ மாணவரு ளேற்றிய ஞானவொளி
வெல்லு முலகில் மிளிர்ந்து .
கண்ணியத் தோடு கடமைக ளாற்றியே
மண்ணில்நற் பேரெடுத்த வல்லவரே !- உண்மையில்
எண்ணிவியக் கின்றோம் எளிமையின் உச்சமே
விண்சென்றா யெம்மையழ விட்டு .
இன்முக வித்தகர் ஏவுகணை நாயகர்
அன்பில் கலாமும் அதிசயமே ! - அன்னார்
கனவைமெய்ப் பிக்க கனவுகள் கண்டே
நனவாக்கு வோமின்றே நாம் .
வித்தை விதைத்தீர் விருட்ச மெனவளர்வோம்
முத்தாய் ஒளிர்வோம் முதன்மையாய் - நித்தமும்
சத்திய மாய்முயன்று சாதிப்போம்! எண்ணத்தில்
உத்தம!நீ யெம்மை உயர்த்து .
தூய்மையின் சின்னமாய்ச் சோர்வின்றித் தன்பணியில்
வாய்மையே கொள்கையாய் வாழ்ந்தவ ! - மாய்ந்தவுனைத்
தாய்மடி போலவே தன்னுள்ளே தாங்கிட
பேய்க்கரும்புப் பெற்றதோ பேறு ?

       ( துபாய் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டி -2015 - ல்
         முதல் சுற்றில் தேர்வானக் கவிதை )

Thursday, November 12, 2015

காதல் பேசும் கடுதாசி .....!!!




விழிகள் பேசாக் கதைகளையும் 
***விளக்கிப் பேசும் கடுதாசி !
பொழியும் அன்பில் உருகவைக்கும் 
***புதிதாய் நிதமும் உணரவைக்கும் !
பிழிந்தே உணர்வை வெளிப்படுத்தும் 
***பிரிவைக் கூடத் தாங்கவைக்கும் !
அழியாக் காதல் சுமந்துவரும் 
***அருமைத் தோழன் கடுதாசி ...!! 

Wednesday, November 11, 2015

காணாமற் போனாயோ ...???



கொட்டியது வான்மழை, கோடுகளாய் மின்னலும் 
வெட்டியது, விண்ணிலிடி வேட்டுவைக்க - கட்டியே
போட்டதுபோல் காணாமற் போனாயோ வெண்ணிலவே 
பூட்டியதா ரென்றே புகல். 



பூட்டிய தாரெனப் பொன்நிலவே நீசொல்வாய் 
வாட்டி வதைத்திடுவேன் வார்த்தைகளால் ! - மீட்டுவந்து 
மீண்டு முனைவான் வெளியி லுலவவிட்டு 
ஈண்டுக் களிப்பேன் இனிது .









































Saturday, November 7, 2015

கொம்பே துணை



தள்ளாடும் வேளையில் தாங்கிட யாருமில்லா 
உள்ளத்தின் வேதனை ஓயாதோ ?- பிள்ளை
யிதயமும் கல்லோ ? யிரும்போ? கைவிட்டார்க்  
குதவிடும் கொம்பே துணை .

Thursday, November 5, 2015

வரந்தரும் விநாயகா ....!! ( பாடல் )



பல்லவி 
````````````` 
மங்களம் பொங்கிட வரந்தரும் விநாயகா 
எங்களுக் கருளவே இக்கணம் வருகவே ! 

அனுபல்லவி 
~~~~~~~~~~~~ 
திங்களும் கங்கையும் சிரசினில் சூடிய 
சங்கரன் மைந்தனே சண்முகன் சோதரா ! 

சரணம் 
```````````` 
மோதகப் பிரியனே மூஷிக வாகனா 
பாதமும் பணிந்திட பரிவுடன் காத்திடு 
சோதனை போதுமெம் சுமைகளைத் தாங்கிடு 
வேதனை நீக்கிடு விக்கின விநாயகா ! 


( விளச்சீர்களால் அமைந்த பாடல் )

Wednesday, November 4, 2015

சேய்போல மகிழ்வுதரும் சொந்தமுண்டோ ?



தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும் 
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் ! 
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து 
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் ! 
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால் 
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் ! 
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ? 
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!

அன்பினிலே கரைந்தேன் நானே !



சாபமெனப் பருப்புவிலை யேறிப் போக 
***சாம்பாரை மறந்திடத்தான் வேண்டு மென்றாள் ! 
கோபமுடன் தட்டோடு தூக்கி வீச 
***கூப்பாடு போட்டவளும் திட்டித் தீர்த்தாள் ! 
தீபமென ஒளிவீசும் வாழ்வில் சண்டை 
***தீராதோ எந்நாளும் தட்டுப் பாட்டால் ! 
தாபமுடன் அணைத்திடவே குளிர்ந்தாள் மெல்லத் 
***தாரத்தின் அன்பினிலே கரைந்தேன் நானே ! 




( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
காய் காய் மா தேமா 
காய் காய் மா தேமா

Tuesday, November 3, 2015

வசியமுடன் சிரித்திடுதே ....!!!




விண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி 
***விளையாடும் இரவினிலே நாளும் வானில் !
வெண்பூக்கள் அந்தியிலே அவிழ்க்கும் மொட்டால்
***மென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் !
மண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம் 
***மழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் !
வண்ணத்துப் பூச்சிக்கு  மதுவைத் தந்து 
***வசியமுடன் சிரித்திடுதே  வண்ணப் பூவே ....!!


       ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )