Thursday, April 2, 2015

முடி சூடிய மாமன்னன் .....!!!



அவதரித்தான் ஆடிமாத ஆதிரை நாளில் 
சிவனருளால் நற்றவச் செல்வன் -இவனே 
இராசேந் திரனெனும் ராசராசன் மைந்தன் 
பராக்கிரம மிக்கவேந்த னே ! 

வானவன்மா தேவி வயிற்றி லுதித்திட்ட 
கோனவன் நற்பெருமைக் கூறிடவோ ?-தானத்தில் 
மிக்கவன் கம்பீர மேனியன் ஒப்பில்லாப் 
பக்தியில் முன்னவ னே ! 

கங்கைகொண்ட சோழபுரம் கட்டமைத்த மன்னனாம் 
செங்கற்கோ யில்மாற்றிச் செப்பனிட்டான் -சிங்கள 
நாட்டுடன் போரிட்டே நட்டான்வெற் றிக்கொடி 
ஏட்டி லிடம்பிடித்தா னே . 

அரியணை யேறியான தாயிர மாண்டு 
புரிந்தான் கடல்தாண்டிப் போர்கள் -உரித்தான 
சோழவள நாட்டினைச் சொர்க்கபூமி ஆக்கினனே 
வாழட்டுஞ் சோழன் புகழ்

No comments:

Post a Comment