கார்மேகம் கூடிக் கனத்த இடியுடன்
கூர்மின்னல் வெட்டிடக் கொட்டுமாம் - ஏருழவன்
வாழ்வில் வளம்கொழிக்கும்; மண்ணில் மழைதானே
தாழ்வின்றிக் காக்கும் தகை .
மாமழை போற்றிட மண்ணில் பொழிந்திடும்
நாமணக்கப் பாடுவோம் நற்றமிழில் - பாமழை
கண்டதும் சோலை களிப்புறும்; தேமதுர
வண்ணமும் சிந்தும் வரும் .
இறைவ னருளால் இயற்கை வரமும்
நிறைவாய்க் கிடைக்கும் நிசமாய் !- குறைவறப்
பெய்யும் மழையால் பெருகும் வளங்களால்
தொய்வின்றிப் போகும் தொழில் .
செய்த வினைப்பயனோ சீராய் மழையின்றி
வெய்யோனும் வாட்டிடுதல் வேதனையே! - பொய்க்காமல்
பூமியிலே சிந்துக பொன்வானே உன்கருணை
சாமிபோல் ஆகட்டும் தா .