Sunday, March 29, 2020

வண்ணப் பாடல் ...!!!

தனன தான தானான
தனன தான தானான
தனன தான தானான தனனானா
மலையின் மீது கார்மேக
முரசி யாட வேநீல
மயிலு மாட மானோடி விளையாடும் !
வளியி லாடு பூவோடு
கிளைக ளாட வேரோடு
மரமு மாட வாகாக மனமாடும் !
அலைக ளோடு சேலாட
மதகு தாவி நீரோட
அருவி பாயு தேயாடி யிசையோடே !
அழகு நீள வாலோடு
கவிக ளோடி யேயாட
அருகி லேப லாவாசம் நுகராயோ !
இலையெ னாத சீரோடு
நிலவு லாவு வான்மீதில்
இரவு நேர மீனோடு முகிலாட !
இடைய றாது பேசாமல்
அமைதி யோடு பூபாளம்
இதய ராக மேபாட விதுவேளை !
நிலையி லாத வாழ்வோடு
புவியில் மாய நோயோடு
நிலவும் வாதை யேதீர வழியேது ?
நெடிய மாலை யேபாட
விலகி யோடு மேசோகம்
நிலையும் மாற வேயாடி வருவோனே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment