Thursday, March 26, 2020

வாரீர் வாரீர் ...!!!



Image may contain: sky and outdoor

தஞ்சையிலே பெருவுடையார் கோயிலுக்கு வாரீர்
தங்கமென மின்னுமெழில் விழாக்கோலம் காணீர் !
கொஞ்சுதமிழ்த் திருமுறைகள் மந்திரங்கள் ஒலிக்கக்
குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறும் நாளை!
நெஞ்சமெல்லாம் தித்திக்கத் தேன்தமிழைக் கேட்டு
நெற்றிக்கண் கொண்டோனு முளங்குளிர்ந்து மகிழ்வான் !
வஞ்சமின்றி வரந்தரவே நந்திமீத மர்ந்து
வலம்வருவான் வாருங்கள் திருவருளைப் பெறவே !!
சுவரெல்லாம் சித்திரங்கள் கலையழகைக் கூட்டும்
சோழராண்ட காலத்தைக் கண்முன்னே காட்டும் !
சிவவடிவம் எங்கெங்கும் பக்தருளம் மீர்க்கும்
சிவாயநம எனும்நாமம் நாவினிலே பூக்கும் !
தவமிருந்து காத்திருந்த சிலைகளெல்லா மாடும்
தலையாட்டி பொம்மைகளும் நல்வாழ்த்து பாடும்!
கவலைகளை உதறிவிட்டு தஞ்சைக்கு வாரீர்
கலைக்கோயில் குடமுழுக்கைக் கண்டுமகிழ் வீரே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment