Thursday, March 26, 2020

வண்ண வண்ண மலர்கள் ...!!!

Image may contain: flower


தென்றல் தழுவித் தீண்டுகையில்
சிலிர்ப்பில் மெல்ல அரும்பவிழும்!
சின்ன இதழ்கள் விரித்தபடிச்
சிரித்து வருடி மனம்மயக்கும்!
கன்னல் மதுவைத் தான்சுமந்து
கரிய வண்டைக் கவர்ந்திழுக்கும் !
இன்ப மளிக்கும் அழகுமலர்
இயற்கைத் தாயின் இளையமகள் !!
புதிதா யரும்பித் தொட்டிகளில்
பூத்துக் காற்றில் அசைந்தாடும்!
இதழ்கள் தாங்கும் பனித்துளிகள்
இதயம் நனைத்தே இதமளிக்கும் !
மதியை மயக்கி மன்னவனின்
மனத்தில் காதல் நிறைத்துவிடும்!
விதையாய்த் தானே உருமாறி
மீண்டும் செடியாய் முளைத்துவிடும்!
வண்ணங் கொஞ்சும் பலவடிவில்
வாசம் நிறைக்கும் சோலைதனில்!
கண்ணைக் கவரும் கவினழகால்
கவிஞர் பாட்டில் கருவாகும்!
மண்ணில் பெண்ணுக் குவமையாக
மலரைச் சொல்லும் வழக்கமுண்டு!
விண்ணின் பூவாய் நிலவுதனை
விளிக்கும் பாக்கள் மிகவுண்டு!!
புலரும் காலைப் பொழுதினிலே
பூக்கும் மலர்கள் பலவுண்டு !
விலகிப் பரிதி மறைந்தபின்னே
விரியும் மலர்கள் இங்குண்டு!
மலரை ரசிக்கா விழிகளில்லை
மணத்தை நுகரா நாசியில்லை !
விலையோ உச்சம் தொட்டாலும்
விரும்பி வாங்கா தாருண்டோ??
பொலிவாய் இறைவன் பதம்சேர்ந்து
புனித மடையும் மலர்களுண்டு!
தலையில் சூடும் மங்கையரால்
தகைமை பெற்றும் மகிழ்வதுண்டு!
நிலையில் லாத வாழ்வினிலே
நீத்தார் உடலில் விழுவதுண்டு!
சிலவோ வதங்கி அப்படியே
செடியி னின்றும் உதிர்வதுண்டு!!
முத்தாய்ச் சிரிக்கும் முல்லைமலர் !
மோப்பக் குழையும் அனிச்சமலர் !
கொத்தாய் மலரும் மகிழம்பூ
கொஞ்சு மழகில் ரோசாப்பூ!
தித்திக் குந்தேன் மல்லிப்பூ
சின்னஞ் சிறிய தும்பைப்பூ!
புத்து ணர்ச்சி தரவல்ல
பூக்கள் புவியின் வரமாகும்!
பரிதி முகத்தைக் கண்டவுடன்
பாங்காய் மரையும் இதழ்விரிக்கும் !
இரவு நிலவின் ஒளியினிலே
இனிதா யல்லி யும்மலரும்!
அரிதாய்க் குறிஞ்சி பன்னிரண்டே
ஆண்டு களுக்கோர் முறைபூக்கும்!
உரிமை யுடனே உறவாடி
உள்ளம் மலரச் செய்திடுமே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment