Thursday, March 26, 2020

காவடிகள் ஏந்திவந்தோம் ...!!!

Image may contain: one or more people and people on stage

காவடிகள் ஏந்திவந்தோம் கந்தையா - உன்னைக்
கண்குளிரக் காணவந்தோம் கந்தையா !
பூவடிகள் போற்றிடவே புறப்பட்டோம் - உந்தன்
பொன்னொளிரும் முகங்கண்டு பொலிவுற்றோம்!
வேண்டுவரம் தந்திடுவாய் வேலய்யா - எங்கள்
வினையாவும் தீர்த்திடுவாய் வேலய்யா !
தூண்போலே எங்களுக்குத் துணையிருப்பாய் - உள்ளம்
துவளாமல் தாங்கியெங்கள் துயர்துடைப்பாய் !
கால்கடுக்க மலையேறி முருகய்யா - உன்றன்
காட்சியிலே மெய்சிலிர்த்தோம் முருகய்யா
பால்பழங்கள் பக்தியுடன் படைக்கின்றோம் - உண்டு
பசியாறிப் பைந்தமிழைப் பரிசளிப்பாய்!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரய்யா - உன்றன்
கோலமுகம் தெரிகிறதே குமரய்யா !
மின்னுமெழில் பன்னிரண்டு விழிகளினால் - பார்த்து
விரட்டிவரும் பிணிகளையும் விலக்கிடுவாய்!
நீலமயில் மீதினிலே நீவருவாய் - எங்கள்
நெஞ்சத்தின் அழுக்குகளை நீக்கிடுவாய் !
மாலவனின் மருகோனே வடிவேலா! - எங்கள்
மனம்நிறைந்தாய் குறவள்ளி மணவாளா !
அருணகிரி திருப்புகழை அனுதினமும் - பாடி
அடிபணிவோம் அதைக்கேட்டே அருளிடவா!
வருகின்ற நாளெல்லாம் வளமாக - எம்மை
மகிழ்வோடும் நலத்தோடும் வாழவைப்பாய்! !
உமையாளின் திருக்குமரா உனைநினைந்து - நாங்கள்
உருகியுருகிப் பாடிடுவோம் உளம்நெகிந்து !
இமைபோல்நீ காக்கவேண்டும் எமையணைத்து - எங்கள்
எதிர்காலம் உன்கையில் இனிதாக்கு!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment