Monday, March 23, 2020

இசைக்கவியின் பாட்டு ...!!!

மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்துவரும் கவின்நதியாய்
மனமள்ளும் இசைக்கவியின் பாட்டு!
வளமான கவிதைகளு மிவர்குரலி லெழும்போது
மயங்காதோர் யாருமில்லை கேட்டு!
தடையின்றி இளங்காற்று சோலைதனில் உலவுதற்போல்
தமிழ்கொஞ்சி விளையாடும் தோட்டம்!
தமிழ்மணத்தைத் தாம்நுகரத் தணியாத தாகத்தில்
சத்தமின்றி அலைமோதும் கூட்டம்!
முடிவில்லா இறையவனின் திருவருளும் குருவருளும்
முன்னின்றே இவர்புகழைக் கூட்டும் !
முத்தமிழாள் வரம்கிட்ட கண்முன்னே இவர் நடிப்பு
முண்டாசு பாரதியைக் காட்டும் !
படித்ததையும் கேட்டதையும் கண்டதையும் நுகர்ந்ததையும்
பக்குவமாய் நாம்சுவைக்கத் தருவார் !
பாட்டாலே உளங்கவர்ந்து பனிமழையில் நனையவிட்டு
பரவசத்தில் திளைக்கவைத்து மகிழ்வார்!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment