Monday, March 23, 2020

பால்நிலவொளியில் ....!!!

பால்நில வொளியில் பாவையின் அழகைப்
பைந்தமிழ்ப் பாடலில் வடித்தேன்!
சேல்விழி யாளின் தேன்குரல் கேட்டுச்
சிலிர்ப்பினில் தேகமும் வியர்த்தேன் !
நூலிடை வளைவு மின்னலாய்த் தோன்ற
நூதன அழகினை வியந்தேன்!
கால்களில் வெள்ளிக் கொலுசுகள் சிணுங்கக்
கவிதையில் சந்தமாய் வரித்தேன் !!
கார்க்குழ லாடக் கைவளை கொஞ்சக்
கண்களும் பேசிடும் மாயம்!
பார்வையில் கோடி மின்னல்கள் பூக்கப்
பாவையின் விழிசெயும் காயம் !
ஆர்த்திடும் மணியின் இன்னிசை போலும்
அவள்மொழி நரம்பினில் பாயும் !
சீர்மிகு கோலம் கண்டதும் நெஞ்சம்
திங்களோ இவளென ஆயும் !!
மெல்லிய விரல்கள் யாழினை வருடி
மீட்டிடும் அழகினைக் கண்டேன் !
முல்லையின் விரிப்பாய் இதழ்களில் சிரிப்பில்
முத்துகள் ஒளிர்ந்திடக் கண்டேன் !
வில்லென வளைந்த புருவங்க ளிரண்டும்
வெட்கத்தில் நெளிவதைக் கண்டேன் !
நல்லித யத்தாள் காதலைப் பெற்றால்
நலத்துடன் வாழவைப் பேனே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment