Sunday, March 29, 2020

அன்னை அந்தாதி ....!!!

Image may contain: indoor

உனையலா லிங்கெமக் குற்றதுணை யில்லை
நினைந்துருகி யன்பில் நெகிழ்ந்தேன் - வினைசூழ்
உலகினைக் காக்க உளங்கனிந் திங்கே
மலர்ந்த முகத்துடன் வா . 1
வந்தெம் துயர்துடைத்து வாழ வழிகாட்டு
சிந்தை தெளிவித்துச் சீராக்கு - கந்தனின்
அன்னையே தூயவளே ஆதிபரா சக்தியே
என்றும் கதிநீ இனி. 2
இனியவளே உன்னை இசைத்தமிழால் போற்றித்
தனியாய்ப் பிதற்றுகிறேன் தாயே - பனியாய்
உருகி யிடர்கழுவி யூக்கந் தரவே
அருகிருப் பாயா வமர்ந்து . 3
அமர்ந்திருக்கும் கோவில் அடைத்துவிட் டேயாம்
அமைதியைத் தேடி அலைந்தோம் - உமையே
இமவான் மகளே இதமாய் அணைத்தே
இமைபோலும் காப்பாய் எமை. 4
எமைபாதிக் குந்தொற்றை ஈவிரக்க மின்றி
இமைப்போதில் தாக்கி யெரிப்பாய் - நமனை
விரட்டும் வழியை விரைந்தெமக்குச் சொல்ல
மரகதமே ஓடிவரு வாய் . 5
வாய்த்தநல் வாழ்வு வரமாய்நீ தந்ததன்றோ
பேய்த்தன மாய்ப்பரவும் பீதியால் - தேய்ந்துளம்
நோகின்றோம் அம்மம்மா நொந்தது போதுமே
சாகுமச் சத்தைத் தடு . 6
தடுத்தாட் கொளமறுத்தால் தாயேயென் செய்வோம்
நடுக்கத்தி லேயுழன்று நைந்தோம் - இடுக்கண்
களைந்தெம் உயிர்களைக் காசினியில் காக்க
வளைகுலுங்க சிம்மத்தில் வா . 7
வாரா திருந்தால் வருந்தி அழைத்திடுவேன்
தீராதோ அல்லலெனத் தேம்பிடுவேன் - பாரா
முகமாய் இருந்திடிலோ முத்தமிழில் பாடி
அகங்குளிர வைப்பேன் அணை . 8
அணைப்பில் அடங்கிடும் ஆட்டிப் படைத்த
பிணியும் விலகிப் பிரியும் - அணிந்தநின்
வேப்பிலை யாடையால் மேனி சிலிர்த்திடும்
காப்புநீ யென்றாடும் கண்டு . 9
கண்டதும் தாரையாய்க் கண்ணீர்ப் பெருக்கெடுக்கும்
வண்ண மலர்தூவி வாழ்த்துமுளம் - பொன்னொளியே
கள்ளங் கபடமிலாக் கன்னல் மொழியாளே
உள்ளத்தில் வைத்தே னுனை. 10
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment