Thursday, March 26, 2020

வண்ணப் பாடல் ...காதல் ...!!!

Image may contain: 1 person

தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன தனதானா ( அரையடிக்கு )
இருவிழி களுமவன் வரவினை நாடிட
மதுநிறை மலரென மனமது காதலில்
எழுதிய கவிதையை இசையொடு பாடிட நினைவானோ!
இளகிய இதயமு மவனுட னோடிட
நதியினி லலையென நடமிடு மோவிய
மெனவவ ளிடைவளை வினிலொரு தாளமு மிடுவானோ?
அருகினில் நகையுட னவன்வர நாணமும்
பரிதிமுன் இருளென விலகிடு மேயதி
லவள்முக மலைகளில் மரையென வேமிக அழகோடே!
அமுதென வவள்மொழி பருகிய வேளையில்
இடியொடு கருமுகி லெழிலொடு கூடிட
அடைமழை வருவதை மயிலத னாடலில் உணராரோ?
வருடிய நிலவொளி நிழலினி லேகணை
விடுமவன் விழிகளி னுறவினி லேயிள
வளியொடு குலவிய நறுமலர் போலவ ளசைவாளோ ?
வடிவொடு பெருகிய கவிதையி லேமலை
அருவியி னிசையுட னினிமையி லேமன
மலர்வினி லிருவரி னிதழ்களும் பேசிட இசைவாளோ ?
உருகிடு மெழுகதன் நிலையினி லேயவர்
இதயமும் நெகிழ்வினில் நனைகிற தேயிதை
உயிருள வரையிலு மிவர்மற வாரென அறிவோமே!
உரிமையில் உறவென விழைவது மோர்சுகம்
பரிவொடு தருவதும் பெறுவது மோர்சுகம்
உலகினி லிணையுடன் வலம்வரும் நாளினில் மகிழ்வாரே !!
சியாமளா ராஜசேகர்















No comments:

Post a Comment