Monday, March 23, 2020

விஷம் நுரைக்கும் கோப்பைகள் ...!!!


கரையிலா இன்பம் கிடைக்குமென் றெண்ணிக்
கைகளில் கோப்பையை யேந்தி
நுரையொடு மதுவை இதழ்களில் வைத்து
நொடியினில் மாந்திடத் துடிப்பார் !
தரையினில் நில்லார் தடுமாறிச் சாய்வார்
தன்னிலை முற்றிலு மறியார் !
வரைமுறை யின்றிக் குடிப்பத னாலே
வாழ்வினில் மதிப்பினை யிழப்பார் !!
குழறிடும் பேச்சும் குமட்டிடும் நெடியும்
குடும்பத்தில் சண்டையை வளர்க்கும் !
சழக்குகள் பெருகி வழக்குக ளாகித்
தலைகுனி வெய்திடச் செய்யும் !
பழகிடும் நட்பும் சொந்தமும் கூடப்
பையவே புறக்கணித் திடுவர் !
இழிநிலை யாலே மனநிலை மாறி
இதயமும் சோர்ந்திடு வாரே !
பேய்க்குண மாக மாற்றிடும் குடியால்
பேதையர் மனம்படுந் துயரை
வாய்மொழி யாலே சொல்வதற் கியலா
வாழ்க்கையே போராட்டம் தானே !
நோய்களும் தாக்கி படுக்கையில் கிடந்து
நொந்திடும் போதுளம் வாடும் !
நாய்ப்படும் பாடு தேவையோ என்றும்
நஞ்சினை அருந்திட லாமோ ??
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment