Sunday, March 29, 2020

அலையின் குரல் ...!!!



என்னாச்சோ ஏதாச்சோ
எவரையுமே காணோமே !
இன்றுபோலப் பெருமமைதி
என்றைக்கும் இருந்ததில்லை !
நன்றாய்த்தான் விடிந்ததின்று
நடக்கவரு வோரெங்கே ?
நின்றபடி யெமைரசித்து
நெஞ்சுருகும் மக்களெங்கே ??
எம்பியெம்பிப் பார்க்கின்றேன்
இடையறாது நினைக்கின்றேன் !
தெம்பின்றி மிதந்துவந்து
துவண்டேதான் திரும்புகின்றேன் !
விம்முமென்றன் அலையோசை
விழவிலையோ நும்செவியில் !

நம்பிநானு மலைகின்றேன்
நாளைவரு வீரென்றே!!
தலையொன்றும் காணாமல்
தவிக்கின்றேன் தனிமையிலே !
உலைபொங்கும் சோறுபோலும்
உள்ளந்தான் கொதிக்கின்றேன் !
குலைநடுங்க வைக்குமந்தக்
கொரோனாதான் காரணமோ ?
தொலைந்தோடு மதுவிரைவில்
சுகம்பெறவே விழைகின்றேன் !!
பையவந்து வருடிவிட்டுப்
பதம்நனைக்கத் துடிக்கின்றேன் !
மையலுடன் முத்திடவே
மௌளனத்தி லுறைகின்றேன் !
கையளவு மனமிருந்தும்
கடுகளவும் அன்பிலையோ
வையகத்தில் இதுபோலும்
வரவேண்டாம் ஒருநாளே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment