Tuesday, October 2, 2018

#நாட_உயிர்க்கு_நலம்

#நாட_உயிர்க்கு_நலம் 

காலன் அழைக்கையில் காசும் உதவாது 
கோலம் குலைத்தவன் கொண்டுசெலுங் - காலத்தே 
வீடளிப் பாயென வேலன் மலர்ப்பதம் 
நாட உயிர்க்கு நலம். 

தொல்லைகள் வாழ்வினில் சூழ்ந்திடும் போழ்தினில் 
அல்லல் களைய அருள்புரியும் - தில்லையின் 
ஆட லரசை அகம்நிறை அன்புடன் 
நாட உயிர்க்கு நலம். 

நெஞ்சம் நெகிழ்ந்தன்பாய் நீயே சரணெனத் 
தஞ்ச மடைந்தால் தயவுடன் - அஞ்சேலென்(று) 
ஓடி வருபவனை ஓங்கார மானவனை 
நாட உயிர்க்கு நலம். 

நோயுற் றிருக்கையில் நொந்துமனம் வாடாமல் 
ஆயுளை நீடிக்க அன்றாடம் - தூயவன்பாய்க் 
கூடியொன்றாய்ச் செய்திடும் கூட்டுப் பிரார்த்தனை 
நாட உயிர்க்கு நலம். 

குருதி வழிந்தோடக் குற்றுயி ராகத் 
தெருவில் கிடப்போனைத் தேற்றப் - பரிவுடன் 
ஓடிப்போய்த் தூக்கி உடனே மருத்துவரை 
நாட உயிர்க்கு நலம் . 

விரும்பி மணமுடித்து வீடுவந்து தன்னுள் 
கருசுமக்கும் மங்கையைக் காப்பீர்! -நொருங்கியவள் 
வாட விடமான வார்த்தையுமி ழாமலன்பாய் 
நாட உயிர்க்கு நலம். 

( ஈற்றடிக்கு வெண்பா ) 

No comments:

Post a Comment