Tuesday, October 2, 2018

பட் என்று தொடங்கி படார் என்று முடியும் பாக்கள்!!

பட் என்று தொடங்கி படார் என்று முடியும் பாக்கள்!! 

பட்டுடல் தீண்டிய பாதகர் பேயுடலை 
வெட்டிப் புதைத்து விடவேண்டும்! - வட்டமிட்(டு) 
ஆவியா யென்று மலையட்டு மிவ்வுலகில் 
பாவியர்மன் னிக்கப் படார். 

பட்டணத்து வீதியில் பஞ்சுமிட்டாய்த் தின்றபடி 
கட்டியவன் கையோடு கைசேர்த்துச் - சிட்டாக 
ஊர்க்கதை கள்பேசி ஒட்டி நடந்தாலும் 
பார்ப்போரால் சீண்டப் படார். 

பட்டுணர்ந்த தாலே பரிவுடன் மூத்தோரும் 
எட்டும் வரையில் எடுத்துரைப்பார் - திட்டிடினும் 
குட்டிடினும் உள்ளத்தில் குன்றாத அன்புடையோர் 
பட்டென்று கோபப் படார். 

பட்டாடை கட்டிய பாவையின் கார்க்குழலும் 
பொட்டிட்ட பொன்முகத்தில் புன்னகையும் - கட்டோடு 
காவியையும் ஈர்த்துவிடும் காரணத்தால் மூழ்கிவிட்டப் 
பாவியரும் மீட்கப் படார். 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment