Monday, October 8, 2018

தமிழா உடனே விழி .....!!!

தமிழா உடனே விழி ...!!!
********************************
தமிழனென்று  சொல்லடா 
     தலைநி மிர்ந்து நில்லடா!
அமுத மொழியைக் கேட்டதும் 
    அகமும் சிலிர்க்கு தல்லவா ?
கமழு மலரி ருக்கையில் 
     காகி தப்பூ தேவையோ ?
நமது தமிழி னிக்கையில் 
     நஞ்சைக் கலத்தல் நியாயமோ ?

படிக்க எளிய செம்மொழி 
     பாரிற் சிறந்த இன்மொழி 
தடைகள் தாண்டி வந்திடு
     தமிழைத் தாயாய் மதித்திடு !
அடச்சீ நம்மை ஆங்கிலம் 
     அடிமை யாக்கி யாள்வதா ?
உடனே விழித்துக் கொள்ளடா
     உலகைத் தமிழால் வெல்லடா !

கொடுமை கண்டு பொங்கிடு 
     கொள்கை யோடு வாழ்ந்திடு !
மடமை தன்னை மாற்றிட 
     மரபின் பெருமை காத்திடு !
திடமும் துணிவும் கொண்டுநீ 
      திறத்தை வளர்த்துக் கொள்ளடா !
கடமை யாற்றி உயர்ந்திடு 
     கர்ம வீரன் வழியிலே !

உழைக்கும் வருக்கம் மேம்பட 
     உரிமைக் குரலை எழுப்படா !
அழிவி லிருந்து காத்திடா 
     அரசால் என்ன பயனடா ?
உழவர் நிலையும்  தாழ்ந்திடில் 
     உணவுக் கென்ன செய்குவோம் !
விழிப்பு டன்நீ செயல்பட 
      வீறு கொண்டு எழுந்திடு !

மதுவில் மயங்கிக் கிடந்திடில் 
     வாழ்வு நரக மாகிடும் !
மதங்கள் என்ற போர்வையில் 
     மதம் பிடித்துத்  திரிவதா ?
வதைக்கும் வெறியை உதறிடு 
      மனித நேயம் காத்திடு !
புதிய பாதை வகுத்திடு 
      புனித னாக வாழ்ந்திடு !

இயற்கை நமக்கு வரமடா 
     இதனை நினைவில் வையடா 
இயைந்து வாழப் பழகடா 
     இலையேல் நாசம் நமக்கடா 
முயன்றால் வானும் வசப்படும் 
     முன்னோர் வார்த்தை பலமடா !
தயக்க மென்ன சொல்லடா 
      தமிழா விழித்துக் கொள்ளடா !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment