Tuesday, October 2, 2018

குறுந்தொகை காட்டும் காதல் வாழ்வு ....!!!



மட்டிலாக் களிப்பில் திருமணம் முடிந்து 
***மணமகள் இல்லறம் புகுந்தாள் ! 
கட்டிய காதல் கணவனுக் காக 
***கருத்துடன் சமைத்திட லானாள் ! 
கட்டித்த யிரினை விரல்களால் பிசைந்து 
***கைகளைச் சேலையில் துடைத்தாள் ! 
ஒட்டிய கரியைப் பொருட்படுத் தாமல் 
***உணவினைத் தலைவனுக் களித்தாள் !! 

முதல்முத லாக அடுக்களை சென்று 
***முயன்றிட ஆவலில் துடித்தாள் ! 
விதவித மாகச் செய்திட நினைத்தும் 
***விறகடுப் பெரித்திட அறியாள் ! 
புதியவள் தம்மின் குவளை விழிகளும் 
***புகையினால் எரிந்திடக் கசிந்தாள் ! 
பதியுடைப் பாசம் பெரிதெனக் கருதிப் 
***பக்குவப் பட்டிட லானாள் ! 

அன்புடை நெஞ்சம் கலந்தத னாலே 
***அகமகிழ்ந் தவள்பரி மாற 
இன்முகத் தோடே உண்டவன் சுவையோ 
***இனிதெனச் சொல்லிட மலர்ந்தாள் ! 
நன்றெனச் சொன்ன மன்னவன் மொழியில் 
***நங்கைதன் இதயமும் நெகிழ்ந்தாள் ! 
குன்றென வுயர்ந்த காதலைச் சிறப்பாய்க் 
***குறுந்தொகை காட்டிய தழகே !! 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment