Monday, October 8, 2018

திருமண வாழ்த்து !!

இருமனங்கள் ஒன்றாகி இணைகின்ற இந்நாள்
***இதயத்தில் இன்பவெள்ளம் ஊற்றெடுக்கும் பொன்னாள் !
உருவத்தில் சுந்தரனாம் அர்ஜுனுடன் அன்பாய்
***ஒண்டொடியாள் கிருத்திகாவும் கரம்பற்றும் நன்னாள் !!
பெருமகிழ்வாய்த் தண்டபாணி ஜெயந்தியுடன் வாழ்த்திப்
***பெற்றெடுத்தச் செல்வனுக்கு மணமுடிக்கும் திருநாள்
அருந்தவத்தோர் முன்னின்று வேதங்கள் முழங்க
****சீரோடும் சிறப்போடும் நடக்கின்ற மணநாள் !
குருவருளும் திருவருளும் குடிகொண்டு வாழ்த்தக்
***கூடிவரும் உறவுகளும் கொண்டாடி மகிழத்
திருப்பூட்டு நிகழ்கின்ற திருக்கோலம் காணத்
***திருவீதி வழிதேடித் தேவர்களும் கூட
அருவியென வாழ்த்தொலிகள் ஆர்ப்பரித்தே ஒலிக்க
***அணங்குகளின் குலவையொலி அரங்கெங்கும் நிறைய
திருமணமும் இனிதாகச் சீர்மிகவே நடக்கத்
***தேன்தமிழ்போல் எந்நாளும் நிறைவோடு வாழி !
வருகின்ற நாளெல்லாம் வளமாக வேண்டும்
***வசந்தங்கள் முப்போதும் வரமருள வேண்டும்
அருங்கொடையாய் எழில்மழலை மடிதவழ வேண்டும்
***ஆனந்த யாழ்மீட்டி அகங்குளிர வேண்டும் !
விருப்பமொடு தமிழன்னை அரவணைக்க வேண்டும்
***வேண்டியன யாவும்நும் கைசேர வேண்டும் !
பெருக்கட்டும் இன்பங்கள் இல்வாழ்வில் என்றும்
***பிரியமுடன் வாழ்த்துகிறேன் பல்லாண்டு வாழி !
அன்புடன் 
சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment