Monday, October 8, 2018

தமிழா உடனே விழி ...!!!

தமிழா உடனே விழி ...!!!
********************************

தமிழ னென்று சொல்லடா
தலைநி மிர்ந்து நில்லடா!
அமுத மொழியைக் கேட்டதும்
அகம் சிலிர்க்கு தல்லவா ?
கமழு மலரி ருக்கையில்
காகி தப்பூ தேவையோ ?
நமது தமிழி னிக்கையில்
நஞ்சைக் கலத்தல் நியாயமோ ?
படிக்க எளிய செம்மொழி
பாரிற் சிறந்த இன்மொழி
தடைகள் தாண்டி வந்துநீ
தமிழைத் தாயாய் மதித்திடு !
அடச்சீ நம்மை ஆங்கிலம்
அடிமை யாக்கி யாள்வதா ?
உடன் விழித்துக் கொள்ளடா
உலகைத் தமிழால் வெல்லடா !
கொடுமை கண்டு பொங்கிநீ
கொள்கைக் காகப் போரிடு !
மடமை தன்னை மாற்றிட
மரபின் பெருமை காத்திடு !
திட மனத்தில் துணிவெனும்
திறன் வளர்த்துக் கொள்ளடா !
கடமை யாற்றி உயர்ந்திடு
கர்ம வீரன் வழியிலே !
உழைக்கும் வருக்கம் மேம்பட
உரிமைக் குரலெ ழுப்படா !
அழிவி லிருந்து காத்திடா
அரசால் என்ன பயனடா ?
உழவர் நிலைமைத் தாழ்ந்திடில்
உணவுக் கென்ன செய்குவோம் !
விழிப்பு டன்நீ செயல்பட
வீறு கொண்டெ ழுந்திடு !
மதுவுக் கடிமை யாகிடில்
வாழ்வு நரக மாகிடும் !
மதங்க ளென்ற போர்வையில்
மதம் பிடித்துத் திரிவதா ?
வதைத்த தெல்லாம் போதுமே
மனித நேயம் காத்திடு !
புதிய பாதை வகுத்துநீ
புனித னாக வாழ்ந்திடு !
இயற்கை நமக்கு வரமடா
இதனை நினைவில் வையடா
இயைந்து வாழப் பழகடா
இலையேல் நாசம் நமக்கடா
முயன்றால் வானும் வசப்படும்
முன்னோர் வார்த்தை பலமடா !
தயக்க மென்ன சொல்லடா
தமிழா! விழித்துக் கொள்ளடா !!!

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment