காவிரியாள் பொங்கிவந்தாள்
***காதலுடன் ஆடி - அவள்
***கனித்தமிழை நாடி -அகக்
***களிப்புடனே கூடி - அந்தக்
***கவினழகைக் கண்பருகக்
***காணுமின்பம் கோடி !!
பூவிரிந்த சோலையிலே
***புகுந்துவிட்டாள் தஞ்சம் - பிறர்
***புரிதலில்தான் வஞ்சம் - இனி
***பொலிவுக்கில்லை பஞ்சம் - நம்
***பொன்னியவள் வருகையிலே
***பூரித்ததே நெஞ்சம் !!
காடுகளைத் தாண்டியவள்
***கடுகிவந்த நேசம் - அந்தக்
***கல்லணையின் வாசம் - மனக்
***கவலையின்றிப் பேசும் - அவள்
***காத்திருந்து பாய்ந்துவந்து
***காட்டிடுவாள் பாசம் !!
ஆடுகின்ற அலைகளிலே
***அயிரைகெண்டை துள்ளும் - அதன்
***அழகுநெஞ்சை அள்ளும் - நுரை
***ஆடைகட்டிச் செல்லும் - நதி
***ஆயிரமாய்க் கதைகள்சொல்லி
***ஆழ்மனத்தைக் கிள்ளும் !!
உருண்டுபுரண்டு வந்ததாலே
***உவகைபொங்கும் உள்ளம் - அவள்
***உருவிலில்லை கள்ளம் - அவள்
***உணர்ச்சிகளில் வெள்ளம் - இங்கு
***உலர்ந்துகாய்ந்த நிலத்திலினி
***உழவர்வாழ்வும் வெல்லும் !!
வருணன்கருணை காட்டியதால்
***வரவிட்டாரோ உன்னை - வரும்
***வழியெங்கிலும் தென்னை - நல்
***மலர்தூவும் புன்னை - இனி
***வளமிகவே செய்திடுவாய்
***வாழ்வில்நீயும் அன்னை !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment