Tuesday, October 2, 2018

காவிரியாள் பொங்கி வந்தாள் ...!!!


காவிரியாள் பொங்கிவந்தாள் 
***காதலுடன் ஆடி - அவள் 
***கனித்தமிழை நாடி -அகக் 
***களிப்புடனே கூடி - அந்தக் 
***கவினழகைக் கண்பருகக் 
***காணுமின்பம் கோடி !! 

பூவிரிந்த சோலையிலே 
***புகுந்துவிட்டாள் தஞ்சம் - பிறர் 
***புரிதலில்தான் வஞ்சம் - இனி 
***பொலிவுக்கில்லை பஞ்சம் - நம் 
***பொன்னியவள் வருகையிலே 
***பூரித்ததே நெஞ்சம் !! 

காடுகளைத் தாண்டியவள் 
***கடுகிவந்த நேசம் - அந்தக் 
***கல்லணையின் வாசம் - மனக் 
***கவலையின்றிப் பேசும் - அவள் 
***காத்திருந்து பாய்ந்துவந்து 
***காட்டிடுவாள் பாசம் !! 

ஆடுகின்ற அலைகளிலே 
***அயிரைகெண்டை துள்ளும் - அதன் 
***அழகுநெஞ்சை அள்ளும் - நுரை 
***ஆடைகட்டிச் செல்லும் - நதி 
***ஆயிரமாய்க் கதைகள்சொல்லி 
***ஆழ்மனத்தைக் கிள்ளும் !! 

உருண்டுபுரண்டு வந்ததாலே 
***உவகைபொங்கும் உள்ளம் - அவள் 
***உருவிலில்லை கள்ளம் - அவள் 
***உணர்ச்சிகளில் வெள்ளம் - இங்கு 
***உலர்ந்துகாய்ந்த நிலத்திலினி 
***உழவர்வாழ்வும் வெல்லும் !! 

வருணன்கருணை காட்டியதால் 
***வரவிட்டாரோ உன்னை - வரும் 
***வழியெங்கிலும் தென்னை - நல் 
***மலர்தூவும் புன்னை - இனி 
***வளமிகவே செய்திடுவாய் 
***வாழ்வில்நீயும் அன்னை !! 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment