Tuesday, October 2, 2018

ஈற்றடிக்கு வெண்பா....!!!

பொன்னந்தி மாலையில் போனவளைக் காணாமல் 
என்னாச்சோ ஏதாச்சோ என்மகளுக்(கு)- என்றபடி 
வாட்டமுற்ற பேதை மனம்பதைத்தாள் அல்லிலவள் 
காட்டுவழி போய்வரக் கண்டு. 

கற்றறிந்தோர் மன்றில் கவினுற ஈற்றடிக்கு 
அற்புதமாய் வெண்பா அளித்திட - நற்றமிழ்ப் 
பற்றோடு பொற்புடன் பாட்டியற்றும் பாவலர்தம் 
சொற்பெருக்கால் பொங்கும் சுழல். 

அயர்வின்றி நாளும் அறுதி வரையில் 
சுயமா யுழைத்தல் சுகமே! - முயற்சியில் 
சற்றும் மனம்தளராத் தன்னம்பிக் கையேயென் 
வெற்றிக்கு நான்போடும் வித்து. 

படமெடுக்கு முன்னைப் படத்தில்கண் டாலே 
நடுங்கிடு வேனன்று நானே! - அட!சும்மா 
நில்லென் னருகில் நெளியாமல் நாகமே! 
செல்ஃபி படமெடுக்கச் சேர்ந்து. 

( கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு வெண்பா)

No comments:

Post a Comment