Wednesday, March 14, 2018

மகளே!!



மலரின் மணமாய் மனத்தி லுறைந்தாய்
நிலவி னொளியாய் நிறைந்தாய் - சலன
மகற்றித் தெளிவு மமைதியுந் தந்தாய் 
மகளே!நீ வாழ்வின் வரம் . 1.
வரமாய்க் கிடைத்த மழலை விருந்தை 
விரும்பிச் சுவைத்து வியந்தேன் ! - கரும்பின் 
இனிப்பாய்ப் பரவ இதயம் குளிரக் 
கனிந்து வனைந்தேன் கவி . 2.
கவியின் கருவாய்க் கமழ்ந்து கலந்தாய் 
தவித்த மனத்தைத் தணித்தாய்! - செவியில் 
குயிலாய் ஒலித்தாய்! குரலால் கவர்ந்தாய்!
உயிரே!நீ தானென் உலகு . 3.
உலகி லுனைவிட வொன்றுமுயர் வில்லை 
மலைத்தேன்நீ யென்றே மலைத்தேன்! - நிலவும் 
குனிந்துனைப் பார்த்துக் கொடுத்தனுப்பும் முத்தம் 
பனித்துளி யாகப் பறந்து. 4.
பறக்கு மியல்பைப் படைத்தவன் தந்தால் 
சிறகு விரித்தழைத்துச் செல்வேன் !- உறங்கும் 
பொழுது மடியிலிட்டுப் பொன்போல்தா லாட்டிப்
பொழிவேன் கவியால் புகழ்ந்து. 5.
புகழில் மயங்கிடாப் புத்தி யுடனே 
மகளே! புவியில் வளர்வாய் !- முகத்தில் 
அறிவொளி வீச அமைதி தவழ 
சிறப்புற வாழ்வாய் தெளிந்து .6.
தெளிந்த மதியொடு தீந்தமிழ் கற்றுக்
களிப்பாய்! அழியாமல் காப்பாய் ! - துளியும் 
தயக்க மிலாதுநம் தாய்மொழி பேணி 
மயக்கம் தவிர்த்து மதி . 7.
மதிப்பொடு நட்பை வரமாய் நினைப்பாய் 
நதிபோல் வளைந்து நகர்வாய் ! - எதிலும் 
பொறுமை யுடனே புரியும் செயலால் 
சிறுமை யொழித்துச் சிதை. 8.
சிதைய விடலாமா செம்மொழிப் பற்றை 
எதையும் துணிவாய் எதிர்கொள் ! - விதைப்பாய் 
மனத்தினு ளன்பை! மடமை தகர்க்க 
முனைந்துநீ செய்து முடி . 9.
முடியுமென்றே நம்பி முயன்றால் முடியும்
விடியல் பிறக்கும் விரைவில் ! - துடிப்பாய்ச்
செயலாற்றி என்றென்றும் திண்மையுடன் நெஞ்சில்
மயலகற்றிக் கொள்கை மலர்த்து. 10.

No comments:

Post a Comment