Wednesday, March 14, 2018

இயற்கை அழகே ....!!!


உதய கதிரும் உலவும் நிலவும்
மிதக்கும் முகிலும் வியப்பே ! - நிதமும்
விழிக்கு விருந்தாய் விளங்கிடும் வானின்
எழிலைப் பருகிட இன்பு .
வயலும் வரப்பும் வருடும் வளியும்
மயக்கும் மலரும் வனப்பே ! - இயற்கை
அளித்த கொடையாம் அருவி அழகில்
களிக்கும் மனமும் கனிந்து.
வளரும் இரவில் மதியின் ஒளியில்
குளத்தில் மலர்ந்த குவளை - உளத்தைக்
கவரும்; பகலில் கமலம் விரிய
உவகை பெருகும் ஒளிர்ந்து .
ஒலிக்கும் கடலில் உருண்டுவிளை யாடிப்
பொலிவாய் அலைகள் புரளும் ! - வலித்த
கணத்தில் நுரைகளைக் கக்கித் திரும்பும்
இணக்க முடனே இனிது .
கருத்த முகில்திரளக் கண்டுமயி லாட
விருந்தாய்த் துளிகள் விழுமே ! - மருட்டும்
மனத்தை நனைத்து மகிழ்வுறச் செய்து
வனப்பைக் கொடுக்கும் மழை .
உயர்ந்த மலைகள் உறைபனி போர்த்தி
மயங்கிக் கிடக்கும் வடிவாய் ! - அயர்ச்சி
விலகும்; அமைதி மிளிர அகமும்
மலர்ந்து சிரிக்கும் வரம் .
அடர்ந்த வனமும் அழகிய ஆறும்
கடலும் விரிவானும் கண்டால் - தொடரும்
இனிமை சுகங்கள் இதயத்தை மீட்டக்
கனியும் இயல்பாய்க் கவி .
(இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment