Tuesday, March 27, 2018

மடமையைக் கொளுத்துவோம் !!!

பெண்மையைப் போற்றிப் பேணிடும் நாட்டில்
***பெருமைகள் குறைவறக் கூடும் ! 
கண்ணிமை போலே காத்திடும் பெண்ணால்
***கவலைகள் தலைதெறித் தோடும் !
திண்மையாய் நாளும் நன்னெறி பேணச்
***செம்மையாய்த் திகழ்ந்திடும் வீடும் !
புண்பட அவளை வார்த்தையால் தைத்தால்
***பொங்கிடு முள்ளமும் வாடும் !!!
வித்தென விளங்கி விருட்சமாய் வளர்த்து
***வெற்றியை வசப்பட வைப்பாள் !
மத்தளம் போலும் அடியிரு பக்கம்
***வாங்கினும் தன்னிலைத் தளராள் !
எத்தனை யிடர்கள் எதிர்ப்படும் போதும்
***இரும்பெனத் தாங்கிடும் மங்கை
சத்தியம் காத்துக் கடமையைச் செய்து
***சாதனை படைத்திடத் துடிப்பாள் !!!
வேதனை வரினும் ஒடிந்துவி டாமல்
***வேரெனத் தாங்குவாள் அவளே !
மாதவ மென்றே மங்கையர் வாழ்வை
***மண்ணிலே மாண்புறச் செய்வோம் !
பேதமே யின்றிச் சமத்துவத் தோடு
***பெண்மையை உலவிட வைப்போம் !
மாதரை இழிவாய் நடத்திடத் துடிக்கும்
***மடமையைக் கொளுத்திடு வோமே ...!!!

No comments:

Post a Comment