Wednesday, March 14, 2018

உன் விழிகளின் மின்னலிலே


பல்லவி
***********
உன் விழிகளின் மின்னலிலே
என் இதயமும் தீப்பிடிக்கும்
உன் மொழிகளின் சுவையினிலே 
என் செவிகளில் தேன்சுரக்கும் ...!!!
அனுபல்லவி
*******************
சோலையில் மலரென நீ யிருந்தால் - உனைச்
சுற்றிடும் வண்டென நான் வருவேன் !
சாலையில் மரமென நீ யிருந்தால் - உனைத்
தழுவிடும் தென்றலாய் நான் வருவேன் ! (உன் விழிகளின் )
சரணம்
************
காதலில் வரும்சுகம் கோடிபெறும் - அதி
காலையில் கனவிலும் தேடிவரும் !
சோதனைத் தாண்டியும் தூதனுப்பும் - உளம்
சொர்க்கமென்றே அதைத்தான் நினைக்கும் ! ( உன் விழிகளில் )
மோகத்தின் சாரளம் திறந்துவிடும் - அதை
மூடிட நாணமும் திரைபோடும் !
தாகத்தில் மன்னவன் உயிர்மெலியும் - அவள்
தஞ்சம் அடைந்ததும் உளம்நனையும் ! ( உன் விழிகளின் )
துடித்திடும் இமைகளுள் நீயிருக்க - மனச்
சுமைகளும் சுகங்களாய் மாறிவிடும் !
கொடியிடை அசைவினைப் பார்த்திருக்க - அதன்
கோலத்தில் கற்பனை ஊற்றெடுக்கும் !! ( உன் விழிகளின் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment